Thursday, April 7, 2011

முருகப்பெருமானின் அறுபடை வீடுகள்-ஐந்தாம்படை வீடு திருத்தணிகை

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப் பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி.


தல வரலாறு:

தேவர்களைத் துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்ய நடந்த பெரும் போரும், வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து, முருகன் கோபம் தணிந்து அமர்ந்த தலம் என்கின்றன புராணங்கள். இதனால் இத்தலம் அமைந்த இடம் தணிகை எனப் பெயர் பெற்றுள்ளது.

தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் என்றும் ஒரு பொருள் உள்ளது. "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அவர்களுக்கு அருள் புரியும் தலம்தான் திருத்தணிகை" என்று இத்தலத்திற்கு இன்னொரு பொருள் சொல்லப்படுகிறது.

மலையின் சிறப்புகள் :

திருத்தணியில் முருகப் பெருமான் மலை மீது எழுந்தருளி அருள் புரிகிறார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன.

வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதால் "பச்சரிசி மலை" என்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக காணப்படுவதால் "பிண்ணாக்கு மலை" என்றும் அழைக்கப்படுகின்றன. மொத்தத்தில், இந்த திருத்தணி மலை அழகு பொங்கி வழியும் மலையாக காட்சித் தருகின்றது. திருப்புகழ் தந்த அருணகிரிநாதர் "அழகுத் திருத்தணிமலை" என்று இந்த மலையை புகழ்கிறார்.

"குமார தீர்த்தம்" என்று அழைக்கப்படும் பெரிய குளம், மலையடிவாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதி "மடம் கிராமம்" என்று அழைக்கப்படுகிறது.

விழாக்கள்:

- இந்தக் கோயிலில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, மாசிக் கிருத்திகை ஆகிய சிறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூக்காவடி, பால்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். .

- வள்ளிமலை சுவாமிகள், இத்தலத்தில் திருப்புகழ் பாராயணம் செய்து கொண்டே மலையேறும் திருப்புகழ் திருப்படித் திருவிழாவை தொடங்கி வைத்தார். இப்போதும் ஆண்டுதோறும் அவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

- சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் (வதம்) செய்த இடம் திருச்செந்தூராகும். கந்த சஷ்டி அன்று அந்த நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலுமே நடத்தப்படுகிறது. ஆனால், திருத்தணியில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. அங்கு, போருக்குப் பின் அமைதி நிலவுவதாக கருதப்படுவதால் சூரசம்ஹாரத்தை நடத்துவதில்லை.

சிறப்புக்கள்:

- இந்தத் தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது. அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றிப் பாடியுள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியது தெரிகிறது.

- சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பு வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சீபுரம் போலவும், மலைகளில் எல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று கூறுகிறார்.

எப்படி செல்வது:

திருத்தணிகை நகருக்கு சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற முக்கிய நகரங்கள் அனைத்திலிருந்தும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment