Saturday, March 31, 2012

ராமர் வழிபாடு... Sri Rama Navami - 2012

ஜெகம் புகழும் ஸ்ரீராமன்!

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை: அறுபதினாயிரம் ஆண்டுகள் பிள்ளை இல்லாமல் தவித்த தசரத மன்னவன், கௌஸல்யா தேவியாரிடத்து ராமனைப் பெற்றார். சாட்சாத் நாராயணனே ராமனாகப் பிறந்தான் என்பது வரலாறு. வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசரதாத்மஜே...(வேதத்தால் அறியப்படும் பரம்பொருளே ராமனாகத் தோன்றினான்) எனும் வரியே இவ்விஷயத்தில் சான்றாகும்.

ஸ்ரீராமன் எதற்காக அவதரித்தான் என்பது குறித்து அழகான விளக்கம் தருகிறார்கள் வைணவப் பெரியோர்கள்; பித்ரு வாக்ய பரிபாலனம் இதுவே ஸ்ரீராம அவதாரத்தின் முக்கிய காரணம் என்கிறார்கள். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை உலகில் நிலைநாட்டுவதே அவதாரத்தின் முக்கிய நோக்கமாம். இல்லையென்றால்... ஒரு தவறும் செய்யாதிருந்தும், 14 ஆண்டுகள் பூழி வெங்கானம் (காடு) நடந்திருப்பானா ?!

தந்தை வரட்டும்; கல்யாணம் முடிக்கலாம்...

இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் பார்ப்போம். தாடகை வதத்தின் பொருட்டு ராமனையும், இலக்குவனையும் அழைத்துச் செல்கிறார் ஸ்ரீவிஸ்வாமித்ர முனிவர். அவர்கள் மிதிலா தேசத்தை அடைந்தபோது, சீதைக்கு சுயம்வர ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்துகொண்டிருக்கிறார் ஜனகர். பெரிய சபையில் சிவ தனுசு வைக்கப்பட்டிருந்தது. அதை நாணேற்றி முறிப்பவருக்கே தன்னுடைய மகள் சீதையை கொடுக்க இருப்பதாக அறிவிக்கிறார் ஜனகர். சிலர் முயற்சி செய்து தோற்ற பிறகு, வில்லை சற்றுப் பார்ததுவிட்டு வரும்படி ராமனிடம் சொல்கிறார் விஸ்வாமித்திரர். வில்லை நன்கு பார் என்று முனிவன் சொன்னதற்கான உட்கருத்தை அறிந்த ராமன், நாணேற்றி சிவதனுசை முறிக்கவும் செய்தான். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த சீதை, மண மாலையோடு ராமனை நெருங்குகிறாள். அப்போது, ராமன் உரைக்கிறான்... வில்லைப் பார் என்றார் விஸ்வாமித்திரர். நான் பார்த்தேன்... அவ்வளவுதான். மற்றபடி இந்த கல்யாணமெல்லாம் என் தகப்பனார் வந்து தீர்மானிக்கவேண்டிய விஷயங்கள். அப்பா வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றான். சீதையை மணக்கும் காலத்திலும் தசரதனது முடிவையே ஸ்ரீராமன் எதிர்நோக்கி இருந்தான் என்றால், அவன் தன் தந்தையின் மீது எவ்வளவு மரியாதை கொண்டிருந்தான் என்பதை நாம் உணரலாம்.

அவ்வளவு ஏன்... ராவண வதம் முடித்து, புஷ்பக விமானத்தில் அமர்ந்து அயோத்தியை நெருங்கும்போது, தனது தந்தையின் ராஜ்ஜிய பூமி வந்துவிட்டது என்றே சீதையிடம் கூறுகிறான்; தன்னுடைய ஊர் என்று சொல்லிக் கொள்ளவில்லை! மனிதனை, விலங்கினத்தில் இருந்து பிரித்துக் காட்டுவது அவனது பண்புகளே. நற்பண்புகளே மனிதனை செதுக்குகின்றன. ஸ்ரீராமனிடம் எதிரிகளும் போற்றும் குணநலன்கள் உண்டு.

தர்மமே வடிவெடுத்து வந்தது!

சீதையை அபகரிக்கத் திட்டம் தீட்டுகிறான் ராவணன். அதற்காக மாயாவியான மாரீசனது உதவியை நாடுகிறான். தனக்கு உதவாவிட்டால் மாரீசனை தீர்த்துவிடுவதாகவும் மிரட்டுகிறான் ராவணன். ஏற்கெனவே, தாடகை வதம் நிகழ்ந்தபோது, ஸ்ரீராமனால் அடித்து விரட்டப்பட்டவனே இந்த மாரீசன். எனவே, சீதையை அபகரிக்கும் திட்டத்தைக் கைவிடும்படி, ராவணனிடம் மன்றாடுகிறான். அப்போது முன்பு ஸ்ரீராமனிடம் அடிபட்டதை நினைவு கூர்ந்தான். ?அவனது உடல் நடுங்கியது. ஆனால் வார்த்தைகள் தெளிவாய் வந்து விழுந்தன. முன்பு ராமன் என்னை அடித்தபோது பிரம்மச்சாரி பிள்ளையாக இருந்தான். அப்போதே அவன், நெருங்க முடியாத திறன் உடையவனாக, தேஜஸ் உடையவனாக இருந்தான். இப்போது ஜனகன் மகளை. சாட்சாத் ஸ்ரீமகாலட்சுமியைக் கைப்பிடித்திருக்கிறான். எனவே, இன்னும் ஒளிமிக்கவனாக; நெருங்க ஒண்ணாத வடிவுடையவனாகத் திகழ்வான் என்றான். அப்ரமேயம் ஹி தத் தேஜா யஸ்யஸா ஜநகாத்மஜா என்பது மாரீசன் வாக்கு. மேலும், தர்மமே வடிவெடுத்தவன் ஸ்ரீராமன் என்பதையும் ராவணனுக்கு உணர்த்தத் தவறவில்லை மாரீசன். ராமோ விக்ரஹவாந் தர்ம; எவ்வளவு உயர்ந்த வாக்கு இது. நம்முடைய நண்பர்களே நம்மைப் பாராட்டத் தயங்குவர். ஆனால், எதிரியான மாரீசனும் ராமனை தர்மமே வடிவெடுத்தான் என்று கொண்டாடுகிறான் என்றால், ஸ்ரீராமன் எத்தகைய பண்பாளன் என்பதை நீங்கள் உணரலாம்.

குணத்தில் தோற்ற விபீஷணன்; வீரத்தில் தோற்ற ராவணன்!

யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: என்று போற்றுகிறான். அதாவது, தனது பராக்கிரமத்தைக் காட்டி எதிரியை வியக்கச் செய்பவன் என்று ஸ்ரீராமனைக் கொண்டாடுகிறான். ராமனின் வீரத்தில் தோற்றான் ராவணன், ராமனின் அழகில் தோற்றாள் சூர்ப்பணகை. ராமனின் குணத்தில் தோற்றான் விபீஷணன். இது, ஸ்ரீராமனின் தனிப் பெருமை அல்லவா ? குகனோடும் ஐவரானோம் என்று படகோட்டி குகனையும் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக்கொண்ட தன்மை... இன்றளவும் நாம் போற்றும் ஸ்ரீராமனின் சிறப்பல்லவா?

புல் பூண்டுக்கும் மோட்சம் தந்தவன்

தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுந்தம் புறப்படும்போது, அயோத்தி வாழ் மக்கள் அனைவரையும் தன்னுடன் மேலுலகத்துக்கு அழைத்துச் சென்றான். அதோடு நில்லாமல் அயோத்தியில் இருந்த செடி, கொடி, புல், பூண்டு முதலியவற்றுக்கும் முக்தியை நல்கினான் எனில், ஸ்ரீராமனின் பெருமையை என்னவென்பது?! பரமசிவனாரும் எப்போதும் தியானித்துக் கொண்டிருப்பது ஸ்ரீராமனைத்தானே! பார்வதிதேவிக்கு அவர் உபதேசித்தது ஸ்ரீராம நாமத்தைத்தானே !

இன்றைக்கும் காசியில் ஒரு நம்பிக்கை உண்டு. எவர் ஒருவர் காசியில் மரித்தாலும், அவர் நற்கதி அடையும் பொருட்டு, அவருடைய செவியில் ஸ்ரீராம தாரக மந்திரத்தை பரம சிவனே உபதேசிக்கிறார் என்பர். எனவேதான் ஸ்ரீநம்மாழ்வாரும் கற்பார் ராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோ என்று போற்றுகிறார். எனவே, நாமும் ஸ்ரீராமநவமி தினத்தில் ஸ்ரீராமனைத் துதித்து இவ்வுலக இன்பங்களை குறைவில்லாமல் பெறுவதோடு மறுமைக்கும் நன்மையைச் சேர்த்துக் கொள்வோம்.

குழந்தை பாக்கியத்துக்கு ராமனிடம் வேண்டுதல்: நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ராமபிரானை மனதில் நினைத்து இந்த பிரார்த்தனையை செய்தால் ராம சகோதரர்களைப்போல் ஒழுக்கமான குழந்தைகள் பிறப்பார்கள் என்பது ஐதீகம். நாராயணீயம் எழுதிய நாராயணபட்டத்திரி என்ற பிரார்த்தனையை எழுதியுள்ளார். இறைவா! தங்களிடம் ராவணவதத்தைக் குறித்து தேவர்கள் வேண்டிக் கொண்டார்கள். கோசலநாட்டில் ரிஷ்யசிருங்க முனிவர் புத்திரபேறுக்கான வேள்வியை செய்தார். தசரத மன்னரிடம் பாயாசம் கொடுக்கப்பட்டது. அதை அருந்தியதால் ஒரே சமயத்தில் தசரத மன்னரின் மூன்று மனைவியரும் கருத்தரித்தனர். பரதனோடும், லட்சுமணனோடும், சத்ருக்கனனோடும் தாங்களே ராமனாக அவதரித்தீர். இறைவா! ராமனாக அவதாரம் செய்த குருவாயூரப்பனாகிய தாங்கள் இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தையும், கவசத்தையும் ஏற்றுக்கொண்டீர்கள். ராவணனோடு சண்டை செய்து அவனுடைய எல்லா தலைகளையும் பிரம்மாஸ்திரத்தால் வெட்டி தள்ளினீர்கள். தீயில் குளித்த தூயவளான சீதையை திரும்பவும் ஏற்றுக் கொண்டீர்கள். வானர கூட்டங்கள் காயம்படாமல் இருந்தன. இறந்த வானரங்களை தேவர்கள் கூட்டம் பிழைக்க வைத்தது. இலங்கையின் மன்னனான விபீஷணனுடனும், பிரிய மனைவியான சீதாதேவியுடனும், அன்புக்குரிய லட்சுமணனுடனும் புஷ்பக விமானத்தில் உங்கள் சொந்த நகரமான அயோத்திக்கு சென்றீர்கள்.(இந்த பிரார்த்தனையை சொன்னால் குழந்தை பேறு மட்டுமின்றி, பால் வளம் பெருகும் என்பதும் ஐதீகம்).

இப்படி பிரார்த்தித்தால் வீட்டுக்கே வருவார் ராமர்: ராமபிரானை பற்றி சதாசிவ பிரம்மேந்திராள் சமஸ்கிருது பாடல் ஒன்று எழுதியுள்ளார். அந்த பாடலின் விளக்கத்தை ராமநவமி அன்று படித்தால், ஸ்ரீராமபிரான் நம் இல்லத்திற்கே எழுந்தருளினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த பிரார்த்தனையை மனஉருக்கத்துடன் செய்யுங்கள்.ஏ நாக்கே! ராம என்னும் அமுதத்தை பருகுவாய். ராமன் என்னும் சுவையை பற்றுவாய். பாவங்களின் தொடர்பை அது போக்கும். பலவிதமான பழரசத்தால் அது நிரம்பியது. பிறப்பு, இறப்பு, அச்சம், துன்பம் இவற்றை அது போக்கும். நியமம், ஆகமம் என்னும் எல்லா சாஸ்திரங்களின் சாரமாக இருப்பது ராமநாமமே. ராமனின் நாமமே இந்த உலகை பாதுகாக்கிறது. வெளிவேஷக்காரர்களையும் நல்லவர்களாக மாற்றுகிறது. சுகர், சவுனகர், கவுசிகர் ஆகியோர் தம் வாயால் ராம அமுதத்தை பருகினார்கள். தூயவர்களாகி பரமஹம்சர்களின் ஆஸ்ரமங்களிலேயே அவர்கள் பாடினார்கள். அத்தகைய ராம அமுதத்தை நாங்களும் பருகுகிறோம்.

ராமனுக்குள் அடங்கிய ரமா: சிலர் ஸ்ரீராம ஜெயத்தை வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற வேண்டுதல்களுக்காக எழுதுகின்றனர். இவை நிறைவேறுவது மட்டுமின்றி, அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியை இந்த மந்திரம் தரும். ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது ராமனின் பொருள்.

ராமநவமியன்று ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராமா என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும்; எல்லையற்ற புண்ணியம் கிட்டும். ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல். பிள்ளைப் பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள ரா வும் ம வும் இணைந்து உருவானதே ராம எனும் மந்திரம். இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானாதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக் கூடியது. ரா என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்களெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும் ம என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டு வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர். வால்மீகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதிவிட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் அற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து, அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர். முன்னதாக பிரம்மா நூறு கோடி சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றியதாகவும்; அதை வால்மீகி 24, 000 சுலோகங்களுடன், பல கிளைக் கதைகளைக் கொண்டு 500 சர்க்கங்கள், ஆறு காண்டங்கள் உள்ளதாக எழுதினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ராமபிரான் முடிசூடிக்கொண்டபின் அஸ்வமேத யாகம் செய்தார். அதன்பின் அஸ்வமேத யாகத்தைவிட பத்து மடங்கு பெரிதான வாஜபேயம், நூறு மடங்கு பெரிதான ஸுவர்ணகம், கோஸவம், அதிராத்திகம், அக்னிஷ்டேமம் ஆகிய யாகங்களையும் 16 ஆண்டுகள் செய்தார். இவற்றுக்கு வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கச்யபர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், பரத்வாஜர், துர்வாசர், பார்கவர், வாமனர், மார்கண்டேயர். மவுத்கல்யர். கர்க்கர், சியவனர், சதானந்தர், சுப்ரமர், அகத்தியர், அத்ரி, வால்மீகி போன்ற ரிஷிகளும் முனிவர்களும் துணையிருந்தனர்.

ஸ்ரீ ராமருக்கு விருந்து: பரத்வாஜர் ராமனுக்கு விருந்து படைத்த கட்டத்தைப் பாட்டிகள் பாடும் விதமே அலாதியானது.

வைகுண்டவாசருக்கு வாழை இலை போட்டு
வாழை இலைதன்னை வடக்கே நுனி போட்டு
காட்டுச் சிறு கிழங்கும் கந்த மூலம் பழமும்
தூது விளங்காயுடனே சுண்டைக்காய் பச்சடியும்
அஞ்சு வகைப் பச்சடியும் ஆன நல்ல தாளிதமும்
பத்துவகைப் பச்சடியும் பால் குழம்பும் சர்க்கரையும்
பொறிச்ச பொறி கறியும் பொன்போல் சிறு பருப்பும்
புத்துருக்கு நெய்யும் புனுகு சம்பாப் பாயசமும்
தேங்காயும் சர்க்கரையும், தித்திக்க மோதகமும்
பச்சுன்னு கீரையும் பால் வடியும் மாவடுவும்
வேர்புறத்திலே வெடித்த வேண பலாச்சுளையும்
தார் பழுத்துச் செறிந்த தேனான கதலிகளும்
கொத்தோடு மாம்பழமும் கொம்பிலுள்ள நல்தேனும்
கொய்யாப் பழங்களும் கொடி முந்திரிப் பழமும்
கிச்சிலிப் பழங்களும் கிளுகிளுத்த மாதுளையும்
வெள்ளைக் கடுக்காயும் வெடுக்குன்னு இஞ்சியும்
பச்சை மிளகும் பால் வழியும் களாக்காயும்
நேர்த்தியாய் நெல்லிக்காய் மணமுள்ள மாகாளி
நார்த்தை கடநார்த்தை நறுமண எலுமிச்சை
கடுகு மாங்காயும் கார மிளகாயும்

இப்படி முற்றிலும் அடுக்களைப் பெண்களாகப் பாட்டுச் செய்தவர்கள், போஜனம் முடித்த ராமன், காலும் அலம்பி கனிவாயும் கொப்புளிச்சு ஆசமனம் பண்ணி அவருமங்கே வீற்றிருந்தார் எனும் போது கவிகளாகவும், சாஸ்திர ஆசார சீலைகளாகவும் ஆகி விடுகின்றனர். கையலம்பி வந்ததும் ஜீர்ணம் ஆவதற்காக, ஏலமுடன் சுக்கு எல்லார்க்கும் தாம் கொடுத்தார் என்று மறக்காமல் சொல்வதை, பாட்டிமார் பாஷையிலேயே, பொகு அழகு என்று சிலாகிக்கலாம்.

அப்படி என்ன பேரழகி அவள்?

ராமர் ராவணனைப் போரில் வென்றார். இலங்கை அரசனாக விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டினார். விழா முடிந்ததும் சீதை, லக்ஷ்மணன் இவர்களுடன் வானரங்களையும் அழைத்துக் கொண்டு, இலங்கையை விட்டு புஷ்பக விமானத்தில் புறப்பட்டார். விமானம் கிஷ்கிந்தையை அடைந்தது. விமானத்திலிருந்து ராமர் கீழே இறங்கினார். கிஷ்கிந்தைப் பெண் குரங்குகள் அங்கு ஓடோடி வந்தன. விமானத்தில் தாவி ஏறின. அவற்றுக்குத் தங்கள் கணவரைப் பார்ப்பதற்கும் முன்னால் சீதையைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அப்படி என்ன பேரழகி அவள்? அவளை மீட்பதற்காக எத்தனை பெரிய போர்? என்ற சிந்தனையோடு பார்த்தன. சீதையைச் சுற்றிச் சுற்றி வந்த பெண் குரங்குகள் தங்களுக்குள் பேசிக் கொண்டன; இது என்ன பிரமாத அழகோ? நம்மைப் போல் இவளுக்கு ஒரு வால்கூட இல்லையே!

பெண்களை ஏறிட்டும் பார்க்காதவர்

ராவணனின் படையில் 14 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இவர்கள் தனி ஒருவனாக நின்று ராமன் வெற்றி பெற்றார். ராமனின் வீரதீரத்தை சுவாமி தேசிகன், அஸஹாய ஸூர! அநபாய ஸாஹஸ! என்று போற்றுகிறார். ஜனஸ்தானம் என்ற இடத்தில் இருந்த கரன், தூஷணன் உள்பட ராட்சஷர் அனைவரையும் ராமன்கொன்றார். அவர்களுடன் அகம்பனன் என்ற அசுரன் இருந்தான். நடுக்கம் என்பதே அறியாதவன் என்பது இதன் பொருள். ராமன், தன்னைக் கொன்று விடுவானோ என்று, அவன் கூட நடுங்கினான். உயிருக்குப் பயந்து ராவணன் முன் வந்து நின்றான். ராமன் அசகாய சூரனாக இருக்கிறான். அவன் விடும் பாணங்கள் காட்டுவெள்ளத்தையும் தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டதாக உள்ளன. கரன், தூஷணன் மாண்டு விட்டனர். நான் தப்பி வந்தேன், என்று சொல்லி தலை குனிந்தான். ராவணன் உரக்கச் சிரித்தான். நீ மட்டும் எப்படி தப்பித்தாய்?, என்றான். ராமன், ஏகபத்னி விரதன் என்பதால் அதையே எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். ஒரு பெண்ணைப் போல வேடமிட்டேன். ராமன் என்னை ஏறிட்டும் பார்க்கவில்லை. ஏமாந்து போனான், என்றான்.

கோரிக்கை வைக்க சிறந்த இடம்

ராமர் வாலி மீது மறைந்திருந்து அம்பு விடுத்தார். குற்றுயிராகக் கிடந்த வாலி, மறைந்திருந்து அம்பு தொடுத்தது ராமர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டான். சக்கரவர்த்தி திருமகனான நீ, என் மீது என்ன குற்றம் கண்டு இவ்வாறு செய்தாய்! உன்னிடம் இரக்கம் இல்லாமல் போனது ஏன் என்பது இப்போது தான் புரிகிறது. தாய் போல இருக்கும் சீதையை நீ பிரிந்த காரணத்தால், இப்படி ஒரு துயரத்தைத் தந்து விட்டாயோ! ஏனெனில், அவள் உன்னுடன் இருந்தபோது, அவளுக்கு துன்பம் செய்த காகாசுரனுக்கு கூட வாழ்வு அளித்தாய். ஆனால், ஒரு தவறும் செய்யாத எனக்கு மரணம் கொடுத்தாய்! என்று சொல்லி உயிர் விட்டான். நமது கோரிக்கை சீதாபிராட்டியார் மூலம்தான் நிறைவேறும். எனவே, ராமனிடம் நம் கோரிக்கையை வைப்பதாய் இருந்தால், அதை சீதை மூலமாக வைப்பது உடனடி பலன் தரும்.

கடவுளுக்கே மூச்சளித்தவர்

பகவான் பெரியவரா, பக்தன் பெரியவனா என்றால் பக்தனே பெரியவன் என்கிறார் ராமபிரான். ராமலட்சுமணருக்கு போர்க்களத்தில் இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமான். அதற்கு முன்பும் ஒருமுறை, ராமனுக்கு அவர் உயிரளித்திருக்கிறார். ராவணனின் தம்பி விபீஷணன், ராமனுடன் நட்பு கொள்ள வந்தான். இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவுபார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம் என சுக்ரீவன் உள்ளிட்ட வானரர்கள் கூறினர். ராமனோ, அவனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே இறைவனின் பணி. அந்த தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் ராமன் இருந்தார். இல்லாவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது. இந்த நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினார். பின், எல்லாரும் ராமனின் கருத்தை ஏற்றனர். ஒருவேளை அனுமனும் மறுத்திருந்தால், ராமனுக்கு மூச்சே நின்றிருக்கும். அனுமனின் ஆதரவான பேச்சு ராமனுக்கு மூச்சைத் தந்தது. காரணம், அவர் வாயுவின் பிள்ளை. மூச்சுக்கு பிரதானம் காற்றுதானே!

சீதைக்கும் விசாலாட்சி பெயர்

காசி விஸ்வநாதர் கோயில் அம்பாளை விசாலாட்சி என்பர். அயோத்தியில் வசித்த சீதையையும் விசாலாக்ஷ்யா என்று பெயரிட்டு அழைக்கிறார் வால்மீகி. விசாலமான கண்களை உடையவள் என்று அதற்குப் பொருள். இந்தப் பெயர் வந்த காரணம் தெரியுமா? நாளை ராமனுக்கு பட்டாபிஷேகம். முதல்நாள், அயோத்தியிலுள்ள ரங்கநாதரைத் தரிசிக்க ராமனும், சீதையும் செல்கின்றனர். நாராயணனே ரங்கநாதன், நாராயணனே ராமன். அதாவது அர்ச்சகனும் அவனே, அர்ச்சிக்கப்படுபவனும் அவனே! என்கிற நிலை. தன்னைத் தானே வணங்கச் செல்கிறான் ராமன். மானிடனாகப் பூமியில் பிறந்து விட்டதால், இப்படி ஒரு நாடகத்தை நிகழ்த்துகிறான். இப்படியொரு அரிய காட்சியைக் காணும் பாக்கியம் யாருக்காவது கிடைக்குமா? அது தனக்கு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த சீதை, அவனை இமை கொட்டாமல், விரிந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதனால், அவளுக்கு இந்தப் பெயர் ஏற்பட்டது.

பேர் வைக்கிறதிலே கவனம்!

ராமன், ராம் என்றெல்லாம் பெயர் வைத்தால் பாராட்டலாம். காரணம் ராமன் என்ற சொல்லுக்கு ரமிக்கச் செய்கிறவன், ஆனந்தப்பட செய்பவன், இதயத்தில் ரம்மியமாய் வாசம் செய்யக்கூடியவன் என்று பொருள். ராமனின் எதிரி ராவணன். இதற்கு பிறரை சிரமப்படுத்துபவன், பிறர் மனதை அறுக்கக்கூடியவன் என்று பொருள். ராமன் பெயரை வைக்கலாம். ராவணன் பெயரை வைக்கலாமா? பெயருக்கேற்றாற் போல், குணமும் மாறி விடும். ஜனகர் தந்த வில்லை ஒடிக்க ராமன் எழுந்தவிதம், ஹோம குண்டத்தில் நெய்யை ஊற்றியதும், அக்னி படீரென கொழுந்து விட்டெரியுமே...அப்படி இருந்தது. ஒரு குரங்கு, இலங்கையை துவம்சம் செய்கிறது என்று கேள்விப்பட்ட ராவணன் ஆவேசமாக எழுந்த விதம், மயானத்தில் சிதை எரியும் போது எழுந்த தீயைப் போல இருந்தது என்கிறது ராமாயணம். இனியேனும், குழந்தைகளுக்கு நல்ல பெயர்களைத் தேர்ந்தெடுங்கள்.

சத்தியம் தவறாத உத்தமன்

ராமன் சத்தியசீலன். தன் உயிருக்கு தானே குறித்துக் கொண்ட நாளில் வைகுண்டம் புறப்பட்ட நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வைக் கேளுங்கள். ராவணனால் நாங்கள் சிரமப்படுகிறோம் என தேவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். தேவர்களே! நான் பூமியில் பிறப்பேன். பதினோராயிரம் ஆண்டுகள் வசிப்பேன். அந்த காலகட்டத்தில் ராவணனை அழித்து விடுவேன், கவலையை விடுங்கள், என்றார். அவர் சொன்னபடியே வாழ்ந்தார். 11000ம் ஆண்டின் கடைசி நாள் வந்தது. எமதர்மன் அயோத்தி அரண்மனை வாசலுக்கு வந்து, வாயில் காப்பவனிடம், ராமனைப் பார்க்க வேண்டும், என்றான். ராமன் உடனே அனுமதியளித்தார். ஐயனே! நான் எமன் வந்திருக்கிறேன், இன்றோடு முடிகிறது, கிளம்பலாமா? என்றான். ராமன் நினைத்திருந்தால், எத்தனை வருஷம் வேண்டுமானாலும் தன் ஆயுளை நீட்டித்திருக்கலாம். ஆனால், சத்தியசந்தனான அவர் பேஷாக என கிளம்பி விட்டார்.

முனிவரிடம் கோபித்த ராமன்

திருமால், ராமாவதாரம் எடுத்ததன் நோக்கமே, ரிஷிகளுக்கு தரிசனம் அளிக்கத்தான். அதனால் தான் அவர் காட்டுக்கே போகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார். அந்த முனிவர்களிலும் ஒருவர் ராமனை டென்ஷனாக்கி விட்டார். சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட பரிவு கொண்டு, இன்று போய் நாளை வா என்றவர், பிதுர் கர்மம் தொடர்பாக தவறாகப் பேசிய ஜாபாலி ரிஷி மீது கோபம் கொண்டார். ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? என்றார். அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? ஒருவர் மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது... என்றார். இதைக் கேட்டு ராமனுக்கு கண்கள் சிவந்து உதடுகள் துடித்தன. மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாகப் பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம், என்று கடிந்து பேசினார். ஜாபாலி நடுங்கி விட்டார். அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால் தெள்ளத்தெளிவாக இந்த வார்த்தைகள் வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக்கொள்ளாதே, என்றார். ராமன் சமாதானம் ஆனார்.

தாய்லாந்தில் வித்தியாசமான ராமாயணம்: கம்பராமாயணத்திலும், வால்மீகி ராமாயணத்திலும் ராமதூதன் அனுமானை பிரம்மச்சாரியாக பார்த்திருக்கிறோம். ஆனால், தாய்லாந்து நாட்டில் அவரைத் திருமணமானவராக கூறுகிறார்கள். அந்நாட்டை ஆண்ட நான்காம் ராமன் ராமகியான்என்ற பெயரில் ராமாயணம் எழுதியுள்ளார். அதில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் புதுமையாக இருக்கிறது.சிவலோகத்தில் வாழ்ந்த புஸ்மலி என்பவள், ஒரு சாபத்தால் லவா என்ற நாடாண்ட மன்னன் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு சுவர்ணமாலி என்ற தங்கை இருந்தாள். பெண்ணாசை கொண்ட ராவணன் அவர்களைக் கடத்தினான். அவன் உறங்கும் சமயத்தில், அவனிடமிருந்த சுரங்கப்பாதை சாவியைத் திருடிய சகோதரிகள், அந்தப் பாதைவழியே தப்பி தங்கள் நாட்டுக்கு சென்றனர். அவர்களை கற்பிழந்தவர்கள் என சந்தேகித்த தந்தை, ராமதூதன் ஒருவன் வருவான். அவனால் மட்டுமே உங்களுக்கு விமோசனம் தர முடியும், என சொல்லி விரட்டிவிட்டார். அவர்கள் வெவ்வேறு இடங்களில் தங்கினர். அனுமன் சீதையை தேடி சென்ற போது, ஒரு வீட்டில் புஸ்மலியைப் பார்த்தார். அவளது அழகால் கவரப்பட்ட அவர், தன் காதலை வெளிப்படுத்தினார். அவள் ஏற்க மறுத்தாள், தான் கண்ணியத்துக்குரிய ராமபிரானின் தூதர் என்பதையும், அவர் சீதாவுக்காக தன்னிடம் தந்திருந்த மோதிரத்தையும் அவளிடம் காட்டியதும், அவள் மகிழ்ந்தாள். ராமதூதனே தனக்கு விமோசனம் தர முடியும் என்பதை அறிந்த அவள் அவரைத் திருமணம் செய்து கொண்டாள். தன் தங்கையைத் தேடிப்பிடித்து அவளையும் திருமணம் செய்ய வேண்டினாள். அனுமன் அவளைக் கண்டு பிடித்து திருமணம் செய்து கொண்டார். அவளிடம் இருந்த சுரங்கச்சாவியைக் கொண்டே அனுமன் ராவணனின் கோட்டைக்குள் எளிதாக புகுந்தார்.

திருப்புட்குழி விஜயராகவன்

பெற்றெடுத்த தந்தைக்கே ஈமச்சடங்குகளைச் செய்ய பலபேர் இன்று தயங்கிறபோது, பறவையான ஜடாயுவை தன் தந்தையாகவே பாவித்து, அந்திம க்ரியைகளைச் செய்தான் ராமன். இன்றைக்கும் காஞ்சிபுரம் அருகில், திருப்புட்குழி தலத்தில், ஜடாயு மகாராஜாவுக்கு ஈமச்சடங்குகள் செய்தவனாக, ஸ்ரீவிஜயராகவனாக தரிசனம் தந்தருள்கிறான் ஸ்ரீராமன். எண்ணிறந்த குணநலன்கள் ஸ்ரீராமனிடம் இருந்தாலும், அடுத்தவரது துன்பத்தை, தனது கஷ்டமாகக் கருதி, அவற்றைத் தீர்க்க முற்படுவது, ஸ்ரீராமனின் தலையாய பண்பாகும். வ்யஸநேஷூ மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி து:க்கித: என்ற பிரமாணத்தின் மூலம் இதை நாம் அறியலாம். அடுத்தவர் நலனை கருத்தில்கொண்டு, அத்தனை துன்பங்களையும் தானே எவனொருவன் ஏற்றுக் கொள்கிறானோ, அவனையே உத்தமன் எனப் போற்றுகிறோம். எனவேதான் ஸ்ரீராமன் தான் முடிசூட்டிக் கொள்ளாமல், கொடிய கானகம் சென்றான். தன் உடன்பிறவாத் தம்பிகளான சுக்ரீவனுக்கும் விபீஷணனுக்கும் முடிசூட்டிய பிறகே, தனது முடிசூட்டு விழா நடைபெற வேண்டும் என்பது ராமனின் அபிப்பிராயமாம். ஆகவேதான், முதல் தடவை பட்டாபிஷேகம் தடைப்பட்டது. விபீஷணனுக்கு முடிசூட்டிய பிறகு, தான் செய்யவேண்டியதை செய்து முடித்ததாக திருப்தி கொண்டானாம். சீதையைப் பிரிந்து துன்பக் கடலில் மூழ்கியிருந்தபோதிலும், விபீஷணன் முடிசூட்டிக் கொண்டதும், மகிழ்ச்சியில் திளைத்தானாம் !

ஜடாயு குண்டம்: வைதீஸ்வரன் கோயிலில் ஜடாயு குண்டம் எனும் பகுதி உள்ளது. இங்குதான் ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் தகனக் கிரியை செய்தார் என்பது நம்பிக்கை. புல் என்றால், ஜடாயு; ரிக் வேதம்; வேள் முருகன் இந்த மூவரும் வழிபட்டதால் இந்தத் தலத்தை புள்ளிருக்கு வேளூர் என்றும் போற்றுவர். ஜடாயு குண்டத்துக்கு எதிரில் ஸ்ரீராமன், லட்சுமணன் முதலானோரின் திருவுருவங்களையும் தரிசிக்கலாம். இந்தக் குண்டத்தில் இருக்கும் சாம்பலைச் சேகரித்து நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.

வினைகள் தீர்க்கும் வீரராகவர்: சென்னையில் இருந்து சுமார் 47 கி.மீ. தூரத்தில் உள்ளது திருவள்ளூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் ஸ்ரீவீரராகவர் எனும் திருநாமத்துடன், பாம்பணையில் பள்ளி கொண்ட கோலத்தில் சேவை சாதிக்கிறார். நாபிக்கமல பிரம்மனுக்கு இடக்கையால் பிரணவ தத்துவத்தை உபதேசித்தவாறும், வலக் கரத்தை சாலிஹோத்ர முனிவரின் சிரசில் வைத்து அபயப் பிரதானம் செய்தவாறும் காட்சி தருவது விசேஷம்.

தசரதன் அருள்பெற்ற திருப்புல்லாணி: பூரி ஜெகந்நாதருக்கும் முற்பட்டவர் திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதர்; இவர், 72 சதுர் யுகங்களுக்கு முன் தோன்றியவராம் ! திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்தத் தலம், ராமேஸ்வரத்துக்கு அருகில், சேதுக்கரையிலிருந்து வடக்கே, சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே, ஆதிஜெகந்நாதர் நித்யவாசம் செய்த அரசமரத்தைத் தரிசிக்கலாம். புல்லவர், கண்ணுவர், காலவர் ஆகிய முனிவர்களுக்குத் தங்கமயமான அச்வத்த மரமாகக் காட்சி தந்தாராம் பெருமாள். இவர்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கேயே கோயில் கொண்டாராம். அதுமட்டுமா? நான்கு வேதங்களும் உனக்கு நான்கு பிள்ளைகளாகப் பிறக்கும் என்று தசரதன் அருள்பெற்றதும், சீதையைத் தேடிவந்த ஸ்ரீராமருக்குவில் அருளப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்!

வில் ஊன்றிய தலம்: ராமேஸ்வரத்துக்கு அருகில் வில்லூண்டி எனும் தலம் உண்டு. சீதாதேவியின் தாகம் தணிக்க, ஸ்ரீராமன் தரையில் தனது வில்லை ஊன்றி, நன்னீர் பெற்ற திருத்தலம் இது. வில் ஊன்றி என்பதே நாளடைவில் வில்லூண்டி என மருவியதாகச் சொல்கிறார்கள். அருகில் கடல் இருக்க, இந்த இடத்தில் மட்டும் நன்னீர் கிடைப்பது அற்புதமே !

ஸ்ரீராம தீர்த்தம்: ஆந்திர மாநிலம் விஜய நகரத்திலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது ராம தீர்த்தம் எனும் தலம். இங்கு கருவறையில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் காட்சி தருகிறார் ஸ்ரீராமன். ஆனால் அனுமன் இல்லை. ஸ்ரீராமன் அனுமனைச் சந்திப்பதற்கு முந்தைய நிலை இது என்கிறார்கள்.

சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராம சங்கு சக்கரத்துடன் ஸ்ரீராமன்: ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற கோயில்களில், பத்ராசலம் ஸ்ரீராமன் ஆலயமும் ஒன்று. தண்டகாரண்யத்தில், மகாமேரு முனிவரின் மகளான பத்ரா என்பவள், தவம் செய்து அருள் பெற்ற தலம் இது. அரசு பணத்தைச் செலவழித்துக் கோயில் கட்டினார் என்பதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார் பத்ராசலம் ராமதாஸர். அவரைக் காப்பாற்றும்பொருட்டு, தப்பி லட்சுமணனுடன் வந்து, அந்த தேசத்தை ஆண்ட நவாப்பிடம் கோயில் கட்டியதற்கான தொகையை ஒப்படைத்து ஸ்ரீராமன் அருளாடல் புரிந்த தலம்! நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி, பத்ராசலம் ஸ்ரீராமர், திகழ்வது அற்புதம்!

ராமரின் புகழ்பாடுவோம்

ராமாயணம் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள், சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவதார புருஷனாக விளங்கிய ராமபிரானுக்கு தனிக்கோயில்கள் அமைத்து மூலவராக ராமரை வைத்து வழிபடும் பழக்கம் தஞ்சை நாயக்க மன்னர் காலத்தில் பிரபலமான பழக்கமாகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட தலங்களுள் ஏழு தலங்களை சப்தராம ÷க்ஷத்திரங்கள் என்று சொல்வார்கள். தஞ்சையை சோழர் காலத்துக்குப் பின்னால் அரசு புரிந்த பரம்பரை ஒன்று உண்டு. அதை தஞ்சை நாயக்கர் பரம்பரை என்பார்கள். தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களில் செவ்வப்ப நாயக்கர், அச்சு தப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் என்ற மூன்று மன்னர்கள் சிறப்பிடம் பெறுபவர்கள். இம்மூன்று மன்னர்களுக்கும் அமைச்சராக இருந்தவர் கோவிந்த தீட்சிதர். அவரே தென்னாட்டில் ராமர் கோயில்கள் தனியாக அமைய பெரிதும் வழி செய்தவர். கோவிந்த தீட்சிதர் காலத்துக்கு சற்று முன்னாக காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது ஆச்சாரியராக இருந்தார் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் நாம ஜபத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார். கலியுகத்தில் பகவான் நாமாவை உச்சரிப்பதன் மூலம், அதாவது தெய்வத் திருப்பெயரை உள்ளன்புடன் ஓதுவதன்மூலம் எளிதில் மோச்சமடையலாம் என்பது இவர் பரப்பிய கொள்கை. எனவே, இவரை பகவான் நாமபோதேந்திரர் என்று மக்கள் போற்றி அழைக்களானார்கள். இவர் காலத்தில் நாமசித்தாந்தமும், பஜனை மார்க்கமும் பெரும்புகழ் பெற்றமையால் இந்த நாளில் பஜனைகள் செய்யும் பாகவதர்கள் அதன் ஆரம்பத்தில் நாமபோதரை துதித்துவிட்டுத்தான் தொடங்குவார்கள்.

நாமசித்தாந்தம் பெரும் புயலாக புறப்பட்ட அந்த நேரத்தில் ராமநாமாவின் பெருமையை விளக்கும் ராமநாம ரசோதயம், ராம நாம சொயனம் முதலிய வடமொழி நூல்கள் உருவாயின. ராமநாமத்தின் பெருமையைப் பரப்பின. ராமநாமத்தை பலநூறு கோடிகள் உச்சரித்து ராமரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் தியாகராஜர். தஞ்சையிலும் திருவையாறிலும் வாழ்ந்த இந்த மகான் பாடிய கீர்த்தனைகள் ஏராளம். இவை ராமநாமத்தின் மேன்மையை பறைசாற்றக்கூடியது. சங்கீதமும் மூர்த்திகளின் அருட்பணி ஒருபுறம் ராமர் வழிபாட்டைப் பரவலாக்க அதற்கு முன்னாலேயே, சீர்காழி அருணாசல கவிராயர் என்பவர் ராம நாடக கீர்த்தனைகளை இயற்றி ராமர் வழிபாட்டைப் பரவலாக்கினார். இவரை தமிழில் கீர்த்தனங்கள் இயக்கிய தமிழிசை மும்மூர்த்திகளில் ஒருவராகச் சொல்வர். இவர் தியாகய்யருக்கு முற்பட்டவர். விஜய நகர அரசர்கள் காலத்திலும், நாயக்கர் மன்னர்கள் காலத்திலும் ஏராளமான கோயில்களில் ராமர் வழிபாடு பிரசித்தம் பெற்றது. மங்களாசாசனம் செய்யப்பட்ட ஏழு ராமர் திருப்பதிகளோடு, வடுவூர், தில்லைவளாகம் போன்ற தலங்களிலும் ராமர் கோயில்கள் பிரசித்தம் அடைந்தன. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் கால கலைப்பணிக்கு எடுத்துக்காட்டாக கும்பகோணத்தில் ராமசாமி கோயில் உருவாயிற்று. அந்தக் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலிப்பதும், அனுமன் வீணாகான அனுமனாக சித்திரிக்கப்பட்டிருப்பதும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று வரிசைகளில் ராமாயணம் முழுமையும் ஓவியங்களாக எழுதப்பட்டிருப்பதும் நாம் கண்டு இன்புற வேண்டிய ஒன்றாகும்.

விந்திய மலையில் ஒரு வியப்பு!

வட இந்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசத்திற்கும் உத்திரப் பிரதேசத்திற்கும் நடுவில் உள்ளது விந்திய மலை. அதிலிருந்து உற்பத்தியாகி ஓடிவரும் மந்தாகினி நதிக்கரையில்தான் ராமாயணகால புண்ணிய ÷க்ஷத்திரமான சித்திரகூடம் அமைந்துள்ளது. வனவாசத்தின்போது, ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் இங்குள்ள காமாக்கிரி மலைமீதுதான் அதிக காலம் தங்கி இருந்தனர். இம்மலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுவதால் இதன்மீது பக்தர்கள் ஏறுவதில்லை கிரிவலம் மட்டுமே வருகிறார்கள். இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் காந்தநாத் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் வட இந்திய பாணியில் செதுக்கப்பட்ட ராமர்-சீதை கருங்கல் சிற்பங்கள் அழகிய பெரிய கண்களுடன் நின்ற நிலையில் உள்ளன.

துளசி ராமாயணம் எழுதிய துளசிதாசருக்கு இந்த காந்தநாத் சுவாமி ராமர்-சீதையாக இருமுறை காட்சி அளித்திருக்கிறார். இங்கிருந்து நான்கு கிலோ-மீட்டர் தூரம் சென்றால் மந்தாகினி நதியின் கிளை நதியான யஸ்வினி நதிக்கரையை அடையலாம். இங்கு தான் ராமர் தினமும் நீராடினாராம். இவ்விடம் ராம்காட் எனப்படுகிறது. இதன் அருகிலேயே ஜானகி குண்ட்(ஜானகி குளம்) உள்ளது. இது சீதை நீராடிய இடம். தொடர்ந்து சென்றால் அடர்ந்த காட்டுப் பகுதியில் அத்திரி மகரிஷி அனுசூயா தம்பதியரின் ஆசிரமம் உள்ளது. அனுசூயாவின் கற்பின் சக்தியால் இந்த ஆசிரமத்திற்கே வந்த மந்தாகினி நதி. அங்கேயே இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. தத்தாத்ரேயரின் புதிய அவதாரத்திற்குக் காரணமான- பிரம்மா, விஷ்ணு, சிவன் குழந்தைகளாக்கப்பட்ட சம்பவம் இங்குதான் நிகழ்ந்தது. இந்த ஆசிரமத்திலிருந்து 18 கிலோமீட்டர் தூரம் சென்றால், உலக அதிசயமாகப் போற்றப்படும் கோதாவரி நதி ஓடும் இரண்டு குகைகளைக் காணலாம். ஒன்று பெரியது. ஒன்று சிறியது. இந்த கோதாவரி யானவள் ராமபிரானின் திருப்பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசி பெற விரும்பி ரகசியமாக வந்து அவரை தரிசித்தாள். இதற்கு அடையாளமாக பெரிய கோதாவரி ஓடும் குகைக்குள் ஒரு மேடையில் ராமர், சீதை, லட்சுமணன் காட்சி தரும் சிலைகள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. ராமநவமியன்று சித்திரகூடப் பகுதியிலுள்ள எல்லா ராமர் கோயில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரை தரிசித்து புண்ணியமும் மற்ற நலன்களும் பெறுகின்றார்கள்.

ராமர் பாதம்

16-17ம் நூற்றாண்டுகளில் மத்திய பிரதேச மாநிலத்தை பண்டேலா அரச பரம்பரையினர் ஆண்டு வந்தனர். அவர்களது ஆட்சியில் ரஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த ருத்ர பிரதாப் என்பவர் தலைமைத் தளபதியாக இருந்தார். அவர் பெட்வா நதிக்கரையில் இயற்கை வளங்கள் சூழ்ந்த வனப்பகுதியைக் கண்டுபிடித்தார். அந்த பூமியை சமன் செய்து, மக்களைக் குடியமர்த்தி கோயில்களையும் அரண்மனைகளையும் கட்டி அந்த இடத்திற்கு அர்ச்சா (மறைந்திருந்த புண்ணிய பூமி) என்று பெயர் வைத்தார். அதோடு பண்டேலா அரச வம்சத்தைச் சேர்ந்த பிர்சிங் ஜுடியோ என்பவரின் இரண்டாவது மகனான டின்மான் ஹார்டுயல் என்பவரை மன்னராக்கி முடி சூட்டினார். தீவிர ராமபக்தரான டின்மான், திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து ஆட்சி நடத்தி வந்தார். ஆனால் இவரது நடத்தையைப்பற்றி சில விஷமிகள் தவறான செய்தி பரப்ப, அதைக் கேட்டு மனமுடைந்த அவர், தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக துறவியாகி பண்டல்கண்ட் என்ற கிராமத்தில் ராமர் பாதங்களை ஸ்தாபித்தார். தினமும் ராமபிரானையே துதித்து, அந்த பாதங்களை வணங்கி, சில ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் பாதத்தின் அருகிலேயே உயிர் நீத்தார். இந்தச் சம்பவம் நடந்ததற்கு ஆதாரமான ராமர் பாதத்தையும், அதன் அருகில் டின்மான் ஹார்டுயல் சிலையையும் காணலாம். இன்னும் அவர் சிலையாகவே இருந்து ராமபிரானை துதித்து வாழ்ந்து வருவதாக நம்பிக்கை. ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீராம நவமியன்று இந்த ராமர் பாதத்துக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் ராமர் பாத தரிசனம் செய்து, பிரார்த்தனை மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்

எம்பெருமானார் அருளிச்செய்தவை

வாழிபரகாலன் வாழிகலிகன்றி,
வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர்மான வேல்.

சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால்,
ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ்,
ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே
சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே.



திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை

2672 ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில்,
ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை
இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள்
இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை
ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில்
அட்டனை, மூவடி நானிலம் வேண்டி,
முப்புரி _லொடு மானுரி யிலங்கும்.
மார்வினில், இருபிறப் பொருமா ணாகி,
ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை,

நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை
ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி
ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள்
இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ

நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில்
அந்தணர் வணங்கும் தன்மையை,ஐம்புலன்
அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி
முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில்
ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர்

அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள்
ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன்
அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை,

ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும்
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர
நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி
ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து
மங்கையர் இருவரும் மலரன, அங்கையில்
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,

நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,
அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால்
μதியை ஆகத் திருத்தினை, அறமுதல்
நான்க வையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து

நின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை
வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி
மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித்
திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக்
கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில்
இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென்
திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன்
வணங்க, ஆடர வமளியில் அறிதுயில்
அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன்
வருமிடர் அகல மாற்றோ வினையே. (2)


திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

பெரிய திருவந்தாதி தனியன்

எம்புருமானார் அருளிச்செய்தது

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.



ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த பெரிய திருவந்தாதி

2585 முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,
இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய
நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்
பூவீன்ற வண்ணன் புகழ் 1

2586 புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம் மற்
றெங்கள் மால். செங்கண் மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள் மால் கண்டாய் இவை. 2

2587 இவையன்றே நல்ல இவையன்றே தீய,
இவையென் றிவையறிவ னேலும்,-இவையெல்லாம்
என்னால் அடைப்புநீக் கொண்ணா திறையவனே,
என்னால் செயற்பால தென்? 3

2588 என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்
றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன
கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்
பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று? 4

2589 பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தைநீ
மற்றையா ராவாரும் நீபேசில், எற்றேயோ
மாய.மா மாயவளை மாயமுலை வாய்வைத்த
நீயம்மா. காட்டும் நெறி. 5

2590 நெறிகாட்டி நீக்குதியோ, நின்பால் கருமா
முறிமேனி காட்டுதியோ, மேனாள்-அறியோமை
எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே, ஈதுரையாய்
எஞ்செய்தா லென்படோம் யாம்? 6

2591 யாமே அருவினையோம் சேயோம், என் நெஞ்சினார்
தாமே யணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார்,-பூமேய
செம்மாதை நின் மார்வில் சேர்வித்து, பாரிடந்த
அம்மா. நின் பாதத் தருகு. 7

2592 அருகும் சுவடும் தெரிவுணரோம், அன்பே
பெருகும் மிகவிதுவென்? பேசீர்,-பருகலாம்
பண்புடையீர்.பாரளந்தீர். பாவியேம்கண் காண்பரிய
_ண்புடையீர் _ம்மை _மக்கு. 8

2593 _மக்கடியோம் என்றென்று நொந்துதுரைத்தென், மாலார்
தமக்கவர்த்தாம் சார்வரிய ரானால்?-எமக்கினி
யாதானு மாகிடுகாண் நெஞ்சே, அவர்த்திறத்தே
யாதானும் சிந்தித் திரு. 9

2594 இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ
டொருநால்வர் μரிருவர் அல்லால், திருமாற்கு
யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே
நாமா மிகவுடையோம் நாழ்?
10

2595 நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,
வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத
பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,
நீரும்நீ யாய்நின்ற நீ. 11

2596 நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றாய்?
போயொன்று சொல்லியென்? போநெஞ்சே,-நீயென்றும்
காழ்த்துபதே சம்தரினும் கைகொள்ளாய், கண்ணன் தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. 12

2597 வழக்கொடு மாறுகொள் அன்றடியார் வேண்ட,
இழக்கவும் காண்டும் இறைவ.-இழபுண்டே,
எம்மாட்கொண் டாகிலும் யான்வேண்ட, என்கண்கள்
தம்மால்காட் டுன்மேனிச் சாய்? 13

2598 சாயால் கரியானை யுள்ளறியா ராய்நெஞ்சே,
பேயார் முலைகொடுத்தார் பேயராய்,-நீயார்போய்த்
தேம்பூண் சுவைத்தூ னறிந்தறிந்தும், தீவினையாம்
பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்து. 14

2599 பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர். 15

2600 சீரால் பிறந்து சிறப்பால் வளராது,
பேர்வாம னாகாக்கால் பேராளா,-மார்பாரப்
புல்கிநீ யுண்டுமிழ்ந்த பூமிநீ ரேற்பரிதே?
சொல்லுநீ யாமறியச் சூழ்ந்து. 16

2601 சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்
வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்
வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,
தாள்வரைவில் லேந்தினார் தாம். 17

2602 தாம்பாலாப் புண்டாலும் அத்தழும்பு தானிளக,
பாம்பாலாப் புண்டுபா டுற்றாலும்,-சோம்பாதிப்
பல்லுருவை யெல்லாம் படர்வித்த வித்தா, உன்
தொல்லுருவை யாரறிவார் சொல்லு? 18

2603 சொல்லில் குறையில்லைச் சூதறியா நெஞ்சமே,
எல்லி பகலென்னா தெப்போதும்,-தொல்லைக் கண்
மாத்தானைக் கெல்லாமோர் ஐவரையே மாறாக,
காத்தானைக் காண்டும்நீ காண். 19

2604 காணப் புகிலறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம்,
நாணப் படுமன்றே நாம்பேசில்?-மாணி
உருவாகிக் கொண்டுலகம் நீரேற்ற சீரான்,
திருவாகம் தீண்டிற்றுச் சென்று. 20

2605 சென்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
இன்றிங்கென் னெஞ்சால் இடுக்குண்ட,-அன்றங்குப்
பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய,
காருருவன் தன் நிமிர்த்த கால் 21

2606 காலே பொதத்திரிந்து கத்துவ ராமினநாள்,
மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே,-மேலால்
தருக்குமிடம் பாட்டினோடும் வல்வினையார் தாம், வீற்
றிருக்குமிடம் காணா திளைத்து. 22

2607 இளைப்பா யிளையாப்பாய் நெஞ்சமே. சொன்னேன்,
இளைக்க நமன்தமர்கள் பற்றி-இளைப்பெய்த
நாய்தந்து மோதாமல் நல்குவான் நல்காப்பான்,
தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். 23

2608 தானே தனித்தோன்றல் தன்னளப்பொன் றில்லாதான்
தானே பிறர்கட்ட்கும் தற்றோன்றல்,-தானே
இளைக்கிற்பார் கீழ்மேலாம் மீண்ட மைப்பானானால்,
அளக்கிற்பார் பாரின் மேல் ஆர்? 24

2609 ஆரானும் ஆதானும் செய்ய, அகலிடத்தை
ஆராய்ந் ததுதிருத்த லாவதே?,-சீரார்
மனத்தலைவன் துன்பத்தை மாற்றினேன், வானோர்
இனத்தலைவன் கண்ணனால் யான். 25

2610 யானுமென் னெஞ்சும் இசைந்தொழிந்தோம், வல்வினையைக்
கானும் மலையும் புகக்கடிவான்,-தானோர்
இருளன்ன மாமேனி எம்மிறையார் தந்த,
அருளென்னும் தண்டால் அடித்து. 26

2611 அடியால் படிகடந்த முத்தோ,அ தன்றேல்
முடியால் விசும்பளந்த முத்தோ,-நெடியாய்.
செறிகழல்கள் தாள்நிமிர்த்துச் சென்றுலக மெல்லாம்,
அறிகிலாமால் நீயளந்த அன்று. 27

2612 அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம்,
இன்றேநாம் காணா திருப்பதுவும்,-என்றேனும்
கட்கண்ணால் காணாத அவ்வுருவை, நெஞ்சென்னும்
உட்கண்ணால் காணு முணர்ந்து. 28

2613 உணர ஒருவர்க் கெளியனே? செவ்வே,
இணரும் துழாயலங்கல் எந்தை,-உணரத்
தனக்கெளிய ரெவ்வளவர் அவ்வளவ னானால்,
எனக்கெளியன் எம்ம்பெருமான் இங்கு. 29

2614 இங்கில்லை பண்டுபோல் வீற்றிருத்தல், என்னுடைய
செங்கண்மால் சீர்க்கும் சிறிதுள்ளம்,-அங்கே
மடியடக்கி நிற்பதனில் வல்வினையார் தாம்,மீண்
டடியெடுப்ப தன்றோ அழகு? 30

2615 அழகு மறிவோமாய் வல்வினையும் தீர்ப்பான்,
நிழலும் அடிதோறும் ஆனோம்,-சுழலக்
குடங்கள்தலை மீதெடுத்துக் கொண்டாடி, அன்றத்
தடங்கடலை மேயார் தமக்கு. 31

2616 தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,
தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று
தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,
யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?
32

2617 யாதானும் ஒன்றறியில் தன்னுகக்கில் என்கொலோ,
யாதானும் நேர்ந்தணுகா வாறுதான்?,-யாதானும்
தேறுமா செய்யா அசுரர்களை, நேமியால்
பாறுபா றாக்கினான் பால். 33

2618 பாலாழி நீகிடக்கும் பண்பை, யாம் கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்,-நீலாழிச்
சோதியாய். ஆதியாய். தொல்வினையெம் பால்கடியும்,
நீதியாய். நிற்சார்ந்து நின்று. 34

2619 நின்றும் இருந்தும் கிடந்தும் திரிதந்தும்,
ஒன்றுமோ ஆற்றானென் னெஞ்சகலான்,-அன்றங்கை
வன்புடையால் பொன்பெயரோன் வாய்தகர்த்து மார் விடந்தான்,
அன்புடைய னன்றே யவன்? 35

2620 அவனாம் இவனாம் உவனாம், மற் றும்பர்
வனாம் அவனென் றிராதே,-அவனாம்
அவனே எனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால்,
அவனே எவனேலும் ஆம். 36

2621 ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?
நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்
மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்
அதுகரமே அன்பால் அமை. 37

2622 அமைக்கும் பொழுதுண்டே யாராயில் நெஞ்சே,
இமைக்கும் பொழுதும் இடைச்சி-குமைத்திறங்கள்,
ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே,
பேசியே போக்காய் பிழை. 38

2623 பிழைக்க முயன்றோமோ நெஞ்சமே. பேசாய்,
தழைக்கும் துழாய்மார்வன் றன்னை,-அழைத்தொருகால்
போயுபகா ரம்பொலியக் கொள்ளாது, அவன் புகழே
வாயுபகா ரம்கொண்ட வாய்ப்பு? 39

2624 வாய்ப்போ இதுவொப்ப மற்றில்லை வாநெஞ்சே,
போய்ப்போஒய் வெந்நரகில் பூவியேல்,-தீப்பால
பேய்த்தாய் உயிர்க்களாய்ப் பாலுண்டு, அவளுயிரை
மாய்த்தானை வாழ்தே வலி. 40

2625 வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்
வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்
பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,
பன்னாளும் நிற்குமிப் பார். 41

2626 பாருண்டான் பாருமிழ்ந்தான் பாரிடந்தான் பாரளந்தான்
பாரிடம் முன்படைத்தா னென்பரால்,-பாரிடம்
ஆவானும் தானானா லாரிடமே?, மற்றொருவர்க்கு
ஆவான் பூகாவால் அவை. 42

2627 அவய மெனநினைந்து வந்தசுரர் பாலே,
நவையை நளிர்விப்பான் றன்னை,-கவையில்
மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ,
மனத்துயரை மாய்க்கும் வகை? 43

2628 வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும்,
மிகவாய்ந்து வீழா எனிலும்,-மிகவாய்ந்து
மாலைத்தாம் வாழ்த்தா திருப்பர் இதுவன்றே,
மேலைத்தாம் செய்யும் வினை? 44

2629 வினையார் தரமுயலும் வெம்மையே யஞ்சி,
தினையாம் சிறிதளவும் செல்ல-நினையாது
வாசகதால் லேத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,
நாயகத்தான் பொன்னடிகள் நான். 45

2630 நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத
மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,
நீகதியா நெஞ்சே. நினை. 46

2631 நினித்திறைஞ்சி மானிடவர் ஒன்றிரப்ப ரென்றே,
நினைத்திடவும் வேண்டாநீ நேரே,-நினைத்திறஞ்ச
எவ்வளவ ரெவ்விடத்தோர் மாலே, அதுதானும்
எவ்வளவு முண்டோ எமக்கு? 47

2632 எமக்கியாம் விண்ணாட்டுக் குச்சமதாம் வீட்டை,
அமைத்திருந்தோம் அதன்றே யாமாறு,-அமைப் பொலிந்த
மென்தோளி காரணமா வெங்கோட்டே றேழுடனே,
கொன்றானை யேமனத்துக் கொண்டு? 48

2633 கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான்
வண்டறாப் பூவதான் மற்றுத்தான்,-கண்டநாள்
காருருவம் காண்தோறும் நெஞ்சோடும், கண்ணனார்
பேருருவென் றெம்மைப் பிரிந்து. 49

2634 பிரிந்தொன்று நோக்காது தம்முடைய பின்னே,
திரிந்துழுலும் சிந்தனையார் தம்மை,-புரிந்தொருகால்
ஆவா. எனவிரங்கார் அந்தோ. வலிதேகொல்,
மாவை பிளந்தார் மனம்? 50

2635 மனவாளும் μரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு? 51

2636 மாண்பாவித் தந்நான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று? 52

2637 ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது, உன்னடியார்க்
கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்? 53

2638 வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ,
கானோ ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா. மருங்கு.
54

2639 மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங்கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு. 55

2640 வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே.
ஒருவா றொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி. 56

2641 வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்? 57

2642 மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு. 58

2643 மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,-ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. 59

2644 பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே, பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை. 60

2645 இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,
மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்
தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்
மீதிலகித் தாங்கிடக்கும் மீன். 61

2646 மீனென்னும் கம்பில் வெறியென்னும் வெள்ளிவேய்
வானென்னும் கேடிலா வான்குடைக்கு,-தானோர்
மணிக்காம்பு போல்நிமிர்ந்து மண்ணளந்தான், நங்கள்
பிணிக்காம் பெருமருந்து பின். 62

2647 பின்துரக்கும் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,
வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே, அன்று
திருச்செய்ய நேமியான் தீயரக்கி மூக்கும்,
பருச்செவியு மீர்ந்த பரன். 63

2648 பரனாம் அவனாதல் பாவிப்ப ராகில்,
உரனா லொருமூன்று போதும்,-மரமேழன்
றெய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே,அமரர்
கைதான் தொழாவே கலந்து? 64

2649 கலந்து நலியும் கடுந்துயரை நெஞ்சே
மலங்க அடித்து மடிப்பான்,-விலங்கல்போல்
தொன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனை,
சொன்மாலை யெப்பொழுதும் சூட்டு. 65

2650 சூட்டாய நேமியான் தொல்லரக்கன் இன்னுயிரை,
மாட்டே துயரிழைத்த மாயவனை,-ஈட்ட
வெறிகொண்ட தண்டுழாய் வேதியனை, நெஞ்சே.
அறிகண்டாய் சொன்னேன் அது. 66

2651 அதுவோநன் ரென்றங் கமருலகோ வேண்டில்,
அதுவோ பொருளில்லை யன்றே?, அதுவொழிந்து
மண்ணிறாள் வேனெனிலும் கூடும் மடநெஞ்சே,
கண்ணன் தாள் வாழ்த்துவதே கல். 67

2652 கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந்தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம். 68

2653 அகம்சிவந்த கண்ணினராய் வல்வினைய ராவார்,
முகம்சிதைவ ராமன்றே முக்கி,-மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்பொதிந்த சிந்தனையேன் றன்னை,
ஆர்க்கடலாம் செவ்வே யடர்த்து? 69

2654 அடர்ப்பொன் முடியானை யாயிரம்பே ரானை,
சுடர்கொள் சுடராழி யானை,-இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுளலே
யாதாகில் யாதே இனி? 70

2655 இனிநின்று நின்பெருமை யானுரைப்ப தென்னே,
தனிநின்ற சார்விலா மூர்த்தி,-பனிநீர்
அகத்துலவு செஞ்சடையான் ஆகத்தான், நான்கு
முகத்தான்நின் உந்தி முதல். 71

2656 முதலாம் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே
முதலாகும் மூன்றுக்கும் மென்பர்-முதல்வா,
நிகரிலகு காருருவா. நின்னகத்த தன்றே,
புகரிலகு தாமரையின் பூ? 72

2657 பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற,
காவி மலரென்றும் காண்தோறும், பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவை
எல்லாம் பிரானுருவே என்று. 73

2658 என்றும் ஒருநாள் ஒழியாமை யானிரந்தால்,
ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,-குன்று
குடையாக ஆகாத்த கோவலனார், நெஞ்சே.
புடைதான் பெரிதே புவி. 74

2659 புவியும் இருவிசும்பும் நினகத்த, நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய்,-அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை என்பதனை யாரறிவார்,
ஊன்பருகு நேமியாய். உள்ளு. 75

2660 உள்ளிலும் உள்ளந் தடிக்கும் வினைப்படலம்,
விள்ள விழித்துன்னை மெய்யுற்றால்,-உள்ள
உலகளவு யானும் உளனாவன் என்கொல்,
உலகளந்த மூர்த்தி. உரை. 76

2661 உரைக்கிலோர் சுற்றத்தார் உற்றாரென் றாரே,
இரைக்குங் கடற்கிடந்த எந்தாய்,-உரைப்பெல்லாம்,
நின்னன்றி மற்றிலேன் கண்டாய், எனதுயிர்க்கோர்
சொல்நன்றி யாகும் துணை. 77

2662 துணைநாள் பெருங்கிளையும் தொல்குலமும், சுற்றத்
திணைநாளு மின்புடைத்தா மேலும், கணைநாணில்
μவாத் தொழில்சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே,
μவாத வூணாக உண். 78

2663 உண்ணாட்டுத் தேசன்றே. ஊழ்வினையை யஞ்சுமே,
விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்
ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்
பேராயற் காளாம் பிறப்பு? 79

2664 பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து, பின்னும்
இறக்கவும் இன்புடைத்தா மேலும்,-மறப்பெல்லாம்
ஏதமே யென்றல்லால் எண்ணுவனே, மண்ணளந்தான்
பாதமே யேத்தாப் பகல்? 80

2665 பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என் றோரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து. 81

2666 தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன், வாளா
இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்
அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை
அம்மானை யேத்தா தயர்ந்து. 82

2667 அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்
உயப்போம் நெறியிதுவே கண்டாய், செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே. அஞ்சினேன்
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து. 83

2668 வாழ்த்தி அவனடியைய்ப் பூப்புனைந்து, நிந்தலையைத்
தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,
எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,
தங்கத்தா னாமேலும் தங்கு. 84

2669 தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,
எங்கேபுக் கெத்தவம்செய் திட்டனகொல்,-பொங்கோதத்
தண்ணம்பால் வேலைவாய்க் கண்வளரும், என்னுடைய
கண்ணன்பால் நன்னிறங்கொள் கார்? 85

2670 கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்,-சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை,
என்நினைந்து போக்குவரிப் போது? 86

2671 இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்
எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்
கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்
மெய்கழலே ஏத்த முயல். 87


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Friday, March 30, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவாசிரியம் தனியன்

அருளாளப் பெருமான் எம்பெருமானாரருளிச் செய்தது

கலிவிருத்தம்

கானியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து,
ஆசிரியப் பாவதனால் அருமறை_ல் விரித்தானை,
தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை,
மாசடையா மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே.



ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாசிரியம்

ஆசிரியப்பா

2578 செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப்
பரிதிசூடி, அஞ்சுடர் மதியம் பூண்டு
பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய்
திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம்
கடலோன் கைமிசைக் கண்வளர் வதுபோல்
பீதக ஆடை முடிபூண் முதலா
மேதகு பல்கலன் அணிந்து, சோதி
வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்
பச்சை மேனி மிகப்ப கைப்ப
நச்சுவினைக் கவர்தலை அரவினமளி யேறி
எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து
சிவனிய னிந்திரன் இவர்முத லனைத்தோர்
தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த
தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக
மூவுல களந்த சேவடி யோயே. (2)1

2579 உலகுபடைத் துண்ட எந்தை, அறைகழல்
சுடர்ப்பூந் தாமரை சூடுதற்கு, அவாவா
ருயிருகி யுக்க,நேரிய காதல்
அன்பி லின்பீன் தேறல், அமுத
வெள்ளத் தானாம் சிறப்புவிட்டு, ஒருபொருட்கு
அசைவோர் அசைக, திருவொடு மருவிய
இயற்கை, மாயாப் பெருவிற லுலகம்
மூன்றி னொடுநல்வீடு பெறினும்,
கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே? 2

2580 குறிப்பில் கொண்டு நெறிப்பட, உலகம்
மூன்றுடன் வணங்கு தோன்றுபுகழ் ஆணை
மெய்பெற நடாய தெய்வம் மூவரில்
முதல்வ னாகி, சுடர்விளங் ககலத்து
வரைபுரை திரைபொர பெருவரை வெருவர,
உருமுரல் ஒலிமலி நளிர்கடற் படவர
வரசுடல் தடவரை சுழற்றிய, தனிமாத்
தெய்வத் தடியவர்க் கினிநாம் ஆளாகவே
இசையுங்கொல், ஊழிதோ று-ழியோ வாதே? 3

2581 ஊழிதோ று-ழி μவாது வாழியே.
என்று யாம்தொழ இசையுங் கொல்லோ,
யாவகை யுலகமும் யாவரு மில்லா,
மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்
கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான்
ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை
ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல
_தலிமூ வுலகம் விளைத்த உந்தி,
மாயக் கடவுள் மாமுத லடியே? 4

2582 மாமுதல் அடிப்போ தொன்றுகவிழ்த் தலர்த்தி,
மண்முழுதும் அகப்படுத்து, ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, வானவர் முறைமுறை
வழிபட நெறீஇ, தாமரைக் காடு
மலர்க்கண் ணோடு கனிவா யுடையது
மாய்இரு நாயிறா யிரம்மலர்ந் தன்ன
கற்பகக் காவு பற்பல வன்ன
முடிதோ ளாயிரம் தழைத்த
நெடியோய்க் கல்லதும் அடியதோ வுலகே? 5

2583 μμ. உலகின தியல்வே ஈன்றோ ளிருக்க
மணைநீ ராட்டி, படைத்திடந் துண்டுமிழ்ந்
தளந்து, தேர்ந்துல களிக்கும் முதற்பெருங்
கடவுள் நிற்ப புடைப்பல தானறி
தெய்வம் பேணுதல், தனாது
புல்லறி வாண்மை பொருந்தக் காட்டி,
கொல்வன முதலா அல்லன முயலும்,
இனைய செய்கை யின்பு துன்பளி
தொன்மா மாயப் பிறவியுள் நீங்கா
பன்மா மாயத் தழுந்துமா நளிர்ந்தே. 6

2584 நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட,
நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க,
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்ப்படக் கரந்துμர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது,
ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே? (2)7


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்

ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருவிருத்தம் தனியன்

கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.



ஸ்ரீ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம்

2478 பொய்ண்ணின்ற ஞானமும் பொல்லா
வொழுக்கும் அழுக்குடம்பும்,
இந்நின்ற நீர்மை இனியா
முறாமை, உயிரளிப்பான்
எந்நின்ற யோனியு மாய்ப்பிறந்
தாயிமை யோர்தலைவா.
மெய்நின்று கேட்டரு ளாய்,அடி
யேன்செய்யும் விண்ணப்பமே. 1

2479 செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந்
தாலொப்ப, சேயரிக்கண்
அழுநீர் துளும்ப அலமரு
கின்றன, வாழியரோ
முழுநீர் முகில்வண்ணன் கண்ணன்விண்
ணாட்டவர் மூதுவராம்
தொழுநீ ரிணையடிக் கே,அன்பு
சூட்டிய சூழ்குழற்கே. 2

2480 குழல்கோ வலர்மடப் பாவையும்
மண்மக ளும்திருவும்,
நிழல்போல் வனர்கண்டு நிற்குங்கொல்
மீளுங்கொல், தண்ணந்துழாய்
அழல்போ லடும்சக்க ரத்தண்ணல்
விண்ணோர் தொழக்கடவும்
தழல்போல் சினத்த,அப் புள்ளின்பின்
போன தனிநெஞ்ச் கமே. 3

2481 தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே
கவர்ந்தது, தண்ணந்துழாய்க்
கினிநெஞ்ச் க மிங்குக் கவர்வது
யாமிலம், நீநடுவே
முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத்
தான்முடி சூடுதுழாய்ப்
பனிநஞ்ச மாருத மே,எம்ம
தாவி பனிப்பியல்வே? 4

2482 பனிபியல் வாக வுடையதண்
வாடை,இக் காலமிவ்வூர்
பனிபியல் வெல்லாம் தவிர்ந்தெரி
வீசும், அந் தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி
மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு
நான்று தடாவியதே? 5

2483 தடாவிய அம்பும் முரிந்த
சிலைகளும் போகவிட்டு,
கடாயின கொண்டொல்கும் வல்லியீ
தேனும், அசுரர்மங்கக்
கடாவிய வேகப் பறவையின்
பாகன் மதனசெங்கோல்
நடாவிய கூற்றங்கண் டீர்,உயிர்
காமின்கள் ஞாலத்துள்ளே. 6

2484 ஞாலம் பனிப்பச் செரித்து,நன்
நீரிட்டுக் கால்சிதைந்து
நீலவல் லேறு பொராநின்ற
வான மிது,திருமால்
கோலம் சுமந்து பிரிந்தார்
கொடுமை குழறுதண்பூங்
காலங்கொ லோவறி யேன்,வினை
யாட்டியேன் காண்கின்றவே? 7

2485 காண்கின் றனகளும் கேட்கின்
றனகளும் காணில்,இந்நாள்
பாண்குன்ற நாடர் பயில்கின்
றன,இதெல் லாமறிந்தோம்
மாண்குன்ற மேந்திதண் மாமலை
வேங்கடத் தும்பர்நம்பும்
சேண்குன்றம் சென்று,பொருள்படைப்
பான்கற்ற திண்ணனவே. 8

2486 திண்பூஞ் சுடர்_தி நேமியஞ்
செல்வர்,விண் ணாடனைய
வண்பூ மணிவல்லி யாரே
பிரிபவர் தாம்,இவையோ
கண்பூங் கமலம் கருஞ்சுட
ராடிவெண் முத்தரும்பி
வண்பூங் குவளை, மடமான்
விழிக்கின்ற மாயிதழே. 9

2487 மாயோன் வடதிரு வேங்கட
நாட,வல் லிக்கொடிகாள்.
நோயோ வுரைக்கிலும் கேட்கின்றி
லீருரை யீர் _மது
வாயோ அதுவன்றி வல்வினை
யேனும் கிளியுமெள்கும்
ஆயோ அடும்தொண்டை யோ,அறை
யோவி தறிவரிதே. 10

2488 அரியன யாமின்று காண்கின்
றன,கண்ணன் விண்ணனையாய்.
பெரியன காதம் பொருட்கோ
பிரிவெனெ, ஞாலமெய்தற்
குரியென வெண்முத்தும் பைம்பொன்னு
மேந்தியொ ரோகுடங்கைப்
பெரியென கெண்டைக் குலம்,இவை
யோவந்து பேர்கின்றவே? 11

2489 பேர்கின் றதுமணி மாமை,
பிறங்கியள் ளல்பயலை
ஊர்கின் றதுகங்குல் ஊழிக
ளே,இதெல் லாமினவே
ஈர்கின்ற சக்கரத் தெம்பெரு
மான்கண்ணன் தண்ணந்துழாய்
சார்கின்ற நன்னெஞ்சி னார்,தந்து
போன் தனிவளமே. 12

2490 தனிவளர் செங்கோல் நடாவு,
தழல்வாய் அரசவியப்
பனிவளர் செங்கோ லிருள்வீற்
றிருந்தது, பார்முழுதும்
துனிவளர் காதல் துழாயைத்
துழாவுதண் வாடைதடிந்
தினிவளை காப்பவ ரார்,எனை
யூழிக ளீர்வனவே. 13

2491 ஈர்வன வேலுமஞ் சேலும்,
உயிர்மேல் மிளிர்ந்திவையோ
பேர்வன வோவல்ல தெய்வநல்
வேள்கணை, பேரொளியே
சோர்வன நீலச் சுடர்விடும்
மேனியம் மான்விசும்பூர்
தேர்வன, தெய்வமன் னீரகண்
ணோவிச் செழுங்கயலே? 14

2492 கயலோ _மகண்கள்? என்று
களிறு வினவிநிற்றீர்,
அயலோர் அறியிலு மீதென்ன
வார்த்தை, கடல்கவர்ந்த
புயலோ டுலாம்கொண்டல் வண்ணன்
புனவேங் கடத்தெம்மொடும்
பயலோ விலீர்,கொல்லைக் காக்கின்ற
நாளும் பலபலவே. 15

2493 பலபல வூழிக ளாயிடும்,
அன்றியோர் நாழிகையைப்
பலபல கூறிட்ட கூறாயி
டும்,கண்ணன் விண்ணனையாய்.
பலபல நாளன்பர் கூடிலும்
நீங்கிலும் யாம்மெலிதும்
பலபல சூழ லுடைத்து,அம்ம.
வாழியிப் பாயிருளே. 16

2494 இருள்விரிந் தாலன்ன மாநீர்த்
திரைகொண்டு வாழியரோ
இருள்பிரிந் தாரன்பர் தேர்வழி
தூரல், அரவணைமேல்
இருள்விரி நீலக் கருநா
யிறுசுடர் கால்வதுபோல்
இருள்விரி சோதிப், பெருமா
னுறையு மெறிகடலே. 17

2495 கடல்கொண் டெழுந்தது வானம்அவ்
வானத்தை யன்றிச்சென்று
கடல்கொண் டெழுந்த வதனா
லிது,கண்ணன் மண்ணும்விண்ணும்
கடல்கொண் டெழுந்தவக் காலங்கொ
லோ.புயற் காலங்கொலோ.
கடல்கொண்ட கண்ணீர், அருவிசெய்
யாநிற்கும் காரிகையே. 18

2496 காரிகை யார்நிறை காப்பவர்
யாரென்று, கார்கொண்டின்னே
மாரிகை யேறி அறையிடும்
காலத்தும், வாழியரோ
சாரிகைப் புள்ளர்அந் தண்ணந்
துழாயிறை கூயருளார்
சேரிகை யேரும், பழியா
விளைந்தென் சின்மொழிக்கே. 19

2497 சின்மொழி நோயோ கழிபெருந்
தெய்வம்,இந் நோயினதென்
றின்மொழி கேட்க்கு மிளந்தெய்வ
மன்றிது வேல.நில்நீ
என்மொழி கேண்மினென் அம்மனை
மீர்.உல கேழுமுண்டான்
சொல்மொழி, மாலயந் தண்ணந்து
ழாய்கொண்டு சூட்டுமினே. 20

2498 சூட்டுநன் மாலைகள் தூயன
வேந்தி,விண் ணோர்கள்நன்னீர்
ஆட்டியந் தூபம் தராநிற்க
வேயங்கு,μர் மாயையினால்
ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப்
போந்திமி லேற்றுவன்கூன்
கோட்டிடை யாடினை கூத்துஅட
லாயர்தம் கொம்பினுக்கே. 21

2499 கொம்பார் தழைகை சிறுநா
ணெறிவிலம் வேட்டைகொண்டாட்
டம்பார் களிறு வினவுவ
தையர்புள் ளூரும்கள்வர்
தம்பா ரகத்தென்று மாடா
தனதம்மில் கூடாதன
வம்பார் வினாச்சொல்ல வோ,எம்மை
வைத்ததிவ் வான்புனத்தே? 22

2500 புனமோ புனத்தய லேவழி
போகும் அருவினையேன் ,
மனமோ மகளிர்_ங் காவல்சொல்
லீர்,புண்ட ரீகத்தங்கேழ்
வனமோ ரனையகண் ணான்கண்ணன்
வானா டமரும்தெய்வத்
தினமோ ரனையீர்க ளாய்,இவை
யோ_ம் இயல்புகளே? 23

2501 இயல்வா யினவஞ்ச நோய்கொண்
டுலாவும், μரோகுடங்கைக்
கயல்பாய் வனபெரு நீர்க்கண்கள்
தம்மொடும், குன்றமொன்றால்
புயல்வா யினநிரை காத்தபுள்
ளூர்திகள் ளூரும்துழாய்க்
கொயல்வாய் மலர்மேல், மனத்தொடென்
னாங்கொலெம் கோல்வளைக்கே? 24

2502 எங்கோல் வளைமுத லா,கண்ணன்
மண்ணும்விண் ணும்அளிக்கும்
செங்கோல் வளைவு விளைவிக்கும்
மால்,திறல் சேரமர்
தங்கோ னுடையதங் கோனும்ப
ரெல்லா யவர்க்கும்தங்கோன்
நங்கோ னுகக்கும் துழாய்,எஞ்செய்
யாதினி நானிலத்தே ? 25

2503 நானிலம் வாய்க்கொண்டு நன்னீ
ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ்
பாலை, கடந்தபொன்னே.
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும்
கண்ணன்வெ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலது,எப்
பாலைக்கும் சேமத்ததே. 26

2504 சேமம்செங் கோனரு ளே,செரு
வாரும்நட் பாகுவரென்
றேமம் பெறவையம் சொல்லும்மெய்
யே,பண்டெல் லாம்மறைகூய்
யமங்க டோறெரி வீசும்நங்
கண்ணனந் தண்ணந்துழாய்த்
தாமம் புனைய,அவ் வாடையீ
தோவந்து தண்ணென்றதே. 27

2505 தண்ணந் துழாய்வளை கொள்வது
யாமிழப் போம், நடுவே
வண்ணம் துழாவியோர் வாடை
யுலாவும்,வள் வாயலகால்
புள்நந் துழாமே பொருநீர்த்
திருவரங் கா.அருளாய்
எண்ணந் துழாவு மிடத்து,உள
வோபண்டும் இன்னன்னவே? 28

2506 இன்னன்ன தூதெம்மை ஆளற்றப்
பட்டிரந் தாளிவளென்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும்
போய்வரும், நீலமுண்ட
மின்னன்ன மேனிப் பெருமா
னுலகில்பெண் தூதுசெல்லா
அன்னன்ன நீர்மைகொ லோ,குடிச்
சீர்மையி லன்னங்களே . 29

2507 அன்னம்செல் வீரும்வண் டானம்செல்
வீரும் தொழுதிரந்தேன்
முன்னம்செல் வீர்கள் மறவேல்மி
னோகண்ணன் வைகுந்தனோ
டென்னெஞ்சி னாரைக்கண் டாலென்னைச்
சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல் லீரோ, இதுவோ
தகவென் றிசைமின்களே . 30

2508 இசைமின்கள் தூதென் றிசைத்தா
லிசையிலம், என்தலைமேல்
அசைமின்க ளென்றா லசையிங்கொ
லாம்,அம்பொன் மாமணிகள்
திசைமின் மிளிரும் திருவேங்
கட்த்துவன் தாள்சிமயம்
மிசைமின் மிளிரிய போவான்
வழிக் கொண்ட மேகங்களே . 31

2509 மேகங்க ளோ.உரை யீர்,திரு
மால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு
பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்துநன்
னீர்கள் சுமந்து_ந்தம்
ஆகங்கள் நோவ, வருந்தும்
தவமாம் அருள்பெற்றதே? 32

2510 அருளார் திருச்சக் கரத்தால்
அகல்விசும் பும்நிலனும்
இருளார் வினைகெடச் செங்கோல்
நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்
பொருளோ எனுமிகழ் வோ?இவற்
றின்புறத் தாளென்றெண்ணோ?
தெருளோம் அரவணை யீர்,இவள்
மாமை சிதைக்கின்றதே. 33

2511 சிதைக்கின்ற தாழியென் றாழியைச்
சீறி,தன் சீறடியால்
உதைக்கின்ற நாயகந் தன்னொடும்
மாலே, உனதுதண்தார்
ததைக்கின்ற தண்ணந் துழாயணி
வானது வேமனமாய்ப்
பதைக்கின்ற மாதின் திறத்துஅறி
யேஞ்செயற் பாலதுவே. 34

2512 பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக்
கொண்டு, பகலிழந்த
மேல்பால் திசைப்பெண் புலம்புறு
மாலை, உலகளந்த
மால்பால் துழாய்க்கு மனமுடை
யார்க்குநல் கிற்றையெல்லாம்
சோல்வான் புகுந்து,இது வோர்பனி
வாடை துழாகின்றதே. 35

2513 துழாநெடுஞ் சூழிரு ளென்று,தன்
தண்தா ரதுபெயரா
எழாநெடு வூழி யெழுந்தவிக்
காலத்தும், ஈங்கிவளோ
வழாநெடுந் துன்பத்த ளென்றிரங்
காரம்ம னோ.இலங்கைக்
குழாநெடு மாடம், இடித்த
பிரானார் கொடுமைகளே . 36

2514 கொடுங்கால் சிலையர் நிரைகோ
ளுழவர், கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும்
கவ்வைத்து, அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப்
பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடை,இள
மாஞ்சென்ற சூழ்கடமே. 37

2515 கடமா யினகள் கழித்து,தம்
கால்வன்மை யால்பலநாள்
தடமா யினபுக்கு நீர்நிலை
நின்ற தவமிதுகொல்,
குடமாடி யிம்மண்ணும் விண்ணும்
குலுங்க வுலகளந்து
நடமா டியபெரு மான்,உரு
வொத்தன நீலங்களே. 38

2516 நீலத் தடவரை மேல்புண்ட
ரீக நெடுந்தடங்கள்
போல, பொலிந்தெமக் கெல்லா
விடத்தவும், பொங்குமுந்நீர்
ஞாலப் பிரான்விசும் புக்கும்
பிரான்மற்றும் நல்லோர்பிரான்
கோலம் கரிய பிரான்,எம்
பிரான்கண்ணின் கோலங்களே. 39

2517 கோலப் பகற்களி றொன்றுகற்
புய்ய, குழாம்விரிந்த
நீலக்கங் குற்களி றெல்லாம்
நிறைந்தன, நேரிழையீர் .
ஞாலப்பொன் மாதின் மணாளன்
துழாய்நங்கள் சூழ்குழற்கே
ஏலப் புனைந்தென்னை மார்,எம்மை
நோக்குவ தென்றுகொலோ. 40

2518 என்றும்புன் வாடை யிதுகண்
டறிதும்,இவ் வாறுவெம்மை
ஒன்றுமுருவும் சுவடும்
தெரியிலம், μங்கசுரர்
பொன்றும் வகைபுள்ளை யூர்வான்
அருளரு ளாதவிந்நாள்
மன்றில் நிறைபழி தூற்றி,நின்
றென்னைவன் காற்றடுமே. 41

2519 வன்காற் றறைய ஒருங்கே
மறிந்து கிடந்தலர்ந்த,
மென்காற் கமலத் தடம்போற்
பொலிந்தன, மண்ணும்விண்ணும்
என்காற் களவின்மை காண்மினென்
பானொத்து வான்நிமிர்ந்த
தன்கால்பணிந்தவென் பால்,எம்பி
ரான தடங்கண்களே. 42

2520 கண்ணும்செந் தாமரை கையு
மவைஅடி யோஅவையே,
வண்ணம் கரியதோர் மால்வரை
போன்று, மதிவிகற்பால்
விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக்
குமற்றெப் பால்எவர்க்கும்
எண்ணு மிடத்தது வோ,எம்பி
ரான தெழில்நிறமே? 43

2521 நியமுயர் கோலமும் பேரும்
உருவும் இவையிவையென்று,
அறமுயல் ஞானச் சமயிகள்
பேசிலும், அங்கங்கெல்லாம்
உறவுயர் ஞானச் சுடர்விளக்
காய்நின்ற தன்றியொன்றும்
பெறமுயன் றாரில்லை யால்,எம்பி
ரான்றன் பெருமையையே. 44

2522 பெருங்கேழ லார்தம் பெருங்கண்
மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங்கே பிறழவைத் தாரிவ்வ
காலம், ஒருவர்நம்போல்
வரும்கேழ் பவருள ரே?தொல்லை
வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறு மே,சொல்லு
வாழி மடநெஞ்சமே. 45

2523 மடநெஞ்ச மென்றும் தமதென்றும்,
μர்கரு மம்கருதி,
விடநெஞ்சை யுற்றார் விடவோ
அமையும்,அப் பொன்பெயரோன்
தடநெஞ்சம் கீண்ட பிரானார்
தமதடிக் கீழ்விடப்போய்த்
திடநெஞ்ச மாய்,எம்மை நீத்தின்று
தாறும் திரிகின்றதே. 46

2524 திரிகின் றதுவட மாருதம்,
திங்கள்வெந் தீமுகந்து
சொரிகின் றதுஅது வும்அது
கண்ணன்விண் ணூர்தொழவே
சரிகின் றதுசங்கம் தண்ணந்து
ழாய்க்குவண் ணம்பயலை
விரிகின் றதுமுழு மெய்யும்,என்
னாங்கொலென் மெல்லியற்கே? 47

2525 மெல்லிய லாக்கைக் கிருமி,
குருவில் மிளிர்தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென்
காணும்,என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா
லவன்கவி யாதுகற்றேன்?
பல்லியின் சொல்லும்சொல் லாக்கொள்வ
தோவுண்டு பண்டுபண்டே. 48

2526 பண்டும் பலபல வீங்கிருள்
காண்டும்,இப் பாயிருள்போல்
கண்டு மறிவதும் கேட்பதும்
யாமிலம், காளவண்ண
வண்டுண் துழாய்ப்பெரு மான்மது
சூதனன் தாமோதரன்
உண்டும் உமிழ்ந்தும் கடாய,மண்
ணேரன்ன ஒண்ணுதலே. 49

2527 ஒண்ணுதல் மாமை ஒளிபய
வாமை, விரைந்துநந்தேர்
நண்ணுதல் வேண்டும் வலவ.
கடாகின்று, தேன்நவின்ற
வண்முதல் நாயகன் நீள்முடி
வெண்முத்த வாசிகைத்தாய்
மண்முதல் சேர்வுற்று, அருவிசெய்
யாநிற்கும் மாமலைக்கே. 50

2528 மலைகொண்டு மத்தா அரவால்
சுழற்றிய மாயப்பிரான்.
அலைகண்டு கொண்ட அமுதம்கொள்
ளாது கடல்,பரதர்
விலைகொண்டு தந்தசங் கம்இவை
வேரித் துழாய்துணையாத்
துலைகொண்டு தாயம் கிளர்ந்து,கொள்
வானொத் தழைக்கின்றதே. 51

2529 அழைக்கும் கருங்கடல் வெண்திரைக்
கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை
யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை
மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்,திரு மால்கொடி
யானென்று வார்கின்றதே. 52

2530 வாரா யினமுலை யாளிவள்
வானோர் தலைமகனாம்,
சேரா யினதெய்வ நன்னோ
யிது,தெய்வத் தண்ணந்துழாய்த்
தாரா யினும்தழை யாயினும்
தண்கொம்ப தாயினும்கீழ்
வேரா யினும்,நின்ற மண்ணாயி
னும்கொண்டு வீசுமினே. 53

2531 வீசும் சிறகால் பறத்திர்,விண்
ணாடு_ங் கட்கெளிது
பேசும் படியன்ன பேசியும்
போவது, நெய்தொடுவுண்
டேசும் படியன்ன செய்யுமெம்
மீசர்விண் ணோர்பிரானார்
மாசின் மலரடிக் கீழ்,எம்மைச்
சேர்விக்கும் வண்டுகளே 54

2532 வண்டுக ளோ.வம்மின் நீர்ப்பூ
நிலப்பூ மரத்திலொண்பூ,
உண்டுகளித்துழல் வீர்க்கொன்
றுரைக்கியம், ஏனமொன்றாய்
மண்துக ளாடிவை குந்தமன்
னாள்குழல் வாய்விரைபோல்
விண்டுகள் வாரும், மலருள
வோ_ம் வியலிடத்தே? 55

2533 வியலிட முண்ட பிரானா
விடுத்த திருவருளால்,
உயலிடம் பெற்றுய்ந்தம் அஞ்சலம்
தோழி,μர் தண்தென்றல்வந்
தயலிடை யாரும் அறிந்திலர்
அம்பூந் துழாயினின்தேன்
புயலுடை நீர்மையி னால்,தட
விற்றென் புலன்கலனே. 56

2534 புலக்குண் டலப்புண்ட ரீகத்த
போர்க்கொண்டை, வல்லியொன்றால்
விலக்குண் டுலாகின்று வேல்விழிக்
கின்றன, கண்ணன் கையால்
மலக்குண் டமுதம் சுரந்த
மறிகடல் போன்றவற்றால்
கலக்குண்ட நான்றுகண் டார்,எம்மை
யாரும் கழறலரே. 57

2535 கழல்தலம் ஒன்றே நிலமுழு
தாயிற்று, ஒருகழல்போய்
நிழல்தர எல்லா விசும்பும்
நிறைந்தது, நீண்ட அண்டத்து
உழறலர் ஞானச் சுடர்விளக்
காயுயர்ந் தோரையில்லா
அழறலர் தாமரைக் கண்ணன், என்
னோவிங் களக்கின்றதே? 58

2536 அளப்பருந் தன்மைய ஊழியங்
கங்குல்,அந் தண்ணந்துழாய்க்கு
உளப்பெருங் காதலில் நீளிய
வாயுள, μங்குமுந்நீர்
வளப்பெரு நாடன் மதுசூ
தனனென்னும் வல்வினையேன்
தளப்பெரு நீண்முறு வல்,செய்ய
வாய தடமுலையே. 59

2537 முலையோ முழுமுற்றும் போந்தில,
மொய்பூங் குழல்குறிய
கலையோ அரையில்லை நாவோ
குழறும், கடல்மண்ணெல்லாம்
விலையோ எனமிளி ருங்கண்
ணிவள்பர மே.பெருமான்
மலையோ திருவேங் கடமென்று
கற்கின்றா வாசகமே? (2) 60

2538 வாசகம் செய்வது நம்பர
மே?, தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம்
தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா
வகையிரண் டேயடியால்
தாயவன், ஆய்க்குல மாய்வந்து
தோன்றிற்று நம்மிறையே. 61

2539 இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண்
டால்,என வும்மிரங்காது,
அறையோ. எனநின் றதிரும்
கருங்கடல், ஈங்க்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு
ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ, அரவணை மேல்பள்ளி
கொண்ட முகில்வண்ணனே. 62

2540 வண்ணம் சிவந்துள வானா
டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல்
பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந்
தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக்
கால மிருகின்றதே. 63

2541 இருக்கார் மொழியால் நெறியிழுக்
காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர்
வணங்குவர், யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும்
நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்,திரு
நாமச்சொல் கற்றனமே. 64

2542 கற்றுப் பிணைமலர்க் கண்ணின்
குலம்வென்று,μ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு
சாவி, உலகமெல்லாம்
முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த
பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும், மிளீர்ந்தகண்
ணாயெம்மை உண்கின்றவே. 65

2543 உண்ணா துறங்கா துணர்வுறும்
எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின
வாம்,எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான்
றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்,உயி
ராயின காவிகளே. 66

2544 காவியும் நீலமும் வேலும்
கயலும் பலபலவென்று,
ஆவியின் தன்மை அளவல்ல
பாரிப்பு, அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன்
கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்,கண்க
ளாய துணைமலரே. 67

2545 மலர்ந்தே யொழிலிந்தில மாலையும்
மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற
நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான்
தனதுவை குந்தமன்னாய்.
கலந்தார் வரவெதிர் கொண்டு,வன்
கொன்றைகள் கார்த்தனவே. 68

2546 காரேற் றிருள்செகி லேற்றின்
சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை
மாலை, புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய
பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்,வருந்
தேலுன் வளைத்திறமே. 69

2547 வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள்
வானவ னார்முடிமேல்,
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந்
துழாய்க்குவண் ணம்பயலை,
விளைவான் மிகவந்து நாள்திங்க
ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து,இது வோர்கங்குல்
ஆயிரம் ஊழிகளே. 70

2548 ஊழிக ளாயுல கேழுமுண்
டானென் றிலம்,பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென்
றேற்க்கு,அ தேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண்
டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ.உரை யீர்,எம்மை
அம்மனை சூழ்கின்றவே. 71

2549 சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா
இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும்
போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி
யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோ,வந்து
தோன்றிறு வாலியதே. 72

2550 வால்வெண் ணிலவுல காரச்
சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர்
மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி
ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்,தமி
யாடி தளர்ந்ததுவே? 73

2551 தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப்
பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம்
விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத்
தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந்
தோவந் துலாகின்றதே. 74

2552 உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம்
ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத்
தீர்,குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம்
பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்த மோ,வைய
மோ_ம் நிலையிடமே? 75

2553 இடம்போய் விரிந்திவ் வுலகளந்
தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்ச
மே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப்
பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல் லாம்பல்
அலர்விக்கும் வெண்திங்களே. 76

2554 திங்களம் பிள்ளை புலம்பத்தன்
செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன்
மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர்
பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து
தோன்றி நலிகின்றதே. 77

2555 நலியும் நரகனை வீட்டிற்றும்,
வாணன்திண் டோள்துணித்த
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும்
நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார்
புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து
போயின வேதனையே. 78

2556 வேதனை வெண்புரி _லனை,
விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும்
அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை
மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு
ளாரிலும் சேரியரே. 79

2557 சீரர சாண்டுதன் செங்கோல்
சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது
நாயிறு, பாரளந்த
பேரர சே.எம் விசும்பர
சே.எம்மை நீத்துவஞ்சித்த
μரர சே.அரு ளாய்,இரு
ளாய்வந் துறுகின்றதே. 80

2558 உருகின்ற கன்மங்கள் மேலான
μர்ப்பில ராய்,இவளைப்
பெருகின்ற தாயர்மெய்ந் நொந்து
பெறார்கொல் துழாய்குழல்வாய்த்
துறுகின் றிலர்தொல்லை வேங்கட
மாட்டவும் சூழ்கின்றிலர்
இருகின்ற தாலிவ ளாகம்,மெல்
லாவி எரிகொள்ளவே. 81

2559 எரிகொள்செந் நாயி றிரண்டுட
னேயுத யம்மலைவாய்,
விரிகின்ற வண்ணத்த எம்பெரு
மான்கண்கள், மீண்டவற்றுள்
எரிகொள்செந் தீவீழ் அசுரரைப்
போலஎம் போலியர்க்கும்
விரிவசொல் லீரிது வோ,வைய
முற்றும் விளரியதே? 82

2560 விளரிக் குரலன்றில் மென்படை
மேகின்ற முன்றில்பெண்ணை,
முளரிக் குரம்பை யிதுவிது
வாக, முகில்வண்ணன்பேர்
கிளரிக் கிளரிப் பிதற்றும்மெல்
லாவியும் நைவுமெல்லாம்
தளரில் கொலோவறி யேன்,உய்ய
லாவதித் தையலுக்கே. 83

2561 தையல்நல் லார்கள் குழாங்கள்
குழிய குழுவினுள்ளும்,
ஐயநல் லார்கள் குழிய
விழவினும், அங்கங்கெல்லாம்
கையபொன் னாழிவெண் சங்கொடும்
காண்பான் அவாவுவன்நான்
மையவண் ணா.மணியே,முத்த
மே.என்றன் மாணிக்கமே. 84

2562 மாணிக்கங் கொண்டு குரங்கெறி
வொத்திரு ளோடுமுட்டி,
ஆணிப்பொன் னன்ன சுடர்படு
மாலை, உலகளந்த
மாணிக்க மே.என் மரகத
மே.மற்றொப் பாரையில்லா
ஆணிப்பொன் னே,அடி யேனுடை
யாவி யடைக்கலமே. 85

2563 அடைக்கலத் தோங்கு கமலத்
தலரயன் சென்னியென்னும்,
முடைக்கலத் தூண்முன் அரனுக்கு
நீக்கியை, ஆழிசங்கம்
படைக்கலம் ஏந்தியை வெண்ணெய்க்கன்
றாய்ச்சிவன் தாம்புகளால்
புடைக்கலந் தானை,எம் மானையென்
சொல்லிப் புலம்புவனே? 86

2564 புலம்பும் கனகுரல் போழ்வாய
அன்றிலும், பூங்கழிபாய்ந்
தலம்பும் கனகுரல் சூழ்திரை
யாழியும், ஆங்கவைநின்
வலம்புள் ளதுநலம் பாடு
மிதுகுற்ற மாகவையம்
சிலம்பும் படிசெய்வ தே,திரு
மால்இத் திருவினையே? 87

2565 திருமால் உருவொக்கும் மேரு,அம்
மேருவில் செஞ்சுடரோன்
திருமால் திருக்கைத் திருச்சக்
கரமொக்கும், அன்னகண்டும்
திருமால் உருவோ டவஞ்சின்ன
மேபிதற் றாநிற்பதோர்
திருமால் தலைக்கொண்ட நங்கட்கு,எங்
கேவரும் தீவினையே? 88

2566 தீவினை கட்கரு நஞ்சினை
நல்வினைக் கின்னமுதை,
பூவினை மேவிய தேவி
மணாளனை, புன்மையெள்காது
ஆவினை மேய்க்கும்வல் லாயனை
அன்றுல கீரடியால்
தாவின ஏற்றையெம் மானைஎஞ்
ஞான்று தலைப்பெய்வனே? 89

2567 தலைப்பெய்து யானுன் திருவடி
சூடுந் தகைமையினால்,
நீலைபெய்த ஆக்கைக்கு நோற்றவிம்
மாயமும், மாயம்செவ்வே
நிலைப்பெய் திலாத நிலைமையுங்
காண்டோ றசுரர்குழாம்
தொலைப்பெய்த நேமியெந் தாய்,தொல்லை
யூழி சுருங்கலதே. 90

2568 சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட
கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற்
றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர்
மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி
யேன்நெஞ்சம் பேணலதே. 91

2569 பேணல மில்லா அரக்கர்முந்
நீர பெரும்பதிவாய்,
நீணகர் நீளெரி வைத்தரு
ளாயென்று, நீன்னைவிண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின்
மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல்
மாலையுங் காலையுமே. 92

2570 காலைவெய் யோற்குமுன் னோட்டுக்
கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம்
பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந்
தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை
யாரவன் மைப்படியே. 93

2571 மைப்படி மேனியும் செந்தா
மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி
சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக்
குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி
யேன்மற்று யாதென்பனே? 94

2572 யாதானு மோராக் கையில்புக்கு,அங்
காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும்
உயிர்முன்ன மே,அதனால்
யாதானும் பற்றிநீங் கும்விர
தத்தைநல் வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு
மாலை வணங்குவனே. 95

2573 வணங்கும் துறைகள் பலபல
ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல
ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக்கிநின்
மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண்
வேட்கை எழுவிப்பனே. 96

2574 எழுவதும் மீண்டே படுவதும்
பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல்
லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை
மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண்
டோகண்கள் துஞ்சுதலே? 97

2576 துஞ்சா முனிவரும் அல்லா
தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி
வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு
மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ
யூணென்னும் ஈனச்சொல்லே. 98

2576 ஈனச்சொல் லாயினு மாக,
எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி
ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க்
கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை
நான் கண்ட நல்லதுவே (2) 99

2577 நல்லார் நவில்குரு கூர்நக
ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய
மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் _றும்வல்
லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன்
சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே (2) 100


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Thursday, March 29, 2012

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி

திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

நான்முகன் திருவந்தாதி தனியன்

சீராமப்பிள்ளை அருளிச்செய்தது

நேரிசை வெண்பா

திருமழிசைப்பிரானடி வாழ்த்து

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து



திருமழிசைபிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி

2382 நான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து (2) 1

2383 தேருங்கால் தேவன் ஒருவனே, என்றுரைப்பர்
ஆருமறியார் அவன்பெருமை, μரும்
பொருள்முடிவு மித்தனையே எத்தவம்செய் தார்க்கும்
அருள்முடிவ தாழியான் பால் 2

2384 பாலிற் கிடந்ததுவும் பண்டரகம் மேயதுவும்,
ஆலிற் றுயின்றதுவும் ஆரறிவார், - ஞாலத்
தொருபொருளை வானவர்தம் மெய்ப்பொருளை, அப்பில்
அருபொருளை யானறிந்த வாறு? 3

2385 ஆறு சடைக்கரந்தான் அண்டர்கோன் றன்னோடும்,
கூறுடையன் என்பதுவும் கொள்கைத்தே, - வேறொருவர்
இல்லாமை நின்றானை எம்மானை, எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன் தொகுத்து 4

2386 தொகுத்த வரத்தனாய்த் தோலாதான் மார்வம்,
வகிர்த்த வளையுகிர்த்தோள் மாலே, - உகத்தில்
ஒருநான்று நீயுயர்த்தி யுள்வாங்கி நீயே,
அருநான்கு மானாய் அறி 5

2387 அறியார் சமணர் அயர்த்தார் பவுத்தர்,
சிறியார் சிவப்பட்டார் செப்பில், வெறியாய
மாயவனை மாலவனை மாதவனை ஏத்தார்
ஈனவரே யாதலால் இன்று. 6

2388 இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை 7

2389 இலைதுணைமற் றென்னெஞ்சே ஈசனை வென்ற
சிலைகொண்ட செங்கண்மால் சேரா - குலைகொண்ட
ஈரைந் தலையான் இலங்கையை யீடழித்த
கூரம்பன் அல்லால் குறை 8

2390 குறைகொண்டு நான்முகன் குண்டிகைநீர் பெய்து
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி, - கறைகொண்ட
கண்டத்தான் சென்னிமேல் ஏறக் கழுவினான்
அண்டத்தான் சேவடியை ஆங்கு 9

2391 ஆங்கார வாரம் அதுகேட்டு, அழலுமிழும்
பூங்கார் அரவணையான் பொன்மேனி, - யாங்காண
வல்லமே யல்லமே? மாமலரான் வார்சடையான்
வல்லரே யல்லரே? வாழ்த்து 10

2392 வாழ்த்துகவாய் காண்ககண் கேட்க செவிமகுடம்
தாழ்த்து வணங்குமின்கள் தண்மலரால், - சூழ்த்த
துழாய்மன்னும் நீண்முடியென் தொல்லைமால் த்ன்னை
வழாவண்கை கூப்பி மதித்து 11

2393 மதித்தாய்போய் நான்கின் மதியார்போய் வீழ
மதித்தாய் மதிகோள் விடுத்தாய், - மதித்தாய்
மடுகிடந்த மாமுதலை கோள்விடுப்பான், ஆழி
விடற்கிரண்டும் போயிரண்டின் வீடு 12

2394 வீடாக்கும் பெற்றி யறியாது மெய்வருத்திக்
கூடாக்கு நின்று-ண்டு கொண்டுழல்வீர், - வீடாக்கும்
மெய்ப்பொருள்தான் வேத முதற்ப்பொருள்தான், விண்ணவர்க்கு
நற்பொருள்தான் நாரா யணன் 13

2395 நாரா யணனென்னை யாளி, நரகத்துச்
சேராமல் காக்கும் திருமால்தன், பேரான
பேசப் பெறாத பிணச்சமயர் பேசக்கேட்டு
ஆசைப்பட் டாழ்வார் பலர் 14

2396 பலர்த்தேவ ரேத்தப் படிகடந்தான் பாதம்
மலரேற விட்டிறைஞ்சி வாழ்த்த - வலராகில்
மார்க்கண்டன் கண்ட வகையே வருங்கண்டீர்
நீர்க்கண்டன் கண்ட நிலை 15

2397 நிலைமன்னும் என்னெஞ்சம் அந்நான்று, தேவர்
தலைமன்னர் தாமேமாற் றாக, - பலர்மன்னர்
போர்மாள வெங்கதிரோன் மாயப் பொழில்மறைய
தேராழி யால்மறைத்தா ரால் 16

2398 ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு
மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்,- ஞாலம்
அளந்தானை யாழிக் கிடந்தானை, ஆல்மேல்
வளர்ந்தானைத் தான்வணங்கு மாறு 17

2399 மாறாய தானவனை வள்ளுகிரால் மார்விரண்டு
கூறகக் கீறிய கோளரியை, - வேறாக
ஏத்தி யிருப்பாரை வெல்லுமே, மற்றவரைச்
சார்த்தி யிருப்பார் தவம் 18

2400 தவம்செய்து நான்முகனால் பெற்ற வரத்தை
அவம்செய்த ஆழியா யன்றே, உவந்தெம்மைக்
காப்பாய்நீ காப்பதனை யாவாய்நீ, வைகுந்தம்
ஈப்பாயு மெவ்வுயிர்க்கும் நீ 19

2401 நீயே யுலகெலாம் நின்னருளே நிற்பனவும்
நீயே தவத்தேவ தேவனும், - நீயே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இவை 20

2402 இவையா பிலவாய் திறந்தெரி கான்ற
இவையா எரிவட்டக் கண்கள், - இவையா
எரிபொங்கிக் காட்டு மிமையோர் பெருமான்,
அரிபொங்கிக் காட்டும் அழகு? 21

2403 அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின், - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து 22

2404 வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, - மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து. 23

2405 நிகழ்ந்தாய்பால் பொன்பசுவப்புக் கார்வண்ணம் நான்கும்
இகழ்ந்தா யிருவரையும் வீயப், - புகழ்ந்தாய்
சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்
மனப்போர் முடிக்கும் வகை 24

2406 வகையால் மதியாது மண்கொண்டாய், மற்றும்
வகையால் வருவதொன் றுண்டே, வகையால்
வயிரம் குழைத்துண்ணும் மாவலிதா னென்னும்
வயிர வழக்கொழித்தாய் மற்று 25

2407 மற்றுத் தொழுவா ரொருவரையும் யானின்மை,
கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்
கண்டுகொள் கிற்குமா று 26

2408 மால்தான் புகுந்த மடநெஞ்சன் மற்றதுவும்
பேறாகக் கொள்வனோ பேதைகாள், நீறாடி
தான்காண மாட்டாத தாரகலச் சேவடியை
யான்காண வல்லேற் கிது 27

2409 இதுவிலங்கை யீடழியக் கட்டிய சேது,
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது, - இதுவிலங்கை
தானொடுங்க வில்_டங்கத் தண்தா ரிராவணனை,
ஊனொடுங்க எய்தான் உகப்பு. 28

2410 உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,
மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்
ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்
அன்றிக்கொண் டெய்தான் அவன். 29

2411 அவனென்னை யாளி அரங்கத்து, அரங்கில்
அவனென்னை எய்தாமல் காப்பான், அவனென்ன
துள்ளத்து நின்றா னிருந்தான் கிடக்குமே,
வெள்ளத் தரவணையின் மேல். 30

2412 மேல்நான் முகனரனை யிட்டவிடு சாபம்
தான்நா ரணனொழித்தான் தாரகையுள், வானோர்
பெருமானை யேத்தாத பேய்காள், பிறக்கும்
கருமாயம் பேசில் கதை 31

2413 கதைப்பொருள்தான் கண்ணன் திருவயிற்றி னுள்ள
உதைப்பளவு போதுபோக் கின்றி, - வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப் படாத தடைமினோ
ஆய்ந்த குணத்தான் அடி 32

2414 அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை
பிடித்தொசித்துப் பேய்முலைநஞ் சுண்டு, - வடிப்பவள
வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,
கோப்பின்னு மானான் குறிப்பு. 33

2415 குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,
குறிப்பெனக்கு நன்மை பயக்க, - வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,
தான்கடத்தும் தன்மையான் தாள் 34

2416 தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,
ஐந்தலைவாய் நாகத் தணை? 35

2417 நாகத் தணைக்குடந்தை வெகா திருவெவ்வுள்,
நாகத் தணையரங்கம் பேரன்பில், - நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கு மாதி நெடுமால்,
அணைப்பார் கருத்தனா வான். 36

2418 வானுலவு தீவளி மாகடல் மாபொருப்பு,
தானுலவு வெங்கதிரும் தண்மதியும், - மேனிலவு
கொண்டல் பெயரும் திசையெட்டும் சூழ்ச்சியும்,
அண்டந் திருமால் அகைப்பு. 37

2419 அகைப்பில் மனிசரை யாறு சமயம்
புகைத்தான், பொருகடல்நீர் வண்ணன், - உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டு மெவ்வாறு செய்கையும்,
அப்போ தொழியும் அழைப்பு. 38

2420 அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,
இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே
ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை
வெருவி யரவொடுங்கும் வெற்பு. 39

2421 வெற்பென்று வேங்கடம் பாடினேன், வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன், - கற்கின்ற
_ல்வலையில் பட்டிருந்த _லாட்டி கேள்வனார்,
கால்வலையில் பட்டிருந்தேன் காண். 40

2422 காண லுறுகின்றேன் கல்லருவி முத்துதிர,
μண விழவில் ஒலியதிர, பேணி
வருவேங் கடவா.என் னுள்ளம் புகுந்தாய்,
திருவேங் கடமதனைச் சென்று. 41

2423 சென்று வணங்குமினோ சேணுயர் வேங்கடத்தை,
நின்று வினைகெடுக்கும் நீர்மையால், என்றும்
கடிக்கமல நான்முகனும் கண்மூன்றத் தானும்,
அடிக்கமலம் இட்டேத்து மங்கு. 42

2424 மங்குல்தோய் சென்னி வடவேங் கடத்தானை
கங்குல் புகுந்தார்கள் காப்பணிவான், - திங்கள்
சடையேற வைத்தானும் தாமரைமே லானும்
குடையேறத் தாம்குவித்துக் கொண்டு. 43

2425 கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,
தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,
போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,
போம்குமர ருள்ளீர் புரிந்து. 44

2426 புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,
பரிந்து படுகாடு நிற்ப, - தெரிந்தெங்கும்
தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு. 45

2427 வைப்பன் மணிவிளக்கா மாமதியை, மாலுக்கென்
றெப்பொழுதும் கைநீட்டும் யானையை, - எப்பாடும்
வேடுவளைக் கக்குறவர் வில்லெடுக்கும் வேங்கடமே,
நாடுவளைத் தாடுமேல் நன்று. 46

2428 நன்மணி வண்ணனூர் ஆளியும் கோளரியும்,
பொன்மணியும் முத்தமும் பூமரமும், - பன்மணிநீ
ரோடு பொருதுருளும் கானமும் வானரமும்
வேடு முடைவேங் கடம். 47

2429 வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்
வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும், - வேங்கடமே
தானவரை வீழத்தன் னாழிப் படைதொட்டு
வானவரைக் காப்பான் மலை. 48

2430 மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலையாமை தானொருகை பற்றி, - அலையாமல்
பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,
கூறுவதே யாவர்க்கும் கூற்று. 49

2431 கூறமும் சாரா கொடுவினையும் சாரா,தீ
மாற்றமும் சாரா வகையறிந்தேன், - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன் கடல்கிடக்கும், மாயன்
உரைக்கிடக்கு முள்ளத் தெனக்கு. 50

2432 எனக்காவா ராரொருவ ரே,எம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால், புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை? 51

2433 விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் - முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர். 52

2434 கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு. 53

2435 தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், - யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை. 54

2436 கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், - புடைநின்ற
நிரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்? 55

2437 அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், - உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு. 56

2438 ஒருங்கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந்தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்? 57

2439 என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், - என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு. 58

2440 அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள். 59

2441 ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மையை, கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம் 60

2442 மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு. 61

2443 திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து. 62

2444 தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது. 63

2445 போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது. 64

2446 சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை, - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்? 65

2447 இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம். 66

2448 வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம். 67

2449 திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68

2450 செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான். 69

2451 தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய். 70

2452 சேயன் அணியன் சிறியன் மிகப்பெரியன்,
ஆயன் துவரைக்கோ னாய்நின்ற- மாயன்,அன்
றோதிய வாக்கதனைக் கல்லார், உலகத்தில்
ஏதிலராய் மெய்ஞ்ஞான மில். 71

2453 இல்லறம் இல்லேல் துறவறமில் என்னும்,
சொல்லற மல்லனவும் சொல்லல்ல,- நல்லறம்
ஆவனவும் நால்வேத மாத்தவமும், நாரணனே
யாவதீ தன்றென்பா ரார்? 72

2454 ஆரே யறிவார் அனைத்துலகு முண்டுமிழ்ந்த,
பேராழி யான்றன் பெருமையை,- கார்செறிந்த
கண்டத்தான் எண்கண்ணான் காணான், அவன் வைத்த
பண்டைத்தா னத்தின் பதி. 73

2455 பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,
மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்
வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,
அல்லதொன் றேத்தாதென் நா. 74

2456 நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு. 75

2457 பாட்டும் முறையும் படுகதையும் பல்பொருளும்
ஈட்டிய தீயும் இருவிசும்பும்,- கேட்ட
மனுவும் சுருதி மறைநான்கும் மாயன்
றனமாயை யிற்பட்ட தற்பு. 76

2458 தற்பென்னைத் தானறியா னேலும், தடங்கடலைக்
கற்கொண்டு தூர்த்த கடல்வண்ணன், - எற்கொண்ட
வெவ்வினையும் நீங்க விலங்கா மனம்வைத்தான்,
எவ்வினையும் மாயுமால் கண்டு. 77

2459 கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்
கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்
தாரலங்கல் நீண்முடியான் றன்பெயரே கேட்டிருந்து, அங்
காரலங்க லானமையா லாய்ந்து. 78

2460 ஆய்ந்துகொண்ட டாதிப் பெருமானை, அன்பினால்
வாய்ந்த மனதிருத்த வல்லார்கள், - ஏய்ந்ததம்
மெய்குந்த மாக விரும்புவரே, தாமும்தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து. 79

2461 விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,
கரந்துலகம் காத்தளித்த கண்ணன், - பரந்துலகம்
பாடின ஆடின கேட்டு, படுநரகம்
வீடின வாசற் கதவு. 80

2462 கதவு மனமென்றும் காணலா மென்றும்,
குதையும் வினையாவி தீர்ந்தேன், - விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீவிளைத்தாய்,
கற்றமொழி யாகிக் கலந்து. 81

2463 கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே?, - அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து. 82

2464 வேந்தராய் விண்ணவராய் விண்ணாகித் தண்ணளியாய்
மாந்தராய் மாதாய்மற் றெல்லாமாய், - சார்ந்தவர்க்குத்
தன்னாற்றான் நேமியான் மால்வண்ணன் தான்கொடுக்கும்,
பின்னால்தான் செய்யும் பிதிர். 83

2465 பிதிரும் மனமிலேன் பிஞ்ஞகன் றன்னோடு,
எதிர்வன் அவனெனக்கு நேரான், - அதிரும்
கழற்கால மன்னனையே கண்ணனையே, நாளும்
தொழக்காதல் பூண்டேன் தொழில். 84

2466 தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,
பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த
வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,
வில்லாளன் நெஞ்சத் துளன். 85

2467 உளன்கண்டாய் நன்நெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத், - துளன்கண்டாய்
தன்னொப்பான் தானா யுளன்காண் தமியேற்கும்,
என்னொப்பார்க் கீச னிமை. 86

2468 இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,
சமய விருந்துண்டார் காப்பார், சமயங்கள்
கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு
உண்டா னுலகோ டுயிர். 87

2469 உயிர்கொண் டுடலொழிய μடும்போ தோடி,
அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்
சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது. 88

2470 பழுதாகா தொன்றறிந்தேன் பாற்கடலான் பாதம்,
வழுவா வகைநினைந்து வைகல் - தொழுவாரை,
கண்டிறைஞ்சி வாழ்வார் கலந்த வினைகெடுத்து
விண்திறந்து வீற்றிருப்பார் மிக்கு. 89

2471 வீற்றிருந்து விண்ணாள வேண்டுவார், வேங்கடத்தான்
பால்திருந்த வைத்தாரே பன்மலர்கள், - மேல்திருந்த
வாழ்வார் வருமதிபார்த் தன்பினராய், மற்றவர்க்கே
தாழா யிருப்பார் தமர் 90

2472 தமராவர் யாவருக்கும் தாமரைமே லாற்கும்
அமரர்க்கும் ஆடரவார்த் தாற்கும் - அமரர்கள்
தாள்தா மரைமலர்க ளிட்டிறைஞ்சி, மால்வண்ணன்
தாள்தா மரையடைவோ மென்று 91

2473 என்றும் மறந்தறியேன் என்னெஞ்சத் தேவைத்து
நின்று மிருந்தும் நெடுமாலை - என்றும்
திருவிருந்த மார்பன் சிரீதரனுக் காளாய்,
கருவிருந்த நாள்முதலாக் காப்பு. 92

2474 காப்பு மறந்தறியேன் கண்ணனே யென்றிருப்பன்
ஆப்பங் கொழியவும் பல்லுயிர்க்கும், - ஆக்கை
கொடுத்தளித்த கோனே குணப்பரனே, உன்னை
விடத்துணியார் மெய்தெளிந்தார் தாம். 93

2475 மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த
பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு
வேம்பும் கறியாகும் ஏன்று. 94

2476 ஏன்றேன் அடிமை இழிந்தேன் பிறப்பிடும்பை
ஆன்றேன் அமரர்க் கமராமை, - ஆன்றேன்
கடன்நாடும் மண்ணாடும் கைவிட்டு, மேலை
இடநாடு காண இனி. (2) 95

2477 இனியறிந்தே னீசற்கும் நான்முகற்கும் தெய்வம்
இனியறிந்தேன் எம்பெருமான். உன்னை, - இனியறிந்தேன்
காரணன்நீ கற்றவைநீ கற்பவைநீ, நற்கிரிசை
நாரணன்நீ நன்கறிந்தேன் நான். (2) 96


திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (Naalaayira Divya Prabandham) - ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி






ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

மூன்றாம் திருவந்தாதி தனியன்

குருகை காவலப்பன் அருளிச் செய்தது

நேரிசை வெண்பா

சீராரும் மாடத் திருக்கோவ லூரதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு, - μராத்
திருக்கண்டேன் என்றுரைத்த சீரான் கழலே,
உரைக்கண்டாய் நெஞ்சே. உகந்து.



ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி

2282 திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று. (2) 1

2283 இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்,
பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய், - அன்று
திருக்கண்டு கொண்ட திருமாலே,உன்னை
மருக்கண்டு கொண்டேன் மனம். 2

2284 மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள்
தனத்துள்ளான் தண்டுழாய் மார்பன், - சினத்துச்
செருநர்உகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்,
வருநரகம் தீர்க்கும் மருந்து. 3

2285 மருந்தும் பொருளும் அமுதமும் தானே,
திருந்திய செங்கண்மா லாங்கே, - பொருந்தியும்
நின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,
அன்றுலகம் தாயோன் அடி. 4

2286 அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன்,
படிவண்ணம் பார்க்கடல்நீர் வண்ணம், - முடிவண்ணம்
μராழி வெய்யோ னொளியு மதன்றே
ஆராழி கொண்டாற் கழகு? 5

2287 அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம்,
அழகன்றே யண்டம் கடத்தல், - அழகன்றே
அங்கைநீ ரேற்றாற் கலர்மேலோன் கால்கழுவ,
கங்கைநீர் கான்ற கழல்? 6

2288 கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
கெண்ணற் கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம். 7

2289 நாமம் பலசொல்லி நாராய ணாவென்று,
நாமங்கை யால்தொழுதும் நன்னெஞ்சே. - வா,மருவி
மண்ணுலக முண்டுமிழ்ந்த வண்டறையும் தண்டுழாய்,
கண்ணனையே காண்கநங் கண். 8

2290 கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும்,
மண்ணளந்த பாதமும் மற்றவையே, எண்ணில்
கருமா முகில்வண்ணன் கார்கடல்நீர் வண்ணன்,
திருமா மணிவண்ணன் தேசு. 9

2291 தேசும் திறலும் திருவும் உருவமும்,
மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில்
வலம் புரிந்த வாஞ்சங்கம் கொண்டான்பே ரோத,
நலம்புரிந்து சென்றடையும் நன்கு. 10

2292 நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், - சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப் பார்
_ற்கடலான் _ண்ணறிவி னான். 11

2293 அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி. 12

2294 படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட - முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு. 13

2295 மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
_ற்பால் மனம்வைக்க நொய்விதாம், நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து. 14

2296 பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே - அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து. 15

2297 வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று. (2) 16

2298 சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், - என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய். 17

2299 வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின்
எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள். 18

2300 அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்? 19

2301 முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால்
பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே
திருமாலே.செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே. நீயிதனைப் பேசு. 20

2302 பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த்துழாய் மாலையான், - தேசுடைய
சக்கரத்தான் சங்கினான் சார்ங்கத்தான்,பொங்கரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. 21

2303 வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும்
கடியார் மலர்தூவிக் காணும் - படியானை,
செம்மையா லுள்ளுருகிச் செவ்வனே நெஞ்சமே,
மெய்ம்மையே காண விரும்பு. 22

2304 விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்
சுரும்பு தொளையில்சென் று-த, அரும்பும்
புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,
மனம்துழாய் மாலாய் வரும். 23

2305 வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும்,
நெருங்குதீ நீருருவு மானான், - பொருந்தும்
சுடராழி யொன்றுடையான் சூழ்கழலே, நாளும்
தொடராழி நெஞ்சே. தொழுது. 24

2306 தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம்,
முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட
வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்
சேயானை நெஞ்சே. சிறந்து? 25

2307 சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும்,
நிறைந்தசீர் நீள்கச்சி யுள்ளும், - உறைந்ததுவும்,
வேங்கடமும் வெகாவும் வேளுக்கைப் பாடியுமே,
தாம்கடவார் தண்டுழா யார். 26

2308 ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார்,
காரே மலிந்த கருங்கடலை, நேரே
கடைந்தானைக் காரணனை, நீரணைமேல் பள்ளி
அடைந்தானை நாளும் அடைந்து? 27

2309 அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று
மிடைந்தது பாரத வெம்போர், - உடைந்ததுவும்
ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே, வாளெயிற்றுப்
பேய்ச்சிபா லுண்ட பிரான். 28

2310 பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து,
ஆய்ச்சி முலைகொடுத்தாள் அஞ்சாதே, வாய்த்த
இருளார் திருமேனி இன்பவளச் செவ்வாய்,
தெருளா மொழியானைச் சேர்ந்து. 29

2311 சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம்
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு, - வாய்ந்த
மறையா டகம்அனந்தன் வண்டுழாய்க் கண்ணி,
இறைபாடி யாய இவை. 30

2312 இவையவன் கோயில் இரணியன தாகம்,
அவைசெய் தரியுருவ மானான், - செவிதெரியா
நாகத்தான் நால்வேதத் துள்ளான், நறவேற்றான்
பாகத்தான் பாற்கடலு ளான். 31

2313 பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும்,
_ற்கடலும் _ண்ணுல தாமரைமேல், - பாற்பட்
டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான்,
குருந்தொசித்த கோபா லகன். 32

2314 பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம்
மேலொருநா ளுண்டவனே மெய்ம்மையே, - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல்கடைந்து, வானமுதம்
அந்தரத்தார்க் கீந்தாய்நீ அன்று. 33

2315 அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல்,
நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய், - அன்று
கிடந்தானைக் கேடில்சீ ரானை,முன் கஞ்சைக்
கடந்தானை நெஞ்சமே. காண். 34

2316 காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு
பூண்டார் அகலத்தான் பொன்மேனி, - பாண்கண்
தொழில்பாடி வண்டறையும் தொங்கலான், செம்பொற்
கழல்பாடி யாம்தொழுதும் கை. 35

2317 கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம்,
வெய்ய கதைசார்ங்கம் வெஞ்சுடர்வாள், செய்ய
படைபரவ பாழி பனிநீ ருலகம்,
அடியளந்த மாயன் அவற்கு. 36

2318 அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான்,
உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், துவர்க்கும்
பவளவாய்ப் பூமகளும் பன்மணிப்பூ ணாரம்,
திகழும் திருமார்வன் தான். 37

2319 தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும்,
தானே தவவுருவும் தாரகையும், - தானே
எரிசுடரும் மால்வரையும் எண்டிசையும், அண்டத்
திருசுடரு மாய இறை. 38

2320 இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய்,
மறையாய் மறைப்பொருளாய் வானாய் - பிறைவாய்ந்த
வெள்ளத் தருவி விளங்கொலிநீர் வேங்கடத்தான்,
உள்ளத்தி னுள்ளே உளன். 39

2321 உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத் துளன்கண்டாய்,
விண்ணெடுங்கக் கோடுயரும் வீங்கருவி வேங்கடத்தான்,
மண்ணெடுங்கத் தானளந்த மன். 40

2322 மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும்,
துன்னு பொழிலனைத்தும் சூழ்கழலே, - மின்னை
உடையாகக் கொண்டன் றுலகளந்தான்,குன்றும்
குடையாக ஆகாத்த கோ. 41

2323 கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், மேவி
அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம். 42

2324 சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து,
புனமேய பூமி யதனை, - தனமாகப்
பேரகலத் துள்ளொடுக்கும் பேரார மார்வனார்,
μரகலத் துள்ள துலகு. 43

2325 உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ்
அலர்கதிரும் செந்தீயு மாவான், பலகதிர்கள்
பாரித்த பைம்பொன் முடியான் அடியிணைக்கே,
பூரித்தென் நெஞ்சே புரி. 44

2326 புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித்,
திரிந்து சினத்தால் பொருது, விரிந்தசீர்
வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே, மேலொருநாள்
மண்கோட்டுக் கொண்டான் மலை. 45

2327 மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,
தலைமுகடு தானொருகை பற்றி, அலைமுகட்
டண்டம்போய் நீர்தெறிப்ப அன்று கடல்கடைந்தான்,
பிண்டமாய் நின்ற பிரான். 46

2328 நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம்
சென்ற பெருமானே. செங்கண்ணா, - அன்று
துரகவாய் கீண்ட துழாய்முடியாய், நாங்கள்
நரகவாய் கீண்டாயும் நீ. 47

2329 நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று? 48

2330 செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மாநிலம், பின்னைக்காய் - முற்றல்
முரியேற்றின் முன்நின்று மொய்ம்பொழித்தாய்,மூரிச்
சுரியேறு சங்கினாய். சூழ்ந்து. 49

2331 சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால்,
தாழ்ந்த அருவித் தடவரைவாய், - ஆழ்ந்த
மணிநீர்ச் சுனைவளர்ந்த மாமுதலை கொன்றான்,
அணிநீல வண்ணத் தவன். 50

2332 அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான்,
அவனே யணிமருதம் சாய்த்தான், - அவனே
கலங்காப் பொருநகரம் காட்டுவான் கண்டீர்,
இலங்கா புரமெரித்தான் எய்து. 51

2333 எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்,
எய்தானம் மான்மறியை ஏந்திழைக்காய், - எய்ததுவும்
தென்னிலங்கைக் கோன்வீழச் சென்று குறளுருவாய்
முன்னிலம்கைக் கொண்டான் முயன்று. 52

2334 முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை,
இயன்றமரத் தாலிலையின் மேலால், - பயின்றங்கோர்
மண்ணலங்கொள் வெள்ளத்து மாயக் குழவியாய்,
தண்ணலங்கல் மாலையான் தாள். 53

2335 தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி,
கீளா மருதிடைபோய்க் கேழலாய், - மீளாது
மண்ணகலம் கீண்டங்கோர் மாதுகந்த மார்வற்கு,
பெண்ணகலம் காதல் பெரிது. 54

2336 பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,
கரிய முகிலிடைமின் போல, - தெரியுங்கால்
பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்
நீணெடுங்கண் காட்டும் நிறம். 55

2337 நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று,
இறையுருவம் யாமறியோ மெண்ணில், - நிறைவுடைய
நாமங்கை தானும் நலம்புகழ வல்லளே,
பூமங்கை கேள்வன் பொலிவு? 56

2338 பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்து
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே,
தெருடன்மேல் கண்டாய் தெளி. 57

2339 தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,
அளிந்த கடுவனையே நோக்கி, - விளங்கிய
வெண்மதியம் தாவென்னும் வேங்கடமே, மேலொருநாள்
மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு. 58

2340 வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்,
தாழும் அருவிபோல் தார்கிடப்ப, - சூழும்
திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்
பெருமான் அடிசேரப் பெற்று. 59

2341 பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு. 60

2342 பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், - வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன்விண் ணகர். (2) 61

2343 விண்ணகரம் வெகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62

2344 தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால், சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து. 63

2345 இசைந்த அரவமும் வெற்பும் கடலும்,
பசைந்தங் கமுது படுப்ப, - அசைந்து
கடைந்த வருத்தமோ கச்சிவெ காவில்,
கிடந்திருந்து நின்றதுவும் அங்கு? 64

2346 அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து,
மங்க இரணியன தாகத்தை, பொங்கி
அரியுருவ மாய்ப்பிளந்த அம்மா னவனே,
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து. 65

2347 காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள்,
ஏய்ந்த பணக்கதிர்மேல் வெவ்வுயிர்ப்ப, - வாய்ந்த
மதுகை டவரும் வயிறுருகி மாண்டார்,
அதுகே டவர்க்கிறுதி ஆங்கே. 66

2348 ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய்,
μங்கு கமலத்தி னொண்போது, - ஆங்கைத்
திகிரி சுடரென்றும் வெண்சங்கம், வானில்
பகரு மதியென்றும் பார்த்து. 67

2349 பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு,
பேர்த்தோர் கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு. 68

2350 ு வேங்கடம் பாடும், வியன்துழாய்க்
கற்பென்று சூடும் கருங்குழல் மேல், மற்பொன்ற
நீண்டதோள் மால்கிடந்த நீள்கடல்நீ ராடுவான்,
பூண்டநா ளெல்லாம் புகும். 69

2351 புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி
உகுமதத்தால் கால்கழுவிக் கையால், மிகுமதத்தேன்
விண்டமலர் கொண்டு விறல்வேங் கடவனையே,
கண்டு வணங்கும் களிறு. 70

2352 களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி,
ஒளிறு மருப்பொசிகை யாளி, - பிளிறி
விழ,கொன்று நின்றதிரும் வேங்கடமே, மேனாள்
குழக்கன்று கொண்டெறிந்தான் குன்று. 71

2353 குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை,
சென்று விளையாடும் தீங்கழைபோய், - வென்று
விளங்குமதி கோள்விடுக்கும் வேங்கடமே, மேலை
இளங்குமரர் கோமான் இடம். 72

2354 இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி,
வடமுக வேங்கடத்து மன்னும், - குடம்நயந்த
கூத்தனாய் நின்றான் குரைகழலே கூறுவதே,
நாத்தன்னா லுள்ள நலம். 73

2355 நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய்,
நிலமே புரண்டுபோய் வீழ, - சலமேதான்
வெங்கொங்கை யுண்டானை மீட்டாய்ச்சி யூட்டுவான்,
தன்கொங்கை வாய்வைத்தாள் சார்ந்து. 74

2356 சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்
ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, - சேர்ந்து
சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்
புனவேங்கை நாறும் பொருப்பு. 75

2357 பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து
நெருப்பிடையே நிற்கவும்நீர் வேண்டா - விருப்புடைய
வெகாவே சேர்ந்தானை மெய்ம்மலர்தூய்க் கைதொழுதால்,
அகாவே தீவினைகள் ஆய்ந்து. 76

2358 ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில்
வாய்ந்த குழவியாய் வாளரக்கன், - ஏய்ந்த
முடிப்போது மூன்றேழன் றெண்ணினான், ஆர்ந்த
அடிப்போது நங்கட் கரண். 77

2359 அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன்,
முரனாள் வலம்சுழிந்த மொய்ம்பன், - சரணாமேல்
ஏதுகதி ஏதுநிலை ஏதுபிறப் பென்னாதே,
μதுகதி மாயனையே μர்த்து. 78

2360 μர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து,
பேர்த்தால் பிறப்பேழும் பேர்க்கலாம், - கார்த்த
விரையார் நறுந்துழாய் வீங்கோத மேனி,
நிரையார மார்வனையே நின்று. 79

2361 நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள்,
ஒன்றியவீ ரைஞ்_ றுடன்துணிய, - வென்றிலங்கும்
ஆர்படுவான் நேமி அரவணையான் சேவடிக்கே,
நேர்படுவான் தான்முயலும் நெஞ்சு. 80

2362 நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன்
நெஞ்சமே. பேசாய் நினைக்குங்கால், நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என்கொலோ,
μராது நிற்ப துணர்வு? 81

2363 உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பரிய னுண்மை, - இணரணையக்
கொங்கணைந்து வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
எங்கணைந்து காண்டும் இனி? 82

2364 இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும்,
இனியவன் காண்பரிய னேலும், - இனியவன்
கள்ளத்தால் மண்கொண்டு விண்கடந்த பைங்கழலான்,
உள்ளத்தி னுள்ளே யுளன். 83

2365 உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத்
துளனாகத் தேர்ந்துணர்வ ரேலும், - உளனாய
வண்டா மரைநெடுங்கண் மாயவனை யாவரே,
கண்டா ருகப்பர் கவி? 84

2366 கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய்,
செவியினார் கேள்வியராய்ச் சேர்ந்தார், - புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே, - பின்னைக்காய்
ஏற்றுயிரை அட்டான் எழில்? 85

2367 எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத்
தொழில்கொண்டு தான்முழங்கித் தோன்றும், - எழில் கொண்ட
நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல,
கார்வானம் காட்டும் கலந்து. 86

2368 கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும், - நலந்திகழும்
கொந்தின்வாய் வண்டறையும் தண்டுழாய்க் கோமானை,
அந்திவான் காட்டும் அது. 87

2369 அதுநன் றிதுதீதென் றையப் படாதே,
மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற
பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்
முன்னங் கழலும் முடிந்து. 88

2370 முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம்
படிந்துழுசால் பைந்தினைகள் வித்த, - தடிந்தெழுந்த
வேய்ங்கழைபோய் விண்திறக்கும் வேங்கடமே, மேலொருநாள்
தீங்குழல்வாய் வைத்தான் சிலம்பு. 89

2371 சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா
றலம்பிய சேவடிபோய், அண்டம் - புலம்பியதோள்
எண்டிசையும் சூழ இடம்போதா தென்கொலோ,
வண்டுழாய் மாலளந்த மண்? 90

2372 மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி - கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன். 91

2373 மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன்,
மகனா மவன்மகன்றன் காதல் - மகனை
சிறைசெய்த வாணன்தோள் செற்றான் கழலே
நிறைசெய்தென் நெஞ்சே. நினை. 92

2374 நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால்,
அனைத்துலகும் உள்ளொடுக்கி ஆல்மேல், - கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை,
உள்ளத்தே வைநெஞ்சே. உய்த்து. 93

2375 உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி,
வைத்தவனை நாடி வலைப்படுத்தேன், - மெத்தெனவே
நின்றா னிருந்தான் கிடந்தானென் னெஞ்சத்து,
பொன்றாமை மாயன் புகுந்து. 94

2376 புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய்
இகழ்ந்த இரணியன தாகம், சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்தென் னெஞ்சமே. வாழ்த்து. 95

2377 வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே, - கேழ்த்த
அடித்தா மரைமலர்மேல் மங்கை மணாளன்,
அடித்தா மரையாம் அலர். 96

2378 அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய,
மலரெடுத்த மாமேனி மாயன், - அலரெடுத்த
வண்ணத்தான் மாமலரான் வார்சடையா னென்றிவர்கட்
கெண்ணத்தா னாமோ இமை? 97

2379 இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும்,
அமஞ்சூழ்ந் தறவிளங்கித் தோன்றும், - நமஞ்சூழ்
நரகத்து தம்மை நணுகாமல் காப்பான்,
துரகத்தை வாய்பிளந்தான் தொட்டு. 98

2380 தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்,
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று, - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு. (2) 99

2381 சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும், - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண்டா மரைநெடுங்கண்,
தேனமரும் பூமேல் திரு. (2) 100


பேயாழ்வார் திருவடிகளே சரணம்.