Saturday, December 31, 2011

2011 - Important News

ஜனவரி

1 - நடிகை மீனாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

2 - கவிஞர் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் நூல் வெளியீடு சென்னையில் நடந்த்து. முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். முதல் பிரதிநிதியை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பெற்றுக் கொண்டனர்.

10 - டிவி மற்றும் சினிமா காமெடி நடிகை ஷோபனா தற்கொலை செய்து கொண்டார்.

- வில்லன் நடிகர் வேலு தனக்குத் தொல்லை தருவதாக மலையாளத்திலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவரான நடிகை பாக்யாஞ்சலி போலீஸில் புகார் கொடுத்தார்.

14 - இசைஞானி இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கப்படுவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

27 - பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்தது.

28 -நடிகர்கள் ஆர்யா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்தது.

29 - நித்தியானந்தாவுடன் அந்தரங்க கோலத்தில் இருந்தது தொடர்பாக பெங்களூர் கோர்ட்டில் திடீரென ஆஜராகி ரகசிய வாக்குமூலம் கொடுத்தார் நடிகை ரஞ்சிதா.

பிப்ரவரி

6 - நடிகர் எஸ்.வி.சேகர், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

20 - பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் மரணமடைந்தார்.

மார்ச்

23 - தனது கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மலையாள நடிகை ஜோதிர்மயி கோர்ட்டில் வழகக்குத் தொடர்ந்தார்.

24 - எஸ்.பி.பாலசுப்ரமணியன், நடிகை தபு, நடிகர் ஜெயராம் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

26 - சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அறிவித்தது.

30 - வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்தி நடிகர் ஷைனி அகுஜாவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது மும்பை கோர்ட்.

ஏப்ரல்

3 - திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்ற நடிகர் வடிவேல் மீது கமுதி பஸ் நிலையத்தில் கல்வீசித் தாக்குதல் நடந்தது.

6 - நடிகை சுஜாதா சென்னையில் மரணமடைந்தார்.

12 - ஐ.நா. அமைப்பின் இளைஞர் தூதராக நடிகர் விக்ரம் தேர்வானார்.

13 - சபரிமலையில் ஐயப்பன் சிலையைத் தொட்டதாக கன்னட நடிகை ஜெயமாலா மீது தொடரப்பட்ட வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

14 - துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி பின்னணிப் பாடகி சித்ராவின் மன வளம் குன்றிய மகள் மரணமடைந்தார்.

22 - பச்சைப் புரட்சி எனும் புதிய அமைப்பைத் தொடங்கினார் நடிகர் விக்ரம். இந்த அமைப்பு மூலம் தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1 லட்சம் மரங்களை நட அவர் திட்டமிட்டுள்ளார்.

- சர்வதேச அளவிலான திரைப்பட வர்த்தகத்தை நம் வசப்படுத்த தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகம் இணைந்து செயல்பட வேண்டும்', என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

- பிபிசியில் நிருபராக பணியாற்றி வரும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரியா மேனனுக்கும், மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இன்று படு ரகசிய்மாக திருமணம் நடந்தது.

29 - இயக்குநர் கே.பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

- ரஜினியின் ராணா படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று காலை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது.

- ராணா படப்பிடிப்பு தொடங்கியதுமே ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- தமிழக சினிமா ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை கூண்டோடு கலைப்பதாக நடிகர் அஜீத் அறிவித்தார்.

- என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கையில் கேட்டார்.

மே

14 - உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த், இசபெல்லா மருத்துவமனையிலிருந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

17 - சுவாசக் கோளாறு, குடல் நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

- நடிகர் வடிவேலுவின் பண்ணை வீடு தாக்கப்பட்டது.

19 - 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. நடிகர் தனுஷுக்கு ஆடுகளம் படத்தில் நடித்ததற்கா சிறந்த நடிகர் விருதும், தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. தமிழ்த் திரைப்படங்கள் மொத்தமாக 14 விருதுகளை அள்ளின. அதில் ஆடுகளம் படத்திற்கு மட்டும் 6 விருதுகள் கிடைத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தென் மேற்குப் பருவக் காற்று 3 விருதுகள் பெற்றது. எந்திரன் படத்துக்கும் 2 விருதுகள் தரப்பட்டன.

27 - சிறுநீரக பாதிப்புக்காக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த்தும், அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றனர்.

ஜூன்

3 - நடிகர் கார்த்திக்கும், ரஞ்சனிக்கும் கோவையில் திருமணம் நடந்தது.

- இயக்குநர் செல்வராகவனுக்கு சென்னையில் இரண்டாவது திருமணம் நடந்தது. மணமகள் பெயர் கீதாஞ்சலி.

15 - சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவை போனில் தொடர்பு கொண்டு தமிழக மக்களை காப்பாற்றியதாக கூறினார். அடுத்து கருணாநிதியைத் தொடர்பு கொண்டு தேர்தல் தோல்விக்கு ஆறுதல் கூறினார்.

ஜூலை

7 - பிரபுதேவாவுக்கும், அவரது மனைவி ரமலத்துக்கும் சென்னை குடும்ப நல கோர்ட் விவாகரத்து வழங்கியது.

13 - 46 நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.அவருக்கு விமான நிலையத்தில் பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.

25 - பழம்பெரும் தமிழ் நடிகர் ரவிச்சந்திரன் மரணமடைந்தார்.

26 - தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது, வன்முறை, ஆபாசம் போன்றவையும் இல்லாமல் இருந்தால்தான் தமிழ்ப் படங்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

27 - நடிகை வனிதாவின் 2வது கணவர் ஆனந்தராஜு, வனிதாவை விட்டு பிரிந்தார்.

28 - அம்புலி படத்தின் நாயகன் அஜய் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.

ஆகஸ்ட்

1 - மோசடியாக தனது நிலத்தை அபகரித்து விட்டார் நடிகர் வடிவேலு என்று ஓய்வு பெற்ற வங்கிஅதிகாரி பழனியப்பன் சென்னை போலீஸில் புகார் கொடுத்தார்.

8 - நடிகை நயனதாரா, பிரபுதேவாவை மணப்பதற்காக இந்து மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகின.

14- பிரபல இந்தி நடிகர் ஷம்மி கபூர் மரணமடைந்தார்.

25 - ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹஸாரேவை நேரில் சென்று நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

செப்டம்பர்

1 - இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, திருப்பதியில் 2வது திருமணம் நடந்தது.

9 - பழம்பெரும் நடிகை காந்திமதி புற்றுநோயால் மரணமடைந்தார்.

13 - ஸ்ரீபெரும்புதூர் அருகே பண்ணை வீட்டில் நடிகை விசித்ராவின் தந்தை முகமூடிக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

15 - எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறி பரபரப்பு புகாரைக் கூறினார் கவர்ச்சி நடிகை சோனா.

21 - தனது மனைவி ஜமுன கலாதேவியை பாடலாசிரியர் சினேகன் அபகரித்துக் கொண்டதாக சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற என்ஜீனியர் போலீஸில் புகார் கொடுத்தார்.

29 - உடல் நல பாதிப்பிலிருந்து மீண்ட பின்னர் முதல் முறையாக எஸ்.பி.முத்துராமனுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்.

அக்டோபர்

20 - தனது மகன் தனக்கு சாப்பாடு போடாமல் புறக்கணிப்பதாக பழம்பெரும் காமெடி நடிகர் லூஸ் மோகன் போலீஸில் புகார் கொடுத்தார்.

27 - நடிகை மனோரமாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

31 - நடிகர் ஷக்திக்கும், ஸ்மிருதிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

நவம்பர்

1 - இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா மரணமடைந்தார்.

- மனோரமாவுக்கு தலையில் ஆபரேஷன் நடத்தப்பட்டது.

7 - சிவாஜிகணேசன் பேரன் துஷ்யந்த்துக்கும், அபிராமிக்கும் திருமணம் நடந்தது.

16 - நடிகரும்,திமுக எம்.பியுமான ரித்தீஷ் குமார், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

19 - பாலிவுட் நடிகை ஐஸ்வர் ராய்க்கு மும்பை மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை சுகப் பிரசவமாக பிறந்தது.

30 - சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகை ராதிகா சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- ரூ 20 லட்சம் கடனுக்காக ரூ 1.5 கோடி சொத்துக்களை மிரட்டிப் பறித்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில், பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் கைது செய்யப்பட்டார்

டிசம்பர்

1 - இந்தி நடிகர் ஆமிர்கான் - கிரண் ராவ் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

- பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவுக்கும் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தி உபாஸனாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்தது.

- 2-வது திருமணத்துக்கு வற்புறுத்தி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நடிகர் தேவ் ஆனந்துக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு கடுங்காவல் தண்டனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

- பழம்பெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் காலத்தில் இருந்து திரைப்படங்களில் மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவராக பணிபுரிந்த புலிக்குட்டி கோவிந்தராஜ் மரணமடைந்தார்.

- வாடகைக்கு எடுத்த காரை, திருப்பிக் கொடுக்காமல் 10 மாதங்களாக தன்னிடமே வைத்துக் கொண்டுள்ளார் என நடிகை புவனேஸ்வரி மீது போலீஸில் புகார் தரப்பட்டது.

- இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் திரைப்படங்கள் சார்ந்த ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாடு சென்னையில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் இன்று தொடங்கியது.

2- காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அண்ணன் ஒரு கோவில், மூன்று முடிச்சு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சொர்ணா.

- பிரபல திரைப்பட விநியோகஸ்தரான மதுரை அன்புச் செழியன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

3 - நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கைது செ‌ய்ய‌ப்ப‌ட நடிகரும், தி.மு.க. எ‌ம்.‌பி.யுமான ரித்தீஷ் குமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்

- பைனான்சியர் அசோக்குமாரிடம் காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதை அவர் கேட்டபோது ஆள் வைத்துத் தான் தாக்கியதாக கூறப்படும் புகாரை நடிகை புவனேஸ்வரி மறுத்தார்.

- ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் குழந்தையின் படத்தை வெளியிட ரூ 5 கோடி தருவதாக இரு பத்திரிகைகள் அமிதாப் பச்சனிடம் பேரம் பேசின. ஆனாலும் குழந்தையின் படத்தை பிரசுரிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்தார் அமிதாப்.

- தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்தது.

4 - 88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

- உயிரே என்னோடு கலந்து விடு படத்தின் நாயகி அமலு, தன்னுடன் நடித்த ஹீரோவான டோனி என்கிற அந்தோணியை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து கல்யாணம் செய்து கொண்டார்.

- பாகிஸ்தானின் சர்ச்சை நடிகை வீணா மாலிக் எப்எச்எம் இந்தியா இதழுக்காக அவர் முழு நீள நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். தனது இடது தோள்பட்டையில் ஐஎஸ்ஐ என்று பாகி்ஸ்தான் உளவு அமைப்பின் பெயரை முத்திரை குத்தியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 - தன்னுடைய ஆபாசப் படத்தை வெளியிட்டு தனது புகழுக்கு களங்கம் கற்பித்ததற்காக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரி எப்எச்எம் இந்தியா இதழுக்கு பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நோட்டீஸ் அனுப்பினார்.

- முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை தீர்க்கக் கோரி கேரள நடிகர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

- தனது பெயரை யாரும் படங்களுக்கு வைக்கக் கூடாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தியுள்ளதாக அவரது உதவியாளர் சுதாகர் அறிவித்தார்.

18 - சென்னையில் மகாத்மா காந்தி பற்றிய சினிமாவைப் பார்க்க வந்த அன்னா ஹஸாரேயைச் சந்தித்துப் பேசினார் நடிகர் அர்ஜூன்.

20 - விண்ணைத்தாண்டி வருவாய் படத்தின் இந்தி ரீமேக்கின் இசை வெளியீட்டு விழா ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் எதிரே நடக்கவிருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது.

- திருநெல்வேலியில் நடிகை பத்மப்ரியாவின் மலையாளப் படப்பிடிப்பு நடத்த தமிழ் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், படப்பிடிப்புக் குழு அங்கிருந்து வெளியேறியது.

21 - தி டர்ட்டி பிக்சர் படத்தில் ஆபாசமாக நடித்ததாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் பதில் மனு தாக்கல் செய்தார்.

22 - கேரள மாநிலம் கருநாகப்பள்ளி அருகே கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் பயணி பலியான சம்பவம் தொடர்பாக மலையாள நடிகை சங்கீதா மோகன் கைது செய்யப்பட்டார்.

- சென்னையில் நடந்த சர்வதேச படவிழாவில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை மற்றும் ஆடுகளம் படங்களுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

23 - தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்தார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறினார்.

24 - தான் நடிக்கும் படங்களிலெல்லாம் சாமி கும்பிடுபவர்களையும், வாஸ்து உளளிட்டவற்றை நம்புபவர்களையும், கடவுள் பக்தி உள்ளவர்களையும் சரமாரியாக விமர்சிக்கும், நக்கலடிக்கும், கிண்டலடிக்கும் காமெடி நடிகர் விவேக், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப் போய் சாமியை பய பக்தியுடன் வணங்கி விட்டு வந்தார்.

- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா கோஷ்டி ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்துள்ள புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கவிருந்ததை ரத்து செய்துவிட்டதாக நடிகர் ஜீவா அறிவித்தார்.

25 - கேரளாவைச் சேர்ந்த மலபார் கோல்ட் நிறுவனத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்று கோரி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்பு பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தனர்.

- மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று பொதுக் கூட்டம் நடந்தது. இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- டேம் 999 படம் ஆஸ்கர் விருது பெற வாழ்த்தது தெரிவித்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் தெரிவித்தார். தனக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்துத் தெரியாது என்றும் தவறாக கருத்து தெரிவித்திருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார் அவர்.

26 - சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்ட10 பேர் மீது திடீரென சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

27 - வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

28 - கந்தா என்ற படத்தைத் தயாரித்த பழனிவேல் என்பவரின் மனைவி கல்பனாவுக்கு எதிராக தொடரப்பட்ட செக் மோசடி வழக்கில், அவரைக் கைது செய்ய சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட் உத்தரவிட்டது.

- ரூ 6 லட்சம் பணத்துக்காக கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பிய வழக்கில் பிரபல இயக்குநர் சரணை கைது செய்ய சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

- ரஜினியை விமர்சித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினர் வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள்.

- பிரபல நடிகை பிரதியூஷா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருடைய காதலருக்கு விதிக்கப்பட்ட கடுங்காவல் தண்டனையை 2 ஆண்டாக ஆந்திர உயர்நீதிமன்றம் குறைத்தது. ஆனால், அபராத தொகையை மட்டும் ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரித்து உத்தரவிட்டது.

- பிரதமர் மன்மோகன் சிங். ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் கொலவெறி பாடலை எழுதிய தனுஷும் கலந்து கொண்டார்.

30 - இந்த ஆண்டில் முதல் முறையாக இன்று ஒரே நாளில் 13 திரைப்படங்கள் ரிலீஸாகின.

Thursday, December 29, 2011

திருப்பாவை 13. பரந்தாமன் புகழ் பாட அழைத்தல்

Lord Krishna with Radha

திருப்பாவை 13. பரந்தாமன் புகழ் பாட அழைத்தல்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமைப் பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவை களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண்; போது அரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்!

பொருள்: நம் பெருமாள் பறவை வடிவாக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அவனைக் கொன்றவர், மைதிலியைக் கவர்ந்த பொல்லா ராவணனின் பத்துத் தலைகளையும் கிள்ளி அவனை அழித்தவருமான அந்த பரந்தாமனின் வீரப் புகழைப்பாடிக் கொண்டு பாவைமார்களாகிய நம் தோழிகள் அனைவரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்று விட்டனர்.

விடி வெள்ளி தோன்றி விட்டது, வியாழம் மறைந்து விட்டது. விடியலை அறிவிக்க பறவைகள் கூவுகின்றன; மலர் போன்ற அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே! நீ இன்னும் படுக்கையில் கிடக்கின்றாயே! இந்த நல்ல நாளில் உன்னுடைய கள்ளத்தனத்தை விட்டு விட்டு எங்களுடன் கலந்து குளிரக் குளிர பொய்கையில் மார்கழி நீராட எழுந்து வாடி என் கண்ணே!

திருவெம்பாவை 13. செந்தாமரை மலர் மேனியன் சிவன்

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்குருகு இனத்தால் பின்னும் அரவத்தால்
தங்கண் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்புகலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்க
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.

பொருள்: பொய்கையில் பூத்துள்ள இந்தக் கருமையான குவளை மலர்கள் எம்பிராட்டியைப் போல உள்ளன. அதில் பூத்துள்ள செந்தாமரை மலர்கள் எம்பெருமானின் செம்மேனியை நினைவுபடுத்துகின்றன.

அங்கு திரியும் பறவைக் கூட்டம் பெருமான் அணிந்துள்ள குருக்கத்தி மாலையையும், அம்பிகையின் திருமேனியில், திருக்கைகளில் அணிந்துள்ள வளையல் கூட்டத்தால் எங்கள் பிராட்டி போன்று போன்று இசைந்தபொங்கு மடு. மனிதப் பிறவிகளின் மும்மலம் - மாயை, கன்மம், ஆணவம் - நீக்க வந்து சேர்பவர்களினால் எம்கோனும் எம் பிராட்டியும் போன்று இசைந்த பொங்கு மடு.

இத்தகைய பொங்கு மடுவில் பாய்ந்து, பாய்ந்து கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், காற்சிலம்புகள் கலந்து ஆரவாரம் செய்யவும், கொள்ளும் கைகள் பூரிப்படையவும், அந்த கைகளால் குடைகின்ற பொய்கை நீர் மேலோங்கவும், இந்த தாமரைப் பூங்குளத்து நீரில் பாய்ந்து நீராடுவோம் எல்லோரும் பாவை விளையாட்டு.

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.




கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி.....

முதலில் இவர்கள் கேட்கும் கேனைத்தனமான கேள்விகளுக்கு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்பவேண்டும் அதை அனுப்ப ரூபாய் 3 முதல் ஐந்து வரை வசூலிக்கப்படுகிறது அது போக அவர்களை தொடர்புகொள்ள சில ஸ்பெஸல் நம்பர்கள் உள்ளன இது ஒரு நிமிடத்திற்க்கு ரூபாய் 6.99 வரை சார்ஜ் செய்யபடுகிறது.... இவர்கள் தினமும் 30 - 35 கோடி வரை இந்த குறுஞ்செய்தி மற்றூம் டெலிபோன் காலில் சம்பாதிகின்றனர். அதாவ்து பப்ளிக் டெலிபோனிலிருந்து நீங்கள் போன் செய்தால் அது செல்லாதாம், ஆபிஸில் இருந்து போன் செய்தாலும் செல்லாதாம், வீட்டில் மட்டும் இருந்துதான் போன செய்யவேண்டுமாம் அப்பதான் உங்கள் டெலிபோன் பில்லில் இந்த கொள்ளை சார்ஜ் வரும் நீங்களும் பணம் கட்ட வேண்டும்.... இது ஒரு லாட்டரி பிஸினஸை விட மிக பெரிய கொள்ளை ஆம் 35 கோடி இதன் மூலம் வருமானம் மற்றும் விளம்பரம் எல்லாம் சேர்த்து ஒரு நாளைக்கு 40 கோடிக்கு மெல் வருமானம், இதை நம் தமிழ் ஹீரொ வக்காலத்து வாங்கும் காரணம் அவருக்கு டெய்லி ஒரு கோடி ரூபாய் அதனால் நம்ம மக்கள் முட்டாள் ஆனால் அவருக்கென்ன கவலை தமிழனுக்கு இந்த படம் பார்த்தால் திமிறு வரும்னு சொல்லி மிளகாய் அரைச்சாச்சு இப்ப இந்த குறுஞ்செய்தி, ஸ்பெஸல் நம்பர் டெலிபோன் கால் மூலம் தினமும் கொள்ளை, இதில் குளிர்காய்பவர்கள் அன்றாடம் காய்ச்சிகள் இல்லை அம்பானியும், முட்ராக்கும், சூர்யாவும்தான்.

இந்த 37 பக்க கேமின் டெர்ம்ஸ் அன்ட் கன்டிஷன்ஸ் (Terms & Conditions) படியுங்கள் (www.asknagravi.com/orukodi) அப்புறம் நீங்கள் முடிவு செய்யுங்கள், இல்லை நான் என் காசை கரியாக்கியே தீருவேன் என்று கங்கனம் கட்டி கொண்டு குறுஞ்செய்தி அல்லது கால் பண்ணினால் "ஒன்னும் செய்யமுடியாது". உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்க்கு இந்த ஸ்பெஸல் நம்பர் டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேனும்..... தயவு செய்து வீட்டில் இருக்கும் டெலிபோனை பூட்டி வையுங்கள், குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள் போன் பண்னவேண்டாம் என்று மொபைல்களை தெரியாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்.... தயவு செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிருங்கள் மக்களுக்கு உண்மைகளை எடுத்து சொல்லுங்கள் நான் பப்ளிக் லிட்டிகேஷன் போட முயற்ச்சி செய்கிறேன்,

Wednesday, December 28, 2011

100 ஆண்டுகள் கடந்தும் இளமையாய் இருக்கும் ‘தேசிய கீதம்’!

நம் நாட்டின் பெருமைமிக்க தேசிய கீதம் ஜனகணமன இசைக்கப்பட்டு இன்றோடு நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மகாகவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதையானது இந்தியர்களின் உணர்வோடும், உயிரோடும் கலந்து தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியத் தாயே ! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனத்திலும் ஆட்சி செய்கின்றாய் என்ற பொருளோடு தொடங்கும், ‘ஜன கண மன அதி நாயக ஜய ஹே பாரத பாக்ய விதாதா’ நமது தேசிய கீதம், இந்தியர்கள் ஒவ்வொருவரின் சுவாசத் தோடு கலந்தது.

இந்தியத் தாய்க்கு என்றுமே வெற்றிதான் என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கின்ற இந்த பாடலை தீர்க்க தரிசனத்தோடு இயற்றிய மகாகவி ரவீந்திரநாத் தாகூர். அவர் எழுதிய இக்கவிதை ரவீந்திரநாத் பொறுப்பு வகித்த “தத்வ போத பிரகாசிக’ என்ற நாளிதழில் பிரசுரப்படுத்தப்பட்டிருந்தது. ஐந்து பகுதிகளில் பங்காளி மொழியில் எழுதப்பட்ட கவிதையில் இருந்த முதற்பகுதி தான் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது.

முதன் முதலாக பாடப்பட்டது

1911 டிசம்பர் 27ம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்தியன் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதலாவதாக ஜனகணமன பாடப்பட்டது. முதலாவதாக காங்., மாநாட்டில் பாடும் போது பாரதவிதாத் என பெயரிடப்பட்டிருந்தது. சுதந்திரப்போராட்ட கால கட்டங்களில் இந்தியர்களின் தேசபக்தி பாடலாக இசைக்கப்பட்டிருந்த இப்பாடல், 1950 ஜனவரி 24ம் தேதி நமது தேசிய கீதமாக அங்கிகரிக்கப்பட்டது.

சங்கராபரணம் ராகத்தில் 52 நொடிகளில் பாட வேண்டிய தேசிய கீதத்தை ரவீந்திரநாத் தாகூர் தான் இசை அமைத்தார் என பொதுவாக கூறப்படுகிறது. எனினும் சுபாஷ் சந்திரபோஸின் சீடரும், ஐ.என்.ஏ., படையாளியுமான கேப்டன் ராம்சிங் தாகூர் தேசிய கீதத்திற்கு இசை அமைத்தார் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். ரவீந்திரநாத் தாகூர் தான் இசை அமைத்தார் என்பதே இந்திய அரசின் நிலைபாடு.

வந்தே மாதரம்

ஜனகணமனவிற்கு முன்பாகவே பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தேமாதரம் 1886ல் கொல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதலாவதாக பாடப்பட்டிருந்தது. ஆங்கிலேய ஆட்சியில் பிரிட்டனின் தேசிய கீதமான “கோட் சேவ் த கியூன்’ இந்தியாவிலும் கட்டாயமாக்க முயன்ற போது வந்தேமாதரமும், ஜனகணமனவும் இம்முயற்சிகளை தடை செய்தது.

1950 ஜனவரி 24ம் தேதி நடந்த கூட்டத்தில் தேசிய கீதம் தேர்வு செய்யப்படும் போது ஜனகணமனவுடன் வந்தே மாதரம் பாடலும் பரிந்துரைக்கப்பட்டது. பல விவாதங்களுக்கு பின் ஜனகணமன தேர்வு செய்யப்பட்டது. டாக்டர் ராஜேந்திரபிரசாத் தேசிய கீதமாக ஜனகணமன தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். பின் வந்தேமாதரத்திற்கும் இணையான முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

நூற்றாண்டை கடந்தும் இளமை

ஆந்திராவில் உள்ள சிற்றூரில் பசன்ட் தியோசபிக்கல் கல்லூரி முதல்வராக ஐரிஷ் கவிஞர் ஜெயிம்ஸ் கஸின்ஸின் வேண்டுகோள் படி 1919ல் அங்கு சென்று தாகூர் ஜனகணமன பாடினார். இப்பாடலின் உட்கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கல்லூரியின் பிரார்த்தனை பாடலாக தேர்வு செய்தனர். அவர்களின் வேண்டுகோள் படி தாகூர் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்தார்.

கல்லூரி முதல்வர் கஸின்சின் மனைவியும், இசைமேதையுமான மார்கரட் இதற்கு இசை அமைத்து “த மோர்னிங் சாங் ஆப் இந்தியா’ என்று பெயர் சூட்டினார். தேசிய கீதம் பாடப்பட்டு இன்றோடு நூறு ஆண்டு நிறைவடைந்து விட்டது. இந்தியர்களின் தேசப்பற்றினை பறைசாற்றும்‌ தேசிய கீதம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றைக்கும் இளமையாக ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

திருப்பாவை 12. ராகவனைப் பாட எழுப்புதல்

Lord Krishna

திருப்பாவை 12. ராகவனைப் பாட எழுப்புதல்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனதுக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே!

மார்கழி மாதத்து பனி எங்கள் தலையின் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தினால் அழித்த ராமபிரானை, ராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை அனைவரும் வாயாறப் பாடுகின்றோம்.

அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக் கிடக்கின்றது உனக்கு? எழப் போகிறாயா இல்லையா?

திருவெம்பாவை 12. திருவிளையாடல் புரியும் ஐயன்

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைசிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டுஆர்ப்ப
பூத்திகழும் பொய்கைகுடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்திஇரும் சுனைநீர் ஆடு ஏலோர் எம்பாவாய்!

பொருள்: நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார். இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தைம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன்.

அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நமக்குரிய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரில் நாம் மார்கழி நீராடுவோமாக!

திருப்பாவை 11. முகில்வண்ணனின் பெருமையை கூறல்

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாம் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே!

நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

திருவெம்பாவை 11. நல்வழி காட்டும் பெருமான்

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன
கையார் குடைந்து குடைந்து உன் கழல் பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்! ஆரழல் போல்
செய்யாவெண் நீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மைஆர் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்!

பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களையும் உடையவனே! உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே!

ஐயனே! வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில், குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து, வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம்.

எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம். எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!

திருப்பாவை 10. பேரின்பம் நல்கும் நாராயணன்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: விரதமிருந்து சொர்க்கத்திற்கு போகும் அம்மையே, நாங்கள் பலமுறை கூப்பிட்டும் கதவைத்தான் திறக்க மறுக்கிறாய், பதில் மொழி கூடவா கூறக் கூடாது..?

புண்ணிய மூர்த்தியாகிய ராமபிரானால் முன்னொரு காலத்தில் எமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், உறங்கும் போட்டியில் உன்னிடம் தோற்று அவனுடைய பேருறக்கத்தை உனக்கு கொடுத்து விட்டானோ?

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவளே! பெறர்கரிய ஆபரணம் போன்றவளே! வாசம் மிகுந்த துளசி மாலையை திருமுடியில் அணிந்துள்ள நாராயண மூர்த்தி நம் நோன்புக்கு பரிசாக பேரின்பத்தை நல்குவான். எனவே உறக்கம் தெளிந்து வந்து கதவைத் திறடி.

திருவெம்பாவை 10. அண்ணாமலையின் பெருமை கேட்டல்

பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாதமலர்
போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழ்ன் தொண்டர் உளன்
கோதுஇல் குலத்துஅரன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!
ஏதுஅவன் ஊர் ஏதுஅவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதுஅவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்!

பொருள்: சிவபெருமானின் திருக்கோவிலை சார்ந்து வாழும் குற்றமற்ற குலத்தில் தோன்றிய கோயிற்ப் பணிப் பெண்களே!

அரியும் அயனும் அடி முடி காண முடியா அனற்பிழம்பாக, திருவண்ணாமலையாக, லிங்கோத்பவராக நின்ற எம்பெருமானின் வீரக் கழலணிந்த திருவடி மலர்ப் பாதங்கள் பாதாளம் ஏழுக்கும் கீழே சொற்களைக் கடந்த எல்லையில் உள்ளன. கொன்றை, ஊமத்தை, சந்திரன், கங்கை அணிந்த அவரது திருமுடி மேலோர்க்கும் மேலாக, எல்லாவற்றிக்கும் மேலாக அண்டங் கடந்து விளங்குகின்றது.

அவன் மாதொரு பாகன், மங்கை கூறன், மாவகிடண்ண கண்ணி பங்கன், ஆதலால் திருமேனி ஒன்று உடையவனல்லன். எல்லாப் பொருள்களிலும் பரவி உள்ளவன். அவன் மறைக்கும் முதல்வன். விண்ணகத்தாரும், மண்ணகத்தாரும், அளவிறந்த காலமாக எந்தெந்த முறையில் பரவிப் புகழ்ந்தாலும் வரையறுத்து புகழ முடியாத உயிர்த்துணைவன்.

அந்தப் பெருமானின் ஊர் யாது? பேர் யாது? அவருக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவரைப் பாடும் தன்மை எப்படி? அன்புடன் கூறுவீர்களா?

திருப்பாவை – 9. எம்பெருமானை காண எழுப்புதல்

Kannan with Radhai

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரோ? உம் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம். அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர, அழகிய தூபம் மணக்க, அங்கு போடப்பட்டுள்ள சப்பர மஞ்சத்தில் ஒய்யாரமாக தூங்கும் மாமன் மகளே, எழுந்து வந்து கதவைத் திறக்க மாட்டோயோ!

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நித்திரையில் இருக்கிறாள். அவள் என்ன ஊமையா, செவிடா, ஓயாத தூக்கத்தில் இருக்கிறாளா? அல்லது மந்திரத்தினால் கட்டுண்டு?

மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.


திருவெம்பாவை – 9. சிவனடியார்களை போற்றுவோம்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

பொருள்: இந்த பிரபஞ்சம் முழுவதையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடும் எம்பெருமானே, நீவிர் முன்னரே தோன்றிய பழமையான எல்லா பொருட்களுக்கும் முற்பட்ட பழம் பொருள். அவ்வாறே பின்னே தோன்றிய புதுமைப் பொருட்களுக்கெல்லாம் புதுமையாக தோன்றும் தன்மையன்.

உன்னை இறைவனாக பெற்ற நாங்கள்; உன் சிறந்த அடியார்களாவோம். ஆதலால் உன்னுடைய அடியார்களது திருவடிகளை வணங்குவோம். அங்ஙனமே அவர்களுக்கே உரிமையுடையவர்களாவோம், அந்த சிவனடியார்களே எங்களது கணவர்கள் ஆவார்கள். அவர்கள் விரும்பி கூறும் முறையிலே அடிமைப் பணி செய்வோம். எங்கள் அரசே! இந்த வகையான வாழ்க்கையை எங்களுக்கு நீங்கள் அருளுவீர்களானால் எந்த குறையும் இல்லாதவர்களாவோம்!

Saturday, December 24, 2011

அஞ்சனை மைந்தனின் அவதாரம் போற்றுவோம்

ஆண் மூலம் அரசாளும் என்பார்கள், மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த ஆஞ்சநேயர் அயோத்தியை ஆண்ட ராமனின் நெஞ்சத்தையே ஆண்ட பெருமைக்குறியவர். வீரத்தின் விளைநிலமாய், விஸ்வரூபமாய் நின்றவரை அவரது அவதாரநாளில் போற்றி வணங்குவது சிறப்பாகும்.

ராமன் நாமம் ஒலிக்கும் இடம்

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். எங்கெல்லாம் ஆஞ்சநேயர் இருக்கின்றாரே அங்கே வெற்றியைத் தவிர வேறொன்றும் இராது என்பது நம்பிக்கையாகும்.

புராணங்களில் அஞ்சனை மைந்தன்

அஞ்சனை மைந்தன் என்றும் வாயு புத்ரன் என்றும் அழைக்கப்படும் ஆஞ்சநேயர், ராமாயணத்தில் ராமனுக்கு தொண்டனாய் இருந்தவர். கடல் கடந்து சென்று சீதையை அடையாளம் காட்டியவர். கானகத்தில் இருந்து நாடு திரும்பிய ராமன், அரியணையில் அமர்ந்த போது பாதம் தொட்டு பணிந்தவர் அனுமன்.

சைவத்தில் சிவனானவர்

அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர் என்கின்றனர். ராமாயணத்தில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசை ஏற்பட்டது. அத்துடன் மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும் இருந்து வந்தது. இதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து ராமாயணத்தில் ராமருக்கு சேவை செய்தார் என்கின்றன புராணங்கள். எனவே ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் இணைந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

சனி பகவானை கலங்கச் செய்தவர்

எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு. எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

நினைத்தது கைகூடும்

ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும்; குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வடமாநிலங்களில் அனுமன் ஜெயந்தி சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, போன் தென் மாநிலங்களில் மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அவதார நாள் கொண்டாடப்படுகிறது. சிரஞ்சீவியான அனுமார் இன்றும் நம்முடன் இருக்கிறார். எனவே அவரது அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் தலத்திற்கு சென்று அனுமன் காயத்ரி சொல்லி அவரது அருள்பெறுவோம். அத்துடன் அவரது புகழ்பரப்பும் அனுமன் சாலீஸா பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. ஸ்ரீராம ஜெயம் என்று நாள் முழுவதும் ஜெபிப்பதும் நன்மை தரும். ராமநாமம் ஜெபிப்போம் அனுமன் அருள் பெருவோம்.

திருப்பாவை 8. வேண்டும் வரம் அருளும் வரதராஜன

கீழ்வானம் வெள்ளன் எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரை போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு

மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்!


பொருள்: மன மகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே மேய்ச்சலுக்குப் போய் விட்டன.பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு நமது தோழியர்கள் போய் விட்டனர். மீதமுள்ளவர்களும் அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஆனாலும் உன்னையும் அழைத்துப் போக வேண்டும் என்பதற்காக அவர்களையும் போக விடாமல் காத்திருக்க வைத்து உன்னை அழைக்க வந்து நிற்கிறோம்.காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!

நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர். தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி வா! வா! என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!


திருவெம்பாவை 8 ஒப்பற்ற தலைவனான சிவன்

கோழி சிலம்ப சிலம்புங் குருகெங்கும்

ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

கேழில் விழுப் பொருளை பாடினோம் கேட்டிலையோ?

வாழியீதெனன உறக்கமோ? வாய் திறவாய்

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

ஏழைப் பங்காளனையே பாடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: நற்காலை பொழுது விடிந்து விட்டது, கோழிகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன. சிறு பறவைகள் ஒலியெழுப்ப ஆரம்பித்து விட்டன. நாதசுரம் ஒலிக்கின்றது, எங்கும் வெண் சங்குகள் முழங்குகின்றன.

நாங்கள் அனைவரும் தனக்குவமையில்லாத பேரொளியை, ஒப்பற்ற பேரருளை, மேலொன்றுமில்லாத மெய்ப் பொருளை, பரஞ்சோதியை பாடினோமே அது உனது காதுகளை எட்டவில்லையா? உன் உறக்கம் தான் எப்படிப்பட்டதோ! வாயைத் திறந்து ஒரு வார்த்தையாவது சொல்லேன். அருட்பெருங் கடலாகிய எம்பெருமானுக்கு நீ அன்பு செய்யும் முறை இதுதானா? ஊழிக் காலத்தில் அனைத்து ஜீவ ராசிகளும் அந்த எம்பெருமானது திருவடிகளிலே அடங்க தனி முதல்வனாய் விளங்கும் ஒப்பற்ற தலைவனை, உமையொரு பாகனை, ஏழைப் பங்காளனை பாட வேண்டாமா? எழுந்திரு கண்ணே!

Friday, December 23, 2011

உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 10 இந்திய இளைஞர்கள்

நாளைய உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 30 வயதுக்கு குறைவான 10 இந்திய இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், நிதி, ஊடகம், சட்டம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட 12 துறைகளில் சர்வதேச அளவில் சாதனை சுவடுகளை பதித்து வரும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களது விவரம்:

1. பரம் ஜக்கி (வயது 17). இவர் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றும் பாசியை (algae) அடிப்படையாகக் கொண்ட கருவியை உருவாக்கியுள்ளார்.

2. 23 வயதான விவேக் நாயர். டமாஸ்கஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பின் தலைமை செயல் அதிகாரி. கார்பனைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

3. குணால் ஷா (வயது 29). இவர் பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பட்டதாரியான இவர், கடந்த 2004ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 27 வயதில் இதன் நிர்வாக இயக்குனர் பதவிக்கு வந்துவிட்டார்.

4. விகாஸ் மொகிந்திரா. 25 வயதான இவர் பேங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில்லிஞ்ச் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக உள்ளார்.

5. மன்வீர் நிஜார். 28 வயதான இவர் சிட்டி வங்கியின் ஐரோப்பிய முன்பேர பங்கு வர்த்தக பிரிவின் இணைத் தலைவராக உள்ளார். லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் படித்தவர்.

6. 29 வயதான ராஜ் கிருஷ்ணன், பயலாஜிகல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனராக உள்ளார். புற்றுநோயைக் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனையை கண்டுபிடித்தவர் இவர். ரத்தத்தின் மின்வீச்சை வைத்து புற்றுநோயை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

7. சிதாந்த் குப்தா. 27 வயதான வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவரான இவர், மின்சாரம், கேஸ், வெப்பத்தின் தேவையைக் குறைக்கும் சென்சார்கள் மற்றும் சாப்ட்வேரை உருவாக்கி வருகிறார்.

8. 24 வயதான நிகில் அரோரா, இவர் குறைந்த விலையில் உண்ணத்தகுந்த காளான்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் ஆவார்.

9. மன்ஜீத் அகுஜா- 17 வயதான இவர் சிஎன்பிசியின் தயாரிப்பாளராகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையில் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

திருப்பாவை 7. பரந்தாமன் புகழ் பாடும் பாடல்

Lord Krishna and Radha-55
திருப்பாவை 7. பரந்தாமன் புகழ் பாடும் பாடல்

கீசு கீசென்று எங்கும் ஆணை சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்ப கைப்பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: புத்தியில்லாத பெண்ணே, அதிகாலை புலர்ந்து விட்டது. ஆணை சாத்தன் பறவைகள் கீச்சு கீச்சு என்று குரல் எழுப்பி தங்களுக்குள் பேசத் தொடங்கி விட்டன. அது உனக்கு கேட்கவில்லையா?

நெய் மணம் வீசும் கூந்தலையுடைய ஆயர் குலப் பெண்கள், தங்கள் மார்பில் அணிந்துள்ள ஆமைத் தாலியும், அச்சுத் தாலியும் கலகல என்று ஒலி எழுப்ப தங்கள் கைகளை அசைத்து மத்தினால் தயிரைக் கடையும் சல சல என்னும் ஒலியும் கூடவா கேட்கவில்லை?

தலைமைத்துவம் பெற்ற பெண்ணே! அந்த பரந்தாமனை, நாராயண மூர்த்தியை, கேடில் விழுப் புகழ் கேசவனை, அண்ணலை, அச்சுதனை, அனந்தனை நாங்கள் அனைவரும் பாடுகின்றோம்! நீ அதைக் கேட்டுக் கொண்டே கேட்காதது போல் படுக்கை சுகத்தில் அமிழ்ந்து கிடக்கின்றாயே, ஒளி பொருந்திய உடலை உடைய கண்ணே! ஓடி வந்து கதவைத் திறடி என் கண்மணி.

திருவெம்பாவை 7. சிவனின் நாமம் பாட அழைத்தல்

அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னானென் நம்முன்னம் தீ சேர் மெழுகொப்பாய்
என்னானை என் அரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங் கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

பொருள்: பெண்ணே! நாங்கள் உனக்கு இதுவரை சொன்னது என்ன கொஞ்சமா? இறைவன் தேவர்கள் பலராலும் நினைத்து பார்க்கவும் அறியன், ஒப்பற்றவன்! பெரும் புகழையுடையவன்.

விடியற்காலையில் அந்த பெருமானுடைய இசைக் கருவிகளின் ஒலி கேட்டால் உடனே சிவ, சிவா என்று வாய் திறப்பாயே. தென்னா என்று அவர் பெயரை கூறும் முன்னாலேயே நெருப்பிலிட்ட மெழுகு போல் உள்ளம் உருகிப் போவாயே! அத்தகைய உனக்கு இன்று என்ன நேர்ந்தது? இன்னும் உனக்கு விளையாட்டுதானா?

நாங்கள் எல்லோரும் சேர்ந்தும், தனித் தனியாகவும், "என் தலைவனே!, என் அரசனே! இனிய அமுதனே" என்று பலவாறாகவும் பாடும் பொழுதும் கொடிய மனமுடையவள் போல பேசாமல் கிடக்கின்றாயே! உன் உறக்கத்தின் தன்மைதான் என்னே!

Thursday, December 22, 2011

திருப்பாவை பாடல் 6 உள்ளத்தை உருக்கும் ஹரி நாமம்

Lord Krishna

திருப்பாவை பாடல் 6 உள்ளத்தை உருக்கும் ஹரி நாமம்

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி
வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்: பெண்ணே பறவைகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா?

நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சியான பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன்.அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து "ஹரி"," ஹரி" என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா.

திருவெம்பாவை 6 – சிவனை பாட அழைத்தல்

மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும்
வானவார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்: மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன் என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா?

தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை. உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

Wednesday, December 21, 2011

திருப்பாவை 5 – யமுனையில் லீலை புரிந்த கண்ணன்

Krishna


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளக்கை
தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.

பொருள்: பாற் கடலில் பள்ளி கொண்ட நீலவண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயக்காரன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை என்ன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோர் புகழும்படி செய்த தாமோதரன். அப்படிப்பட்ட அந்தப் பெருமாளை நாம் தூய மனதுடன், நல் மலர்கள் தூவி வாழ்த்தி வணங்குவோம், மனதால் அவனை நினைப்போம். காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரக் காத்திருக்கும் பிழைகளும் கூட தீயினில் இட்ட தூசு போல் பொசுங்கிப் போய் விடும். ஆகவே, அந்த தூய பெருமானின் புகழ் பாடுவோம், அவன் குறித்தே பேசுவோம்..


திருவெம்பாவை – 5. அடிமுடி காணமுடியாத அண்ணாமலை

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்று உள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அறியான்
கோலமும் நமமை ஆட் கொண்டு அருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே! சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்!
ஏலக்குழலி பரிசு ஏலோர் எம்பாவாய்!


பொருள்: மலை போல நீண்ட நெடிய திருமேனியை உடையவன் நம் இறைவன். வராக அவதாரம் எடுத்த திருமாலும், அன்னப்பறவை எடுத்த பிரம்மாவும் கூட அறிய முடியாத திருவடிகளை உடையவன். ஆனால் அப்பேற்பட்டவனையே நம்மால் அறிய முடியும் என்பது போல பேசுகிறாய் நீ.உனது பேச்சு பிறரை மயங்க வைத்து விடும் மாயப் பேச்சு. அப்படி அனைவரும் நம்பும்படியாக பொய்யை பாலும் தேனும் ஒழுகப் பேசிய வாயினையுடைய வஞ்சகியே! வந்து கதவைத் திற!

உனக்கு ஒன்று தெரியுமா.. ? எம்பெருமான் விண்ணுலகினராலும், மண்ணுலகினராலும், மற்றும் உள்ள உலகினர் யாராலும் அறிய முடியாத அருமைக்கும், பெருமைக்கும் உரியவன். நம்மைப் போன்ற சிறியவர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் மன்னிக்கும் அருட் குணம் கொண்டவன். தம்முடைய திருக்கோலத்தையும் காட்டி, எளியவர்களான நம்மை ஆட்கொண்டு அருளி சீராட்டுகின்ற திறத்தையும் பாடுகின்றோம்! அப்படிப்பட்ட பரமனை, சிவனே! சிவனே! என்று உள்ளுருகி உன் வாசல் வந்து பாடுகின்றோம். அந்தக் குரல் உனக்குக் கேட்கவில்லையா..?மணம் பொருந்திய கூந்தலை உடையவளே! இதுதான் உன் தன்மையா.?

Tuesday, December 20, 2011

திருப்பாவை 4. மழை பொழிய வேண்டுதல்

திருப்பாவை 4. மழை பொழிய வேண்டுதல்

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்: கடல் போன்ற கருணை உள்ளம் படைத்த தலைவனான வருணப் பகவானே, நீ எங்களுக்கு மட்டும் மழை பொழிந்து குறுகியவனாக இருக்காதே. மாறாக இந்த பூலோகம் முழுவதும் உன் அருளை வாரி வழங்கு. ஆழ்கடல் நீரை அள்ளி எடுத்து, இடிகளை முழக்கி, பின்னர் உனது உடல் நிறத்தை கருமையாக்கி மழை நீரை வாரி வழங்கு.

பரந்தாமன் கையில் இருக்கும் சக்கரம் போல மின்னலை ஒளிரச் செய், விஷ்ணுவின் கையில் உள்ள வலம்புரி சங்கு போல அதிர வைக்கும் சத்தத்துடன் முழக்கமிடு, சாரங்கன் விடும் தொடர் அம்புகளைப் போல நிற்காமல் மழையைப் பெய்ய விடு. உலகில் நல்லவர்கள் வாழ உன் மழை உதவட்டும், பெய்யட்டும். நீ இப்படி அருளினால்தான் நாங்களும் மார்கழி மாதத்தில் மனம் மகிழ்ந்து நீராட அந்த மழை உதவும்.


திருவெம்பாவை 4. இறைவனைப் பாடும் வேளை

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

பொருள்

எழுப்பும் பெண்கள்: புன்னகை தவழும் முகம் கொண்ட பெண்ணே, இன்னும் உனக்குப் பொழுது புலரவில்லையா?.

தூங்கும் பெண்: வண்ணிக் கிளி போல பேசும் பெண்டிர் எல்லாம் வந்தாயிற்றா?.

எழுப்பும் பெண்கள்: அனைவரையும் எண்ணிப் பார்த்து விட்டோம். நீ மட்டும்தான் உறக்கத்தில் இருக்கிறாய். இப்படியே நேரத்தை வீணடிக்காதே. தேவர்களை காப்பவராகவும், வேதங்களின் பொருளாகவும், இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. எனவே நேரத்தை வீணாக்க முடியாது. நீயே எழுந்து வந்து அனைவரையும் எண்ணிப்பார்த்துக்கொள். நீ எதிர்பார்க்கும் அளவிற்கு பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் உறங்கு.

திருப்பாவை பாடல் 3 – பெருமாளை பாடுவதன் பெருமை

திருப்பாவை பாடல் 3 – பெருமாளை பாடுவதன் பெருமை

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் லூடு கயலுகள்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: வாமனன் ரூபத்தில் தனது ஓரடியால் உலகத்தை அளந்த அந்த திருமாலின் பெயரைச் சொல்லி நாம் புகழ் பாடுவோம். அப்படிப் பாடுவதால் நமக்குக் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா...

மாதம் மும்மாரி மழை பெய்யும். செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும், அதன் ஊடாக மீன்கள் துள்ளித் திரியும். நீர் நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அதன் மலர்களில் வண்டினங்கள் வந்தமர்ந்து தேன் பருகும், வள்ளல் பசுக்களோ தங்கள் மடியிலிருந்து பாலை அருவியாகப் பொழியும். என்றும் நீங்காத செல்வம் நமக்குக் கிடைத்திடும் பெண்ணே.



திருவெம்பாவை – 3 இறைவன் புகழைப் பாட அழைத்தல்

முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்
தித்திக்க பேசுவாய் வந்துன் கடை திறவாய்!
பத்துடையீர்! ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்

பொருள்: எழுப்புபவள்: முத்துப் பற்களை உடையவளே, முன்பு நீ எங்களுக்கு முன்பாக வந்து எங்களை எழுப்பி, அப்பனே! ஆனந்தனே! அமுதனே! என்று வாய் இனிக்க இனிக்க இறைவனைப் புகழ்ந்து பேசுவாய். ஆனால் இப்போதோ, இப்படி படுக்கையில் கிடப்பதேன்.

உறங்குபவள்: நீங்கள் இறைப் பற்று உடையவர்கள். அந்த இறைவனின் அடியார்கள். நான் ஒரு புதிய அடிமை.எனது செயலை நீங்கள் பொறுத்துக் கொள்ளக் கூடாதா..
எழுப்புபவள்: உனது அன்பை நாங்கள் அறிவோம் பெண்ணே. இப்படிப்பட்ட அழகிய மனம் உடையவர்கள் எம்பெருமான் சிவபெருமானின் புகழ் பாடாமலிருக்கலாமோ? நீயும் வந்து அவன் புகழ் பாடு

Monday, December 19, 2011

திருப்பாவை – 2. பாவை நோன்பு முறை

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்!

பொருள்: இந்த பூமியின் வாழ்க்கையை அனுபவிப்பவர்களே பாவை நோன்புக்கு நாம் செய்ய வேண்டிய நல்லவற்றைப் பற்றிக் கேளுங்கள். திருப்பாற்கடலில் துயில் கொண்டுள்ள அந்த அரியின் திருவடிகளை போற்றி பாடுவோம்.

நெய் உண்ண மாட்டோம், பால் கலந்த உணவை உண்ண மாட்டோம், அதிகாலையில் துயில் எழுந்து நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர் சூட மாட்டோம். செய்யக் கூடாதவற்றை செய்ய மாட்டோம். யாரிடமும், யாரைப் பற்றியும் கோள் சொல்லிப் பேச மாட்டோம். நம்மை நாடி யாசித்து வருவோருக்கு இல்லை எனக் கூற மாட்டோம். இவற்றையெல்லாம் நாம் செய்வது உய்வை அடையும் வழிக்கே என்று நினைத்து பாவை நோன்பை நோற்போம்,

திருவெம்பாவை – 2. இறைவன் புகழ்பாட எழுப்புதல்

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போது இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையே? நேரிழையீர்
சீ! சீ! இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏலோர் எம்பாவாய்

பொருள்: எழுப்பும் பெண் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணே! இரவும் பகலும் நாம் பேசும் போதெல்லாம், என் பாசமெல்லாம் அந்த பரஞ்சோதிக்கே என்பாய். அதை மறந்து எப்போதிருந்து இந்த பூப்படுக்கையின்மேல் இத்தனை நேசம் வைத்தாய்!

உறங்கும் பெண் - நான் மட்டுமா நல்ல அணிகலன்களை அணிந்துள்ளேன். நீங்களும் கூடத்தான் அணிந்துள்ளீர்கள். சீ! சீ! சிறிது நேரம் தூங்கியதற்கு தாங்கள் இவ்வளவு இகழ்ந்தா பேசுவது. விளையாட்டாக பழித்துப் பேசும் இடமா இது.

எழுப்பும் பெண் - இறைவன் திருவடியைப் போற்றிப் பாடுவதற்கேற்ற நல்வினை தமக்கில்லையே என தேவர்கள் கூட வெட்கியிருக்க, அவனுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளை, நமக்கு அருள் புரிவதற்காகத் தந்தருளும் பொலிவுடைய சிவலோகநாதனும், தில்லையில் நடம் புரியும் ஈசனுமான அவனுக்கு, நாம் எல்லோரும் அன்புடையவர்கள் அல்லவா? அவனது புகழைப் பாட சீக்கிரம் எழுந்து வா பெண்ணே!

Saturday, December 17, 2011

ஆண்டாள் அருளிய திருப்பாவை





1.மார்கழித் திங்கள் – நீராட அழைத்தல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கு பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!

பொருள்: மாதங்களில் சிறந்த மார்கழியில், மதி நிறைந்த நன்னாளில், கோவிந்தன் பெயரைச் சொல்லி, குளித்து நீராடுவோம் ஆயர்பாடி பெண்களே. நந்தகோபன் மாளிகையாகி விட்ட வடபத்ரசாயி பெருமாளுடைய கோவிலில், அந்தப் பெருமாள் நம் கண்களுக்கு கண்ணனாகவே காட்சி தருகிறான்.

நந்தகோபன் திருமகனாம், யசோதை பெற்ற இளஞ்சிங்கமாம், அந்த கார்மேனிக் கண்ணன், முழுமதியின் முகமுடையான் நாராயணனே என் கண்ணன். நம்மைப் போன்ற இளம் பெண்களின் விருப்பத்தை அந்த செங்கண் படைத்த கண்ணனே நிறைவேற்றுவான். அவனிடம் உங்களது கோரிக்கைகளை வையுங்கள். அந்தப் பார் புகழும் கார் வண்ணனின் புகழைப் பாடி உலகத்தோர் போற்றும் வண்ணம் இந்த மார்கழி நீராடுவோம்.


மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை –


1.விழித்து எழ வலியுறுத்தல் - சக்தியை வியந்தது

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்

சோதியை யாம்பாட கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ! வன்செவியோ? நின் செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றுங் புரண்டிங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எம் தோழி பரிசேலோ ரெம்பாவாய்!

பொருள்: திருவண்ணாமலையில் அருள் பாலிக்கும் சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாதவர். அடியும், முடியும் காண முடியாத பிழம்பு அவர். அருட்பெரும் ஜோதியாய் நின்றவர். அத்தகைய சிறப்பு பெற்ற ஈசனின் அடியைப் போற்றி போற்றி என்று பாடுகிறோம். அப்படிப் பாடுவதைக் கேட்டும் நீ தூங்கிக் கொண்டிருக்கிறாயே, உனக்கு காதுகளே இல்லையா அல்லது செவிடா...?

நாங்கள் எம்பெருமானைப் பாடிப் புகழ்வதைக் கேட்டு ஆங்கே ஒருத்தி விம்மி விம்மி மெய்மறந்து அழுவது உனக்குக் கேட்கவில்லையா. நீயோ தூக்கத்திலிருந்து எழாமல் கிடக்கிறாய், அவளோ ஈசனின் புகழ் பாடும் பாடலைக் கேட்டு மூர்ச்சையாகிக் கிடக்கிறாள். இது என்ன விந்தை!

தேவர்களின் வைகறைப் பொழுதான மார்கழி மாதம்

மாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் அருளியிருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய மார்கழி மாதம் சனிக்கிழமை பிறக்கிறது. தட்சிணயனத்தின் கடைசி மாதமாக விளங்கும் மார்கழி மாதத்தின் பெருமைகளை தெரிந்து கொள்வோம்.

வைகறைப் பொழுது

மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். இந்த ஒருநாளின் வைகறைப் பொழுதாக மார்கழி அமைகிறது. உடல் சுறுசுறுப்பும், உள்ளத் தெளிவும் நிறைந்த வைகறைக் காலை வழிபாடு எப்போதும் சிறந்தது. எனவே வைகறைப் பொழுதான மார்கழி, தேவர்களை வழிபடுவதற்கு மிகப் பொருத்தமான மாதம் என்பது இந்த மாதத்தின் சிறப்பாகும்.

மார்கழி மாதத்தில் கன்னிப்பெண்களுக்குரிய மார்கழி நோன்பு, பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி, சிவனுக்குரிய திருவாதிரை, மற்றும் பழையன கழியும் போகிப்பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

பிரம்ம முகூர்த்தம்

அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது. வழிபாட்டுக்கு ஏற்ற காலமும் இதுவே. இந்த நேரத்தில் ஓசோன் வாயு நில உலகத்தில் மென்மையாகப் படர்ந்து பரவுகிறது. இது உடலுக்கு நலம் தரும்; புத்துணர்ச்சி தரும். உள்ளத்துக்கு இதம் தரும்; புதுக் கிளர்ச்சி தரும். மார்கழி விடியற்காலையில், ஓசோன் வாயு நிலவுலகத்தில் சற்று அதிகமாகப் பரவுகிறது. இதன் காரணமாகவே பண்டைய தமிழர்கள் மார்கழி விடியற் காலையில் நோன்பிருந்து இறைவனை வணங்கினர்.

சரணாகதி தத்துவம்

மார்கழி மாதத்திற்கு சூன்ய மாதம் என்ற பெயரும் உண்டு சூன்யம் என்றால், ஒன்றுமில்லாதது எனப் பொருள். நம் வாழ்க்கை ஒன்றுமில்லாதது, நிலையற்றது. இந்த வாழ்வை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், சரணாகதி எனும் உயர் தத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்.

மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்’ என்று வடமொழியில் சொல்வர். ‘மார்கம்” என்றால், வழி – “சீர்ஷம்’ என்றால், உயர்ந்த – “வழிகளுக்குள் தலைசிறந்தது’ என்பது இதன் பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இறைவனை அடையும் உயர்வழியே சரணாகதி. “உன்னைத் தவிர யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; நீ வந்து என்னை ஆட்கொள்…’ என, இந்தப் பூமியில் பிறந்த ஆண்டாள், திருமாலைச் சரணடைந்தாள்.

மருத்துவ நூல்களில் மார்கழியைப் பீடை மாதம் என்று குறிப்பிடுகின்றன.

மார்கழியின் பனிக்குளிர்ச்சி சிலருக்கு நோய்த் துன்பங்களைத் தரலாம். எனவே, இது பீடை மாதமாகலாம். பீடு-பெருமை. பன்னிரு மாதங்களில் மிக்க பெருமையை உடையது பீடை மாதம் என்று மற்றொரு பொருளும் கூறலாம். பல காரணங்களால் மார்கழி பெருமையுடைய மாதம்.

மார்கழிப் பாடல்கள்

திருப்பாவை ஆண்டாள் இயற்றியது வைணவத் தொடர்புடையது. திருவெம்பாவை மாணிக்கவாசகர் இயற்றியது; சைவத் தொடர்புடையது. இந்த

இரண்டும் பாவை நோன்பு அல்லது மார்கழி நோன்பினைப் பாடுகின்றன.

மார்கழியில், திருப்பாவை, திருவெம்பாவை, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருப்பள்ளி எழுச்சி, மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளி எழுச்சி ஆகிய நான்கு நூற்பாடல்களை வீடுகளிலும், கோயில்களிலும் பாராயணம் செய்கின்றனர். மார்கழியில், சிறப்பாக பாராயணம் செய்ய வேண்டும் என்ற பெருமை இந்த நான்கு நூல்களுக்கே உண்டு.இவை தவிர வைணவக் கோயில்கள் சிலவற்றில் மார்கழியில் ராப்பத்து, பகல் பத்து என்ற முறையில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முழுவதையும் பாராயணம் செய்கின்றனர்.

நல்ல வாழ்க்கைத்துணை

மார்கழி நோன்பு முழுக்க முழுக்க கன்னிப்பெண்களுக்கே உரியது. விடியலுக்கு முன் எழுந்து ஆற்றில் நீராடி நல்ல கணவன் கிடைக்க பாவை நோன்பு நோற்கின்றனர். பாவையை, வைணவக் கன்னியர்கள் கவுரி தேவியாகவும், சைவக் கன்னியர்கள் பார்வதி தேவியாகவும் போற்றி வழிபடுகின்றனர். பாவைப் பாடல்களைப் பாடி வணங்குகின்றனர்.

வாசல் நிறையும் கோலங்கள்

மார்கழி மாதம் வந்து விட்டாலே இளம் பெண்கள் வாசலை அடைத்து தெருவெங்கும் கோலமிடுகின்றனர். செம்மண்ணைப் பூசி அலங்கரித்து கோலத்தின் நடுவே ஒருபிடி சாணத்தை வைத்து அதில் பூசணிப் பூ அல்லது அருகம்புல்லைச் சூட்டுகின்றனர். விளக்கேற்றுகின்றனர்.

பூசணிப் பூவின் மஞ்சள் நிறம், மங்கலத்தின் சின்னம். கோலத்தின் வெண்மை-பிரம்மன்; சாணத்தின் பசுமை-விஷ்ணு; செம்மண்ணின் செம்மை-சிவன். முற்றத்திலுள்ள வண்ணங்கள் மூன்றும் மும்மூர்த்திகளை நினைவுபடுத்துகின்றன. மார்கழி மாதத்தில் எங்கும் பக்தி; எதிலும் தெய்வீகம் இவை அனைத்தும் இந்த மாதத்தின் சிறப்புகளாகும்.

Friday, December 16, 2011

Aakash tablet goes on sale for Rs 2500 online

DataWind, the Canadian company that is manufacturing Aakash, has started the online booking and pre booking of the much anticipated low cost Android tablet. Online booking is for students' version of the tablet and pre booking is for UbiSlate 7, the upgraded version of Aakash.

Students' version of Aakash will be available for Rs 2,500 and will be delivered in seven days. The commercial version, UbiSlate 7 is priced at Rs 2,999. The payment mode for both the tablets is cash on delivery.

The commercial version of Aakash tablet will be powered by Android 2.3 and will have a resistive touchscreen, Cortex A8-700 MHz processor and graphics accelerator HD video processor, 256 MB of RAM and 2 GB of internal memory.

Other specifications are a one standard USB port, 3.5 mm audio jack, a 7 inch display with 800 x 480 pixel resolution, resistive touchscreen, GPRS and WiFi support.

"The improved version of Aakash tablet will be available in retail outlets by January end," a spokesperson of DataWind told The Mobile Indian.

The tablet was to be made available in retail stores by the end of November. "The delay in the availability of the tablet has been due to upgradation in the tablet and some unforeseen delay in manufacturing," the spokesperson said.

To book and prebook student and commercial versions respectively of Aakash tablet, users have to visit DataWind's website and fill up the required form. In case of booking they will get a booking ID and a message which will state, "You will shortly receive an email confirmation from our support team with further details."

In case of pre booking users will get a confirmation message which will state, "The commercial version of the Akash UbiSlate 7 would be launched in early weeks of December. After the commercial launch we would get in touch with you to deliver your device as soon possible."

As a matter of fact, the confirmation message a reader will see is factually incorrect as The mobile Indian had reported earlier the Aakash tablet will be available only by January end.

Datawind has however not cleared how it is going to establish the identity of students who will book the cheapest version of Aakash tablet. When The Mobile Indian contacted spokesperson of Datwind he said, "Anyone can book the student version of Aakash tablet."

This defeats the purpose of providing students an affordable tablet as now anyone can place an order to get the tablet. Interestingly, now it has been revealed that the government has procured only 10,000 Aakash tablets for distribution in schools and colleges of the initial 1 lakh proposed.

It looks like the company was in a hurry to start the online booking process and has not done not proper homework before staring it.

உலகிலேயே நீளமான கிறிஸ்துமஸ் 'கேக்' பார்க்கணுமா? சீனாவுக்கு வாங்க!




உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்கை சீனாவை சேர்ந்த 80 சமையல்காரரர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் என்றால் கேக் இல்லாமலா. கிறிஸ்துமஸ் சீசன் வந்தாலே கேக் கடைகள் படு பிசியாகிவிடும். அங்கு விற்பனையும் சக்கைப் போடு போடும். கடைகளில் பல வண்ணங்களில், பல்வேறு சுவைகளிலான கேக்குகள் வைக்கப்பட்டிருக்கும். அதை வாங்கச் செல்பவர்கள் இதை வாங்கலாமா, அதை வாங்கலாமா என்று குழம்பிவிடுவார்கள். அந்த கேக்குகளைப் பார்க்கையிலேயே வாயில் எச்சில் ஊறும்.

எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்புவோர் இருக்கிறார்கள். சீனாவைச் சேர்ந்த 80 சமையல்காரர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு நாம் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உலகமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர்கள் 1,068 மீட்டர் நீளமுள்ள கிறிஸ்துமஸ் கேக்கை தயாரி்த்துள்ளனர்.

படாங் ஷங்கிரி-லா-ஹோட்டலில் தான் உலகின் மிக நீளமான கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கேக்கை தயாரிக்க 7 நாட்கள் ஆகியுள்ளது. வெனிலா சுவையுள்ள கேக் மீது சாக்கலேட் கிரீம் ஊற்றி அலங்கரித்துள்ளனர். 904 ஆர்கானிக் முட்டைகள், 1045 கிலோ மாவு, 209 கிலோ சர்க்கரை, 401 கிலோ கசப்புத் தன்மையுள்ள சாக்கலேட் மற்றும் 34 கிலோ தஹித்தியன் வென்னிலா ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த கேக்கை தயாரித்துள்ளனர். அதை 150 பேர் சேர்ந்து அலங்கரித்துள்ளனர்.

888 மீட்டர் நீளமுள்ள கேக்கை தயாரிக்க தான் நினைத்துள்ளனர். கேக்கை செய்து முடித்த பிறகு அளந்து பார்த்தபோது அது 1,068 மீட்டர் நீளமிருந்திருக்கிறது. இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு அந்த கேக்கை வெட்டி விற்பனை செய்யத் துவங்கினர். இதில் கிடைக்கும் பணம் ஷாங்காயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளின் கீமோதெரபி மருத்துவத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீட்டர் நீளமுள்ள கேக் தான் இதுவரை உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள் தயாரி்த்துள்ள கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேவ தூதனை வரவேற்கும் கிருஸ்துமஸ் அலங்காரங்கள்

குளிர்காலத்தில் வீட்டிற்குள் முடங்கி போய்விடாமல் உற்றார் உறவினர்களிடம் கலந்து இன்புற்று மகிழவேண்டும் என்பதற்காகவே பனி பொழியும் மாதங்களில் உற்சவங்களும், பண்டிகைகளும் கொண்டாடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் இந்து, கிருஸ்துவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தவரும் கொண்டாடும் பண்டிகைகள் உற்சாகத்தை ஏற்படுத்து வதாக அமைந்துள்ளன.

அலங்காரத்தில் உற்சாகம்

ஒவ்வொரு பண்டிகையும் ஒரு விதமான தனித்துவத்துடன் கொண்டாடப்படுகின்றன. அதிலும் கிருஸ்து பிறப்பை கொண்டாடும் கிருஸ்துவ மக்கள் தேவதூதன் இந்த மண்ணில் பிறந்த மகத்துவத்தை ஆண்டுதோறும் உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். டிசம்பர் 25ம் தேதிதான் கிருஸ்துமஸ் என்றாலும் டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே அதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பித்துவிடுகின்றனர்.

ஒவ்வொரு கிருஸ்துவரும் டிசம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே தங்களின் வீடுகளின் முன் நட்சத்திரத்தை கட்டி தொங்கவிட்டு அதில் வண்ண மின்விளக்கினால் அலங்காரம் செய்திருப்பர். இது தேவதூதனின் அவதாரத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைந்திருக்கிறது.

அலங்கார குடில்

தேவதூதனின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் வண்ண வண்ண தோரணங்களினால் வீடுகளை அலங்கரித்து, வீட்டுக்குள் குடில் அமைக்கின்றனர். மாட்டுத்தொழுவம், சின்னச்சின்ன மாடுகள், வைக்கோல் வைத்து அந்த வைக்கோல் போரின் மீது குழந்தை யேசுவை படுக்கவைத்து அதன் அருகில் அன்னை மரியாளையும், தந்தை ஜோசப்பையும் நிற்க வைத்திருப்பர். அந்த குடிலின் முன் வானத்தில் இருந்து வந்த தேவதைகள் கைகளில் நட்சத்திரம் ஏந்தியபடி மண்ணுலகை ரட்சிக்க வந்த இறை தூதன் அவதரித்தை பறைசாற்றிக் கொண்டிருப்பர். இந்த அலங்காரக்காட்சி காண்பவர்களை கொள்ளை கொள்ளும்.

கிருஸ்துமஸ் மரம்

இந்துக்களின் பண்டிகையில் வாழைமரம் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளதோ அதோபோல கிருஸ்துவமக்களின் பண்டிகையில் கிருஸ்துமஸ் மரம் முக்கிய இடம் பெற்றுள்ளது. கிருஸ்துவ பெருமக்கள் ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப தங்களின் வீடுகளில் கிருஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கின்றனர். செயற்கையான கிருஸ்துமஸ் மரம் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அந்த மரத்தில் வண்ண வண்ண பந்துகளை கட்டிவிட்டு பலூன்களால் அலங்கரித்திருப்பர்.

கிருஸ்துமஸ் மணிகளும், நட்சத்திரங்களும் ஆங்காங்கே அலங்காரமாய் தொங்கவிடப்பட்டிருக்கும். மேலும் ஆப்பிள், சாக்லேட் போன்றவைகளையும் மரத்தின் கிளைகளில் ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டிருப்பர்.

மரத்தின் வரலாறு

ஜெர்மானியர்கள்தான் முதல் முறையாக இறந்த வாத்தின் இறகை கொண்டு கிருஸ்துமஸ் மரத்தை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஜெர்மானிய கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதபோனி பேஸ் (St.Boniface) என்பவர்தான் மர வழிபாட்டை துவக்கிவைத்தவர் என வரலாற்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஓக் மற்றும் பிர் மரங்கள் அழிவதை தடுப்பதற்காக ஒவ்வொரு மரத்தை வெட்டும்போதும், புதிய மரத்தை நடவேண்டும் என்று கட்டளையிட்டார். இதன்படி ஜெர்மானியர்கள் ஒரு 'ஓக்' மரம் வெட்டினால் ஒரு 'ஓக்' மரம் அல்லது ஒரு '·பிர்' மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச் செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற மாதங்களில் தங்கள் இல்லங்களில் 'ஓக்' மரங்களையோ '·பிர்' மரங்களையோ அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

உலகம் முழுவதும் பரவியது

கிழக்கு பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில் வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பரவியிருக்கிறது.

பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார். அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ் மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர். இந்தப் பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள் அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும், என்றும் என கிறிஸ்மஸ் பண்டிகையும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு ஆகிவிட்டது. வழக்கமாக 15 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட கிருஸ்துமஸ் மரங்களே விற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் அமெரிக்காவில் மட்டும் 30 முதல் 35 மில்லியன் இயற்கை கிருஸ்துமஸ் மரங்கள் விற்கப்படுகின்றன.

பாரம்பரியமான மரம்

கிருஸ்துமஸ் மரமானது பச்சை,சிவப்பு, தங்க நிறம் என மூன்று பாரம்பரிய வண்ணங்கள் கொண்டிருக்கும். பச்சை நிறம் நீண்ட ஆயுளையும் மறு பிறவியையும் குறிக்கின்றது. சிவப்பு நிறம் இயேசுவின் ரத்தத்தை குறிக்கின்றது. தங்க நிறம் செல்வத்தை குறிக்கின்றது. எனவே கிருஸ்துமஸ் பண்டிகையில் மர அலங்காரம் பாரம்பரியமானதாக கருதப்படுகிறது.

கிறிஸ்துமஸ் குறித்த பல சுவையான தகவல்கள் உங்களுக்காக...

வழிகாட்டிய நட்சத்திரம்

இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது. அப்படியோரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர். இயேசு பிறந்ததும் அதிசியதக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.

16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம்

விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.

முதல் வாழ்த்து அட்டை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.

அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.

விசேஷ கிருஸ்துமஸ்

இயேசு பிரான் பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் பவுர்ணமி வருகிறதோ அந்த கிருஸ்துமசை விஷேச கிருஸ்துமஸ் ஆக கொண்டாடுகின்றனர்.

இயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிருஸ்துமஸ் தினத்தன்று பவுர்ணமி வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் 1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஆண்டுகளில் 5 தடவை விஷேச கிருஸ்துமஸ் வந்துள்ளது. இனி கிறிஸ்துமஸ் தினமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வரும் அபூர்வம் 2015-ம் ஆண்டில் தான் வரும்.

கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு. 17ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.

அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்து சென்ற நட்சத்திரம் போல தான் இவையும் என உணர்ந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னை கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாக தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.

அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மை காப்பாற்ற காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

பசிலிக்கா ஆலயம்

பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.

இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.

இயேசு வரலாறு

இயேசு நாதரின் வாழ்க்கை வரலாறை அவரது சீடர்கள் லூக்காஸ், மத்தேயு, மாற்கு, அருளப்பர் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.

இயேசு சுமந்த சிலுவையின் மரத்துண்டு

இயேசுநாதர் தனது தோளில் சுமந்து சென்று, ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித சிலுவை மரத்தின் புனித துண்டு ஒன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு புனித சிலுவை மரத்தின் துண்டு வந்து சேர காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேதலனோவா அடிகளார்.

1581ம் ஆண்டு இந்த ஆலயத்தின் பங்கு தந்தையாக இருந்த இவர் ரோம் நகரில் இருந்து இயேசு தலைமை குருவான கிளாடியஸ், ஆக்குவா, வீவா அடிகளுக்கு புனித சிலுவையின் சிறு பகுதி வேண்டி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை தலைமை குரு போப் ஆண்டவரிடம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.

போப் ஆண்டவரும் இயேசு சிலுவையில் அறையப்ப்ட மரத்துண்டின் சிறிய பகுதியை சிலுவை வடிவில் கொடுத்தார். அதை தலைமை குரு மணப்பாடு ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார். 1583ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த புனித சிலுவையின் துண்டு தூத்துக்குடி மணப்பாடு ஆலயத்திற்கு வந்தடைந்தது. அன்று கொண்டு வரப்பட்ட அந்த புனித சிலுவையை இன்று வரை பக்தியுடன் பாதுகாத்து வருகிறார்கள். மாதத்தின் முதல் வெள்ளியன்றும், திருவிழா நாட்களிலும் பக்தர்களின் வணக்கத்துக்காக இதை வைக்கிறார்கள்.

ஜப்பானில் தக, தகக்கும் தங்க கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் என்றால் நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கேக். இந்த கிறிஸ்துமஸ் பண்டிக்கையையொட்டி ஜப்பானைச் சேர்ந்த நகை டிசைனர் ஜின்சா டனகா 2 மில்லியன் டாலர் மதி்ப்புள்ள தங்க கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்துள்ளார்.

உலக நாடுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கின்றன. தற்போதே கிறிஸ்துவர்கள் தங்கள் வீட்டுக்கு முன்பு விளக்கு பொருத்திய நட்சத்திரங்கள், வீட்டிற்குள் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அழகு பார்த்து வருகின்றனர். ஷாப்பிங் மால்களில் ஆள் உயர கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதை அலங்கரித்துள்ளனர். மரத்தைப் பார்ப்பவர்கள் அதன் அழகில் மயங்குகின்றனர். கடைகளில் ஜிங்கிள் பெல்ஸ் பாடல் ஒலித்த வண்ணம் உள்ளது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களில் ஜப்பான் முக்கிய இடம் பிடித்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற நகை டிசைனர் ஜின்சா டனகா யாரும் எதிர்பாராவிதமாக 24 கேரட் தங்கத்தினால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை வடிவமைத்துள்ளார். தங்கம் விற்கும் விலைக்கு அதை கடையில் வைத்துப் பார்ப்பது தான் அழகு என்று மக்கள் மனதை தேற்றிக்கொள்ளும் நிலையில் டனகா தங்க கிறிஸ்துமஸ் மரத்தை செய்துள்ளார்.

இந்த தங்க மரத்தின் உயரம் 2.4 மீட்டர், எடை 12 கிலோ. மரமே தக,தகவென ஜொலிக்கையில் அதை அலங்கரிக்க சுத்த தங்கத்தாலான 50-60 இதய வடிவ தகடுகளைப் பயன்படுத்தியுள்ளார் டனகா. இந்த மரம் டோக்கியோவில் உள்ள டனகாவின் கடையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது வரும் 25ம் தேதி வரை அந்த கடையில் இருக்கும்.

இந்த மரத்தைப் பார்ப்பவர்கள் தங்களையும் மறந்து அங்கயே சற்று நேரம் நின்றுவிடுகின்றனர். இந்த மரத்தின் மதிப்பு 2 மில்லியன் டாலர் ஆகும். டனகா இது போன்ற விலை உயர்ந்த பொருட்களை வடிவமைப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல. ஜப்பான் இளவரசர் பிறந்தபோது 24 கேரட் தங்கத்தினாலான குதிரையைச் செய்தார்.

கடந்த 2010ம் ஆண்டு அபு தாபியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 11 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்க கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாறு!

கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.

கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.

எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்துமஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.

பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும்.

மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.

பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.

Thursday, December 15, 2011

'கடவுள்' இருப்பது உண்மை தான்!!

-ஏ.கே.கான்

கடவுளின் அணுத் துகள் எனப்படும் 'Higgs Boson' (ஹிக்ஸ் போஸன்) என்ற சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

இந்தப் பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை (mass) எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.


பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைத்துள்ள Large Hadron Collider என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை தொடங்கியது. (அதற்கு ஓராண்டுக்கு முன்பே சோதனை தொடங்கியது. ஆனால், ஆரம்பத்திலேயே அதன் குளிரூட்டு்ம் கருவிகளில் பிரச்சனை வந்ததால், அதை சரி செய்து சோதனையை ஆரம்பிக்க ஓராண்டு ஆகிவிட்டது).

கிட்டத்தட்ட 400 டிரி்ல்லியன் புரோட்டான்களை எதிரெதிர் திசையில் அதிபயங்கர வேகத்தில் மோதவிட்டு சோதனைகள் நடந்தன. அட்லஸ், சிஎம்எஸ் என இரண்டு தனித்தனி விஞ்ஞானிகள் குழுவினர் இந்த சோதனைகளை நடத்தினர்.

இருவருக்கும் கிடைத்துள்ள ஒரே ரிசல்ட்.... 'Higgs Boson' இருக்கிறது என்பது தான்.

அது என்ன 'ஹிக்ஸ் போஸன்'?:

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத் துகள்களால் (சப்-அடாமிக் பார்ட்டிகிள்கள்) ஆனது. ஒரு புரோட்டானின் நிறை என்பது இந்த துணை அணுத் துகள்களின் நிறை தான். ஆனால், உண்மையில் புரோட்டானின் நிறை, இந்த துணை அணுத் துகள்களின் நிறையை விட மிக மிக அதிகமாகவே உள்ளது.

இதனால், புரோட்டானில் இன்னும் ஏதோ ஒரு 'வெயிட்டான' சமாச்சாரமும் உள்ளது என்பது விஞ்ஞானிகளின் கருத்து. அது என்னவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் உதித்த விஷயம் தான் 'ஹிக்ஸ் போஸன்'.

இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த 'ஹிக்ஸ் போஸன்' தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள். பிரபஞ்சத்தின் அடிப்படை என்பது கடவுள் மாதிரி என்பதால் அதற்கு 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்று பெயரிடப்பட்டது.

இதையடுத்து இந்தத் துகளைத் தேடி பயணத்தை ஆரம்பித்தனர் விஞ்ஞானிகள்.

டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அது சிதறும். கூடவே, 'ஹிக்ஸ் போஸன்' துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில் தான் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்ற அதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் 'ஹிக்ஸ் போஸன்' என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும், அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் (electron volts) என்றும், இது புரோட்டானை விட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் 'ஹிக்ஸ் போஸன்' தான்.

இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

'ஹிக்ஸ் போஸனிடம்' ஸாரி.. கடவுளிடம் பாரத்தை போட்டு விட்டு காத்திருப்போம்..!

கடவுளின் அணுத் துகளைத் தேடி...பயணம் ஆரம்பம்

-ஏ.கே.கான்

ஜெனீவா: உலகம் உள்ளிட்ட பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருட்களும் உருவாகக் காரணமாக இருந்ததாகக் கருதப்படும் Big Bang எனப்படும் மாபெரும் வெடிப்பின்போது என்ன நடந்திருக்கும் என்பது குறித்த சோதனையில் நேற்று மிக முக்கியமான நாள்.

ஜெனீவாவுக்கு அருகே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்துள்ள Large Hadron Collider (LHC) சோதனை மையத்தில் புரோட்டான்களின் 'அதிவேக அடிதடி' ஆரம்பமாகியுள்ளது.

பல டிரில்லியன் புரோட்டான்களை 7 TeV (7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ்) வேகத்தில் மோதவிட்டால் என்ன நடக்கும் என்பதை சோதிக்கவே இந்த மையம் அமைக்கப்பட்டது.

அதாவது 27 கி.மீ. தூர வட்டப் பாதையில், (உள்ளே எந்த வாயுக்களும் இல்லாத ஒரு வெற்றுப் பாதை இது. உள்ளே உள்ள அழுத்தம் நிலவில் உள்ள அழுத்தத்தில் 10ல் 1 பங்கு தான்), இரு புரோட்டான் கதிர்களை எதிரெதிர் திசையில் வினாடிக்கு 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் வேகத்தில் மோதவிட்டுள்ளனர்.

இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இந்த 27 கி.மீ. பாதையை புரோட்டான் கதிர்கள் வினாடிக்கு 11,245 முறை சுற்றி வந்து ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன.

இதன்மூலம் இந்தக் கதிர்களில் உள்ள புரோட்டான்கள் வினாடிக்கு 600 மில்லியன் முறை மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன. ஒளியின் வேகத்தில் 99.99% அளவுக்கு அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி மோதி சிதற ஆரம்பித்துள்ளன.

கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக உருவாக்கப்பட்டு வந்த இந்த Large Hadron Collider பல்வேறு தடைகள், கோளாறுகளை எல்லாம் தாண்டி நேற்றுத்தான் தனது முழு வேகமான 7 டெரா எலெக்ட்ரோ வோல்ட்ஸை எட்டியுள்ளது.

இந்த 27 கி.மீ LHCயை உலகின் மிகப் பெரிய பிரிட்ஜ் என்றும் சொல்லலாம். காரணம், அதன் உள் வெப்பநிலை -271.3°C. ஹீலியம் வாயுவைக் கொண்டு கிரையோஜெனிக் சிஸ்டத்தை பயன்படுத்தி இந்த குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

எதற்கு இவ்வளவு குளி்ர்ச்சி என்கிறீர்களா?.. புரோட்டான்கள் மோதும்போது உள்ளே சூரியனின் வெப்பத்தை விட 100000 மடங்கு வெப்பம் உருவாகும். அதை குளிர்விக்கவே இத்தனை ஜாக்கிரதை.

புரோட்டான் கதிர்களை இந்த வேகத்தில் ஓட வைக்க 9300 மின் காந்தங்களைத் தான் பயன்படுத்துகின்றனர். மின்சாரம் பாய்வதால் காந்தங்கள் சூடு பிடித்துவிடாமல் இருக்க அவை குளிரூட்டப்பட்டே பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காந்தங்களின் வெப்ப நிலை -193.2°C.

இந்த சோதனையையே ஏன் இந்த வெட்டி வேலை என்று சிலர் கேட்கலாம்.

காரணம் இருக்கிறது.. இந்த பிரபஞ்சம், அண்ட சராசரங்கள் உருவானது என்பதை கண்டறியும் முயற்சி தான் இந்த சோதனை.

ஒரு அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. இதில் ஒரு புரோட்டான் என்பது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது.

இதைத் தவிர Higgs Boson என்றொரு துகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று புரோட்டான்கள் சிதறும். அப்படியே Higgs Boson துகளும் நம் கண்களுக்குத் தட்டுப்பட்டுவிடும் என்று நம்பித்தான் இந்த சோதனையை நடத்துகிறார்கள்.

இந்த Higgs Boson இதுவரை எந்த அறிவியல் சோதனைகளிலும் சிக்காத ஒன்று. இதனால் இதை 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள்.

வைரஸ் முதல் நட்சத்திரம் வரை இந்த பிரபரஞ்சத்தில் உள்ள அனைத்துமே நமக்குத் தெரிந்த அணுத் துகள்களால் ஆனவை. இதைத் தான் matter என்கிறது இயற்பியல். ஆனால், நமக்குத் தெரிந்த matter வெறும் 4 சதவீதம் தானாம். நமக்குத் தெரியாத 'dark matter' தான் மிச்சமுள்ள 96 சதவீத பிரபஞ்சத்தையே அடைத்திருக்கிறது அல்லது உருவாக்கியிருக்கிறது.

அது என்ன என்பதை அறிய பிரபஞ்சத்துக்குள் போய் பார்க்க வேண்டியதில்லை.. அணுவைக் குடைந்து.. அதனுள் உள்ள சிறிய துகளையும் குடைந்து பார்த்தால் முடியும் என்று நம்பி இந்த சோதனை நடத்தப்படுகிறது.

இந்த LHCல் வைத்து புரோட்டான்களை உடைக்கும் சோதனை ஆரம்பித்தது 2008ம் ஆண்டு இறுதியில். ஆனால், இந்த சோதனை ஆரம்பித்த சில வாரங்களிலேயே அந்த எந்திரத்தில் ஏராளமான கோளாறுகள். அதையெல்லாம் சரி செய்யே 1 வருடம் ஆகிவிட்டது. இதையடுத்து இந்த ஆண்டு துவக்கத்தில் தான் LHC மீண்டும் இயங்க ஆரம்பித்தது. நேற்று தனது முழு வேகத்தை எட்டிப் பிடித்தது.

இது பல்லாண்டுகள் நீடிக்கும் சோதனை.. இது கடவுளின் அணுத் துகளை வெளியே கொண்டு வரலாம் அல்லது நாம் சற்றும் எதிர்பார்க்காத ஏதாவது ஒன்றையும் வெளிக் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

'Higgs Boson'! கடவுளே!

-ஏ.கே.கான்

உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

Thursday, December 8, 2011

அகத்தின் இருளை போக்கும் தீப வழிபாடு

தீப வழிபாடு தமிழர்களின் வழிபாடு. அது பண்டைய காலத்திலிருந்து வழிபடப்பட்டு வருகின்றது. தீபம் ஏற்றுவதால் அக்ஞான இருள் நீங்கி, மெய்ஞான வெளிச்சம் கிடைக்கின்றது. இதுவே உயிர்களுக்குப் பேரானந்தத்தைத் தரக்கூடியது. தீபவழிபாடு பற்றி சங்க இலக்கியங்களில் இருந்து திருஞான சம்பந்தர் தேவாரம் வரை பல குறிப்புகள் காணப்படுகின்றன.

அங்காரகன் மகிமை

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திர நன்னாளின் மாலை நேரத்தில் வீடுகளில் தீப விளக்குகள் வரிசையாக ஏற்றிக் கொண்டாடப்படும். இதற்கு சூரிய வழிபாடே காரணமாகும். கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். விருச்சிக ராசி செவ்வாய் பகவானுக்கு உரியது.

சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய வியர்வையை பூமி தேவி தாங்கிக் கொண்டு, அதனால் உண்டான குழந்தையை வளர்த்துவர, அந்தக் குழந்தை வளர்ந்து சிவனை துதித்து பெரும் தவம் செய்ய, தவத்தினால் தேகம் முழுக்க அக்னியாக, தவத்தில் பெரிதும் மனம் மகிழ்ந்து சிவபெருமான் அவருக்கு, கிரஹ பதவி அளித்தார். கிரஹ பதவி பெற்றவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான். பூமி காரகன் என்றும் பூமி புத்ரன் என்றும் போற்றப்படுபவர். அவரும் அக்னி வர்ணமாகக் காட்சி அளிக்கக் கூடியவர்.

கிருத்திகை நக்ஷத்திரத்திற்கு உரிய தெய்வம் தெய்வம் அக்னி பகவான்.சூர்ய அக்னி அம்சம், கிருத்திகை அக்னி அம்சம், அங்காரக அக்னி அம்சம் இந்த மூன்றும் இணைவதால் அன்று மஹா தீபம் என்றும் கார்த்திகை தீபம் என்றும், தீபம் ஏற்ற மிக உகந்த நன்னாள் எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

லட்சுமி அம்சம்

திருக்கார்த்திகை தினத்தன்று, கிலியஞ்சட்டி எனப்படும் களி மண்ணால் செய்யப்படும் விளக்கில் பசு நெய் அல்லது நல்ண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு, அதில் தான் விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டு வாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. தேவர்கள் மற்றும் அனைத்து தெய்வங்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே, தீபத்தில் பசுநெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து, "சிவசக்தி' சொரூப மாகிறது.

விளக்கில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. திருவிளக்கை தீபலட்சுமி என்பர். துர்கையின் வடிவங்களிலும் தீப துர்கை உண்டு. தீபத்தில், தீபலட்சுமியாகத் திகழ்பவள், வைகுண்டத்தில் மகா லட்சுமியாகவும்; சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமியாகவும்; ராஜ்ஜியத்தில் ராஜ்யலட்சுமியாகவும்; இல்லங்களில் கிரகலட்சுமியாகவும் இருப்பதாக ஐதீகம். ஒரு வீட்டில் இருந்து, இன்னொரு வீட்டுக்கு தீபமேற்றப்பட்ட விளக்கை எடுத்துச் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

சொக்கனுக்கு உகந்த சொக்கப்பனை

திருக்கார்த்திகை தினத்தன்று எல்லா சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் கோவிலுக்கு அருகில் பனை மரத்தை நட்டுவைத்து அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்துக் கட்டுவர். மாலையில், சொக்கப் பனை கொளுத்தப்படும். ஆணவம் எரிகிறது, கூடவே அஞ்ஞானமும் எரிகிறது என்பதே இதன் தத்துவம். சிவன் முப்புரம் எரிந்த பாவனையை காட்டுவதற்காக சிவாலயங்களில் சொக்கப் பனை கொளுத்துகின்றனர். சொக்கப்பனை என்பது சொர்க்கப் பனை, சுவர்க்கப் பனை, சொக்கர் (சிவபெருமான்) பனை என்பனவற்றின் பொருளாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

கற்பக தருவான பனை

பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது. தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப் பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றது. வேறு எந்த மரத்திற்கும் இல்லாத சிறப்பு பனை மரத்திற்கு மட்டும் உண்டு. பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது.

பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப் பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது. பனை ஓலை கொண்டு கோபுர வடிவில் செய்து அதனை ஏற்றுவதால் தெரியும் ஜோதியை தரிசனம் செய்வது பெரும் முக்தியைத் தரும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.

சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

பொறி உருண்டை

கார்த்திகை தீப நாளன்று, தேங்காய் துண்டு, வெல்லம் கலந்த பொரி உருண்டைகளை செய்து வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பொரியிலுள்ள வெண்மை நிறம், சிவனையும், வெல்லம் பக்தியையும், தேங்காய் மாவலியையும் குறிப்பதாக ஐதீகம். முருக கடவுள் கார்த்திகேயன், பொறி வடிவத்தில் தோன்றியதால், அதன் அடையாளமாக பொரி உருண்டை படைப்பதாக சொல்வோரும் உண்டு.

சிவனுக்கு சொக்கன் என்ற பெயரும் உண்டு. ஆதலால், இதற்கு, சொக்கப்பனை என்ற சொல் ஏற்பட்டது. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சொக்கப்பனை கொளுத்து கின்றனர்

Tuesday, November 29, 2011

இந்தியாவில் ஊழல்

இந்தியாவில் ஊழல் - கோ . லெனின்


910603234300000 - இது ஏதோ கால் சென்டர் (உதவிக்கான அழைப்பு நிறுவனம்) எண் என்று நினைக்கலாம். இல்லை. இது இந்தியாவில் இதுவரை நடைபெற்று, அம்பலமான மிகப் பெரிய ஊழல்களின் மொத்த மதிப்பு. அதாவது, மக்களுக்குத் தெரியவந்த ஊழலிலின் மதிப்பு மட்டும்தான் இது. தோராயமாக 9 கோடியே 10 லட்சத்து 60 ஆயிரத்து 323 கோடி ரூபாய். அதாவது, கோடிகளில் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கணக்குத் தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியலிலில் பெரும்புயலைக் கிளப்பியதுடன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலிலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முன்னாள் அமைச்சர், அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் எனப் பலரும் சிறைப் பட்டுள்ளனர். அதேநேரத்தில், இந்தியாவில் சிக்காமல் தப்பிய பல ஊழல்வாதிகள் உண்டு. தப்பியவர்கள் புண்ணியவான்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஜனநாயகத்தின் பெருமை, மக்களுக்கான அதிகாரம் என்றால் ஜனநாயகத்தின் சாபக்கேடாக இருப்பது ஊழல். முடியாட்சியிலும் ஊழல்கள் இல்லாமல் இல்லை. அதன்பின், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியா இருந்தபோதும் ஊழல்கள் அரங்கேறியுள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நிறுவுவதில் முக்கிய பங்காற்றிய ராபர்ட் க்ளைவ் என்பவர், கடைசியாக ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி, சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

மன்னர்களும் வெளிநாட்டவரும் இந்தியாவை சுரண்டினார்கள் என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் பிரதிநிதிகளும் அதே வழியில் தான் ஆரம்பத்திலிலிருந்தே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்-வருகிறார்கள். 1947-இல் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித ஜவகர்லால் நேருதான் இந்தியாவின் முதல் பிரதமர். 1948-ஆம் ஆண்டு, அரசுத்துறைகளுக்கான ஜீப்கள் வாங்கியதில் 80 லட்ச ரூபாய் ஊழல் நடந்தது வெளிப்பட்டது. சுதந்திரம் பெற்று ஓராண்டு முடிவதற்குள் லட்சக்கணக்கிலான ஊழல் தொடங்கி, இன்று சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், கோடிக்கணக்கான கோடிகளில் ஊழல்கள் தொடர்கின்றன.



இந்திய அளவில் முதன் முதலில் அம்பலத்திற்கு வந்த பெரிய ஊழல் என்பது முந்த்ரா ஊழல்தான். 1957-ஆம் ஆண்டில் நடந்த இந்த ஊழலிலின் அப்போதைய மதிப்பு ஒன்றேகால் கோடி ரூபாயாகும். முந்த்ரா என்ற தொழிலதிபரின் சரிவடைந்த நிறுவனங்களின் பங்குகளை நல்ல விலைக்கு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. வாங்கியது என்பதே முந்த்ரா ஊழலாகும். மாநிலங்களின் நிதிநிலை அறிக்கைகள் லட்சங்களில் தயாரிக்கப்பட்டு வந்த நேரத்தில், மத்தியில் நடந்த ஊழலிலின் மதிப்பு 1 கோடியே 25 லட்ச ரூபாய் என்றால், அதன் இன்றைய மதிப்பு பல்லாயிரம் கோடிகளாகும். இந்த ஊழலிலில் முக்கிய பங்காற்றியவர், நேரு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அப்போது அமைச்சரவையிலும் அதிகாரத்தில் உள்ள உயர்பொறுப்புகளிலும் குறிப்பிட்ட சமூகத்தினரே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஊழல்களிலும் அவர்களுக்கே பெரும்பங்கு இருந்தது.

இத்தகைய ஊழல்கள் தொடர்ந்தபடியே இருந்தன. 1987-இல் நடந்த போஃபர்ஸ் பீரங்கி கொள்முதல் ஊழலில் நேருவின் பேரனும் இந்தியாவின் பிரதமராக இருந்தவருமான ராஜீவ் காந்தியின் ஆட்சியையே வீழ்த்தக்கூடிய அளவுக்கு வலிலிமையுள்ளதாக இருந்தது. இந்த ஊழலிலின் அப்போதைய மதிப்பு 65 கோடி ரூபாய். ராஜீவ்காந்தி மரணத்திற்குப்பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, பிரதமரானவர் நரசிம்மராவ். இவர், ஆந்திர மாநிலத்தில் உயர் சமுதாயத்தில் பிறந்தவர். இவருடைய ஆட்சிக் காலத்தில், ஜே.எம்.எம் கட்சி எம்.பிக் களின் ஆதரவை காங்கிரஸ் அரசுக்குப் பெறுவதற்காக ஒண்ணேகால் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது. இந்த ஊழல் இந்திய அரசின் நிலைத்த தன்மைக்கே எதிரானதாக அமைந்தது. அதே நரசிம்மராவ் ஆட்சியில் நடந்த சர்க்கரை இறக்குமதி ஊழலிலின் மதிப்பு 650 கோடி ரூபாய். உர ஊழலிலின் மதிப்பு 133 கோடி ரூபாய். அவருடைய அமைச்சர வையில் இருந்த சுக்ராமின் தொலைத் தொடர்பு ஊழலிலின் மதிப்பு 1 கோடியே 60 லட்ச ரூபாய்.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் பங்குச்சந்தையில் 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்தது. பத்திரப் பதிவுக்கான போலிலி முத்திரைத்தாள் அச்சடிக்கப்பட்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது. கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவவீரர்களின் உடலைச் சுமந்த சவப்பெட்டிகளை வாங்கு வதிலும் ஊழல் நடைபெற்றது. பா.ஐ.க.வைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா சுரங்க அனுமதி மோசடிக் குற்றச் சாட்டுக்குள்ளாகி லோக் அயுக்தா எனப்படும் மக்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஊழல் என்பதே இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.

இப்படி ஊழல் செய்ததிலும் லஞ்சங்களை வாங்கியதிலும் குவிந்த பணத்தை அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இடைத்தரகர்களும் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளார்கள். இதன் மொத்த தொகை, 71 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனத் தெரிய வந்துள்ளது. இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனையும் அடைத்துவிடலாம். மிச்சமிருக்கும் தொகையில் பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றலாம்.

சுவிஸ் வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவர வலியுறுத்தியும் ஊழலை ஒழிக்க வலிமையான சட்டம் வேண்டும் என்று பலவகைகளில் போராட்டங்கள் தற்போது தொடங்கியுள்ளன. இவற்றிற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இவை எங்கிருந்து வருகின்றன என்பதும் விசாரணைக்குரியதுதான். ஊழலுக்கு எதிராக முன்னாள் துணை பிரதமரும் பா.ஐ.க.வின் மூத்த தலைவருமான அத்வானி ரதயாத்திரை தொடங்கினார். இதுபற்றிய செய்திகளை வெளியிடுவதற்காக ஊடகங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது.

ஊழலிலில் மத்திய அரசு-மாநில அரசுகள்- உயர்அதிகாரிகள்- முன்னேறிய சமுதாயத்தி னர்- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் என்ற பேதமில்லாமல் அதிகாரத்திற்கு வருகின்ற அனைவரும் ஈடுபட்டாலும், பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களே ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றன. லாலுபிரசாத் யாதவ் மீதான தீவன ஊழல், மாயாவதி மீதான தாஜ் காரிடார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள், கலைஞர் கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் விசாரணை ஆகியவை சில உதாரணங்களாகும்.

ஊழலிலில் யார் ஈடுபட்டாலும் அது நாட்டிற்கு கேடு. ஆட்சி-நிர்வாக அமைப்பில் முழுமையான மாற்றங்கள் ஏற்படும்வரை இதனை வேரோடு ஒழிப்பது கடினம். தகவல் பெறும் உரிமைச்சட்டம் போன்ற புதிய வழிமுறைகளாலும் ஊடகங்களின் வளர்ச்சி யாலும் இன்று பொதுமக்களின் பார்வைக்கு ஊழல் நடவடிக்கைகள் உடனுக்குடன் வந்துவிடுகின்றன. ஆனாலும், சமுதாயத்தின் புற்றுநோயான ஊழலை அகற்றுவதற்கு இன்னும் பல கட்டங்களை நாம் கடக்க வேண்டியுள்ளது.