Saturday, May 28, 2011

அகத்தை சுத்தமாக்கும் சீரகம்

“எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத்தேனில் கலந்துண்ண விக்கலும்
விட்டுப்போகுமே
விடாவிடில் நான் தேரனும் அல்லவே ”


என்பது சித்தர் பாடல். இதுபோல பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் சீரகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

எகிப்து நாட்டில் பழங்காலம் தொட்டு மணத்திற்காகவும், மருந்திற்காகவும் சீரகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்திய, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் சமையலில் சீரகம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மருத்துவகுணம் தெரியாமலேயே ஏராளமானோர் சீரகத்தை பயன்படுத்தி வருகின்றனர். உடலின் உள் உறுப்புகளை முக்கியமாக வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் சீரகம் பெரும் பங்காற்றுகிறது. இதனாலேயே இது சீர்+அகம்=சீரகம் என்று பெயர் பெற்றுள்ளது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்ட சீரகம், இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக சமையலில் சேர்க்கப்படுகிறது.

வேதிப்பொருட்கள்

சீரகத்தில் 2.5 சதவிகிதம் எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருள் காணப்படுகிறது. இதிலிருந்து ஆல்டிஹைடுகள், பைனினி, ஆல்பா டெர்பினியோல், குயிமினின் போன்ற பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மருத்துவ பயன்கள்

சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

உடல் உள் உறுப்புகள் சீராக இயங்க:

உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. நாட்பட்ட கழிச்சல் தீர மற்ற மருந்துகளுடன் சேர்த்து கொடுக்க நல்ல பலன் தரும். இரத்தத்தைச் சுத்தமாக்குகிறது, தோல் நோய்களைக் கட்டுப்படுத்துகிறது,

சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடி செய்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.

சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

பெண்களுக்கு ஏற்ற மருந்து

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.

சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டு ளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக நீரை சேர்த்துக் கொடுக்கலாம். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.

ரத்த அழுத்த நோய் குணமாகும்

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும்.

சிறிதளவு சீரகத்துடன் திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும். வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.

சக்தி நிறைந்த உடல் – அறிவியல் உண்மைகள்

மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.


மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

முன்னோர் வார்த்தைகள்

எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்

மின் அதிர்ச்சி

மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடல் என்னும் சக்தி

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

எப்படி உறங்குவது?

வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

விரல்களின் முத்திரையில் வியாதிகள் தீரும்



நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது இந்த பிரபஞ்சம். இதில் ஓர் அங்கமாக விளங்கும் நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

விரல்களும் மூலகங்களும்

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

சிந்தனைச் சக்தி

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும். இதன்படி தியானம் செய்தால் வலிகள் குணமாகும்.

காது நன்கு கேட்க!

காதில் வலி என்றால் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!

மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ தேவையில்லை. இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும், மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

Friday, May 20, 2011

புகழ் பெற்ற ஊட்டி மலர்க்கண்காட்சி இன்று தொடக்கம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது.

கோடை விழா

ஊட்டியில் கோடை விழா கடந்த 7ம்தேதி ரோஜா கார்டனில் ‘ரோஜா கண்காட்சி’ மூலம் துவங்கியது. அதனை அடுத்து கடந்த 14,15ம்தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற்றது. ஊட்டி சீசனின் மிக முக்கிய நிகழ்வான மலர்க்கண்காட்சிஇன்று முதல் துவங்க இருக்கிறது. 22ம் தேதிவரை இந்த கண்காட்சி நடைபெற இருக்கிறது.

பூக்களால் உலகக் கோப்பை

இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றியை நினைவூட்டும் வகையில் பூக்களால் ஆன பிரம்மாண்டமான உலகக்கோப்பை அலங்காரம் இந்த ஆண்டு மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சம் ஆகும். இது தவிர, பிரம்மாண்டமான கங்காரு ஒன்றின் உருவத்தையும் தாவரவியல் பூங்காவில் உருவாக்கி வருவார்கள். இந்த ஆண்டு கண்காட்சிக்கென பிரத்யேகமாக 15 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.

சிறப்பு ஏற்பாடுகள்

மலர்க்கண்காட்சிக்கு இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தினரால் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.

ஐஎம்எப் தலைவராவாரா சிங்கப்பூர் நிதியமைச்சர் சண்முகரட்னம்?

சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டு துணைப் பிரதமரும் நிதியமைச்சரான தர்மன் சண்முகரட்னத்தை சர்வதேச நிதிக் கழகத்தின் (International Monetary Fund) தலைவராக நியமிக்க வேண்டும் என தெற்காசிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்ப்பாண வம்சாவளித் தமிழரான இவர் 2007ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நிதியமைச்சராக உள்ளார். கடந்த வாரம் இவரை துணைப் பிரதமராகவும் நியமித்தார் அந் நாட்டு பிரதமர் லீ சென் லூங்.

அந் நாட்டு முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான சண்முகரட்னம் நேற்று தான் சிங்கப்பூர் நிதி ஆணையத்தின் (Monetary Authority of Singapore-MAS) தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

இந் நிலையில் இவரை சர்வதேச நிதிக் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிலிப்பான்ஸ், தாய்லாந்து நிதியமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டில் கைதானதைத் தொடர்ந்து ஐஎம்எப் தலைவர் பதவியிலிருந்து டோமினிக் ஸ்டிராஸ் கான் ராஜானாமா செய்துள்ள நிலையில், இந்தப் பதவியை தர்மன் சண்முகரட்னத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஐஎம்எப் உருவாக்கப்பட்ட 1946ம் ஆண்டிலிருந்தே அதன் தலைவராக ஐரோப்பியர்களே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை காக்க சண்முகரட்னம் போன்ற மிகச் சிறந்த பொருளாதார மூளைகளே உதவ முடியும் என்று பிலிப்பைன்ஸ் நிதி்த்துறைச் செயலாளர் சீசர் புருசிமா கூறியுள்ளார்.

இப்போது சண்முகரட்னம் ஐஎம்எப்பின் ஸ்டீரிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, May 10, 2011

ஸ்கைப்பை வாங்க முயற்சிக்கும் கூகுள், பேஸ்புக்!!



தொலைபேசி இல்லாமல் இணையதளம் மூலம் பேச, சாட் செய்து கொள்ள வசதி செய்து தரும் ஸ்கைப் தளத்தை வாங்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளன கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள்.

ஸ்கைப்பை வாங்குவது குறித்து தனிப்பட்ட முறையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஸுகர்பர்க் பங்கேற்றதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த டீலில் தன்னுடன் லக்சம்பர்க்கைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றையும் சேர்த்துக் கொள்ள ஸுகர்பர்க் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இன்னொரு பக்கம் ஸ்கைப்பை தன்வசப்படுத்த கூகுள் நிறுவனமும் கடும் முயற்சி செய்து வருகிறது.

ஸ்கைப்பின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 3 முதல் 4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகையை கொடுத்து வாங்க கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டுமே தயாராக உள்ளன.

ஆனால், இதற்கான பேச்சுக்கள் இப்போதுதான் முதல்கட்டத்தில் இருப்பதாகவும், பொருத்தமான நேரத்தில் இந்த டீல் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்றும் ஸ்கைப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2003-ல் ஆரம்பிக்கப்பட்டது ஸ்கைப். 2005-ல் 3.1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த நிறுவனத்தை வாங்கியது இபே. 2009-ல் ஸ்கைப்பிலிருந்த தனது பெரும்பான்மைப் பங்குகளை கனடாவைச் சேர்ந்த சில்வர் லேக் நிறுவனத்துக்கு விற்றது இபே. ஆனால் இப்போதும் மூன்றில் ஒரு அளவு பங்குகளை தன்வசம் வைத்துள்ளது இபே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 1 பில்லியன் டாலர் அளவுக்கு புதிய பங்கு வெளியிடத் திட்டமிட்டிருந்தது ஸ்கைப். ஆனால் இந்த முயற்சி தாமதமாகி வருவதால், நிறுவனம் கைமாறுவது குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளன.

கூகுள் ஏற்கெனவே கூகுள் வாய்ஸ் என்ற நிறுவனத்தை தன்வசம் வைத்துள்ளது. ஸ்கைப் செய்யும் சேவையைத்தான் கூகுள் வாய்ஸும் செய்கிறது. எனவே பேஸ்புக் நிறுவனத்திடம் ஸ்கைப் செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

Monday, May 9, 2011

தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம்

கோவை: ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.

சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்).

மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குறித்து, "சென்' குழுவைச் சேர்ந்த சோமன், தனலட்சுமி, ஆனந்தகுமார், மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது: கம்ப்யூட்டர் துறையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் இயற்கை மொழிகளை கம்ப்யூட்டருக்குள் புகுத்தும் முயற்சி நடக்கிறது. அந்தந்த நாட்டு மொழிகளில் பலரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் இயற்கை மொழி ஆய்வில் 2007ல் இருந்து ஈடுபட்டுள்ளோம். கம்ப்யூட்டர் மொழிப்பெயர்ப்புக்கு தேவையான மொழியியல் கருவி, துவக்கநிலை மொழிப்பெயர்பு சாதனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கலாம். தமிழ் சொல்வகை அடையாளப்படுத்தி, தொடர் பகுப்பான், உருபனியல் பகுப்பாய்வி போன்ற சாப்ட்வேர் மூலம் ஆங்கில சொற்றொடர்கள், வார்த்தை, பால்விகுதி, காலம் போன்றவற்றின் அடிப்படையில் தமிழில் மொழிப்பெயர்க்கப்படுகிறது. எந்த வினைச்சொல்லாக இருந்தாலும், எப்போது, எந்த பால் விகுதியை குறிக்கும் என கணித்து மொழிபெயர்க்கப்படும்.

வார்த்தைகளில் குறில், நெடில், வினை, மாத்திரை போன்ற அடிப்படை இலக்கணத்தையும் அடையாளம் காட்டும். எனவே, ஆங்கிலம் தெரியாத மாணவர்கள் உட்பட பலரும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி எளிதாக தமிழில் மொழிப்பெயர்க்கலாம். ஆசிரியர்கள் உதவியின்றி இலக்கணத்தை கூட கற்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்தி மொழியிலும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது; அடுத்தடுத்து பிற முக்கிய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் உருவாக்கப்படும். ஆங்கிலத்தில் உள்ள சிறந்த புத்தகங்களை கூட அந்தந்த மொழிகளில் எளிதாக மொழிப்பெயர்த்து பயனடையலாம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Thursday, May 5, 2011

அட்சய திருதியை: 20,000 கிலோ தங்கம் இறக்குமதி செய்யும் எம்எம்டிசி!

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு, இந்த நிதியாண்டில் 20 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்ய அரகசுத் துறை நிறுவனமான கனிம மற்றும் உலோக விற்பனைக் கழகம் (எம்எம்டிசி) முடிவு செய்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் பாத்ரா கூறியதாவது:

"இந்தியாவில் தங்கத்தின் தேவை எப்போதும் அதிகமாகவே உள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 73,900 கிலோ தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் எம்எம்டிசி மட்டும் 19 ஆயிரம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்தது.

இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை வேகமாக அதிகரித்து வருகிறது. வரும் மே 16-ம் தேதி அட்சய திருதியை வருவதால் தங்கத்தின் விற்பனையும், விலையும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது", என்றார்.

இந்தியாவில் எம்எம்டிசி-தான் அதிக அளவு தங்கத்தை இறக்குமதி செய்யும் அரசுத் துறை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை செல்வம் பெருக வைக்கும் அட்சய திருதியை

படைப்புக் கடவுளான பிரம்மன் சித்திரை மாதத்தின் வளர்பிறை திருதியை நாளன்றுதான் உயிர்களை உருவாக்கும் தொழிலை தொடங்கினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தொடங்கும் செயல் வளர்ச்சியடையும் என்பது அனைவரின் நம்பிக்கை.

நாளை அட்சய திருதியை தினமாகும் . இந்த நாளில் ஏழை, எளியோருக்கு தானம் செய்தால் அதற்கான புண்ணியம் பன்மடங்காக பெருகி நமக்கு திரும்ப கிடைக்கும் என்பது ஐதீகம்.

“அட்சய” என்ற சொல்லுக்கு அழிவின்றி வளர்வது என்று பொருள். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு பின்வரும் மூன்றாம் பிறை நாள் (திருதியை) அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான, தர்மங்கள் செய்தால் குறைவின்றி வாழலாம் என்பது முன்னோர் வாக்கு.

அட்சய திருதியை நாளினைப் பற்றி மகாபாரதத்தில் பல கதைகள் உண்டு.

பாண்டவர் வனவாசம் சென்ற போது, பசியால் அவதிப்பட்டனர். அதிலிருந்து விடுபட மகாவிஷ்ணுவை வழிபட்டனர். அப்போது அவர், சூரியபகவானை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி வழிபாடு செய்தவுடன் சூரிய பகவான் அட்சய பாத்திரம் வழங்கினார். சித்திரை மாதத்தில் பாண்டவர்களுக்கு கிடைத்த அட்சய பாத்திரம் கேட்டதையெல்லாம் வழங்கியது என்கிறது மகாபாரதம்.

இதுபோல் மற்றொரு மகாபாரதக் கதை அட்சய திருதியை நாளின் சிறப்பை விளக்குகிறது.

கண்ணனின் நண்பரான குசேலரின் வாழ்க்கையில் வறுமை சூழ்ந்திருந்தது. தன் வறுமையை போக்க, ஒரு பிடி அவலோடு கண்ணனை காணச்சென்றார் குசேலர்.

அவலை எப்படி கொடுப்பது என்று குசேலர் யோசித்த போது, கண்ணன், “அக்ஷய” என்று சொல்லி அந்த அவலை எடுத்து உண்டார்.

வீடு திரும்பிய குசேலர் தன் வீட்டையும், மனைவியையும் அடையாளம் காண முடியாத அளவிற்கு செல்வம் குவிந்திருந்து என்கிறது இதிகாச கதை.

அட்சய திருதியை நாளில் அம்பிகையே அன்று தன் கையால் இறைவனுக்கு உணவளிக்கிறாள் என்றும், ஆகவே நாமும் சாப்பிடும் உணவை இறைவனுக்கு நிவேதனம் செய்து மாலையில் பசுமாட்டிற்கு உணவளித்துவிட்டு உணவுண்பது நல்லது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அக்ஷய திருதியைக்கு தங்கம்தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உப்பு, மஞ்சள், அரிசி, நவதானியம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஏழைகளுக்கு தானம் அளிக்கலாம். நமக்காக தங்கம் வாங்கி சேமிப்பதில் உள்ள மகிழ்ச்சியை விட ஏழைகளுக்கு நம்மால் முடிந்த பொருளுதவி செய்து இறைவனை நினைத்து பஜனை, ஹோமம் செய்து, அதன் மூலம் புண்ணியம் பெறுவோம்.

ரூ.1,80,208 கோடி நஷ்டம்... டீஸல் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது!!

டெல்லி: சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் டீஸல் விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அநேகமாக லிட்டருக்ரு 3 வரை விலை உயரும் என்று எண்ணெய் நி்றுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் விலையை உயர்வை சர்வதேச சந்தை விலை நிலைக்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் 8 முறை பெட்ரோல் விலையை உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் டீஸல் விலையை மட்டும் உயர்த்தவில்லை. அப்படி உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதாலும், பொது மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் டீஸல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தள்ளிப் போடலின் பலன், அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன. அதாவது டீஸல், கெரோஸின், சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் வெளியிடப்பட்டதைப் போல எண்ணெய் கடன் பத்திரங்கள் எதையும் இந்த ஆண்டு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனியும் டீஸல் விலை உயர்வை தள்ளிப் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகளழ் வெளியான கையோடு, டீஸல் விலை உயர்வையும் அறிவிக்க, டீஸல் விலை உயர்வு குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஒரு லிட்டர் டீஸலுக்கு ரூ 3 வரை உயர்த்தலாம் என ஏற்கெனவே இந்த குழு பரிந்துரைத்துள்ளதால், எடுத்த எடுப்பில் டீஸல் விலையில் ரூ 3 உயர்த்தப்படுகிறது.

டீஸலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு மற்றும் கெரோஸினுக்கும் விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Monday, May 2, 2011

காலையில் சாப்பிடுவதில்லையா? : நீங்களும் மூளை பாதிப்பாளாகிறீர்கள் : மூளையை பாதிக்கும் 9 பழக்கவழக்கங்கள்


காலையில் சாப்பிடுவதில்லையா? : நீங்களும் மூளை பாதிப்பாளாகிறீர்கள் : மூளையை பாதிக்கும் 9 பழக்கவழக்கங்கள்




1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது :

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது : இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல் : மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல் : நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத்
தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று : மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை : நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை
ஏற்படுத்தும். அதே போன்று அதிகமாக தூங்குவதும் மூளைக்கு ஆபத்து தான். சராசரியாக 6-8 மணிநேரம் நித்திரை செய்து மூளைக்கு ஓய்வு கொடுங்கள்!

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது : தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது : உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை

மேற்கொள்ளாமல் இருப்பது : மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

Thanks
TamilMedia.com

மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!

பள்ளிகளில் தேர்வு காலம் தொடங்கிவிட்டாலே, பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர்களுக்கும் டென்ஷன் தொற்றிக்கொள்ளும்.

தேர்வு பயத்தில் பிள்ளைகள் சரிவர சாப்பிடாமல் இருக்க, அவர்களை உரிய நேரத்தில் சாப்பிட வைப்பதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.அதே சமயம் கெஞ்சி, கூத்தாடி தாங்கள் கொடுக்கிற சாப்பாடு சரியானதுதானா அல்லது எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம் என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழும்.

கீழ்க்கண்ட உணவு வகைகளை கொடுத்தால், மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் மன் அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!

ஆரஞ்சுப்பழம்:

மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினல அவர்களது வைட்டமின் சி அளவும் மிகவும் குறைந்து போய்விடுகிறது.இந்த வைட்டமின் சி இழப்பால் ஒரு சில நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள்.

இதனை தடுக்க ஆரஞ்சுப் பழம் கொடுப்பது மிக நல்லது.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாது, உடல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் அமிலமும் ஏராளமாக உள்ளதால் அதனை தேர்வு நேரத்தில் அடிக்கடி சாப்பிட கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பசளிக்கீரை:

பசளிக்கீரையில் வைட்டமின் ஏ சத்துடன், ஏராளமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.பசளிக்கீரையில் உள்ள இரும்பு சத்து, நல்ல நோய் எதிர்ப்பு திறனை உடலுக்கு அளிப்பதோடு, குழந்தைகளின் மூளை செயல்பாடுக்கு பலம் அளிக்கிறது. மேலும் அதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு வலுவாக வளர்ச்சியடைய உதவுவதோடு, அதிக நேரம் படிப்பதால் கண் அயர்ச்சி ஏற்படுவதையும் குறைக்கிறது.

தண்ணீர்:

தண்ணீர் அருந்துவது அடிப்படையான ஒன்றுதான் என்றாலும், தேர்வுக்கு படிக்கும் மன அழுத்தத்தில் குழந்தைகள் சில சமயம் தண்ணீர் அருந்தாமல் கூட இருந்துவிடுவது உண்டு.எனவே தேர்வுக்கு படிக்கும் குழந்தைகளை கட்டாயம் அவ்வப்போது தண்ணீர் அருந்துமாறு பெற்றோர்கள் பார்த்துக் கொள்வது அவசியமானது.

தண்ணீர் ஜீரணத்திற்கு உதவுவதோடு, சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதையும், மலசிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது.அத்துடன் உடல் சூட்டையும் ஒரே சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.இதனால் தேர்வு நேரத்தில் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

பால்:

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் 600 மில்லி கிராம் கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. அதுவும் தேர்வு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம்.மேலும் உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கால்சியம் சத்து மிகவும் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.

புரதம்:

வளரும் குழந்தைகளுக்கு முட்டை, பால் பொருட்கள் அல்லது இறைச்சி ஆகியவற்றின் மூலமாகவே அல்லது இதர உணவு பொருட்கள் மூலமாகவோ புரத சத்து கொடுக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்பதால், தேர்வு காலத்தில் இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

தல அஜித் குமார் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்





தல அஜித் குமார் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்



1998ம் ஆண்டு வெளிவந்த 'காதல் மன்னன்' என்ற படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் ஏற்பட்ட காதலால் ஷாலினியை 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நட்சத்திரத் தம்பதியினருக்கு வாரிசு 'அனோஷ்கா' என்ற குட்டி தேவதை.

தனது பெயருக்கும் முன்னால் எந்த பெயரையும் போட விரும்ப மாட்டார். ஆனால் அமர்க்களம் படத்தில் 'அல்டிமேட் ஸ்டார்' என்ற பட்டத்தை கொடுத்தவர் சரண். அடுத்து சரண் இயக்கிய 'அசல்' படத்தில் பட்டம் எதுவும் போட வேண்டாம் என அஜீத்தே நீக்க சொல்லிவிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த வெற்றிப்படம் 'தீனா'. படத்தில் " தலை இருக்கும்போது வால் ஆடக்கூடாது.. நீ ஆடு தலை.. " என்று வசனம் வரும். அன்று முதல் ரசிகர்களுக்கும் 'தல' ஆனார் அஜீத்.

அவரது சினிமா வாழ்க்கையில் சர்ச்சைகளும் விடவில்லை. நியூ, மிரட்டல், நான் கடவுள், ஏறுமுகம் என பல படங்கள் இவர் கமிட் ஆகிவிட்டு கருத்து வேறுபாடால் நடிக்க முடியாது என்று கூறி விட்டார்.

வாலி, வில்லன், வரலாறு போன்ற படங்களில் இரண்டு/மூன்று வேடங்களில் நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் ஹிட்.! ஆனந்தப் பூங்காற்றே, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என போன்ற படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார்.

மனதில் பட்டதை அப்படியே பேசிவிடுவார். அதனாலேயே பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்து விடுவார். சமீபத்தில் கலந்து கொண்ட 'பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற நிகழ்ச்சியில் " ஐயா.. அடிக்கடி ஏதாவது நிகழ்ச்சினு மிரட்டி வர சொல்றாங்கய்யா.. " என்று மேடையில் முதல்வர் கருணாநிதியிடமே முறையிட்டார். அஜீத் பேச்சிற்கு மேடையில் இருந்த ரஜினி எழுந்து நின்று கை தட்டினார்.
இன்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நெருக்கமானவர் அஜீத். ரஜினி நடித்த பில்லா படத்தின் ரீமேக்கில் அஜீத் தான் நடிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தவர் ரஜினி.

கல்யாணத்திற்கு முன்பு புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர். கல்யாணம் ஆனவுடன் தனது மனைவிக்காக சிகரெட்டை விட்டொழித்தார்.

சிம்பு, ஜீவா, ஆர்யா என தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்கள் ஃபேவரைட் எப்போதும் அஜீத் தான். அதிலும் சிம்பு ஒரு அஜீத் வெறியர்.

பல நாயகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களுக்கு நாயகியாக இவர் தான் வேண்டும் என்று சிபாரிசு செய்வார்கள். ஆனால் அஜீத் எப்போதும் நாயகி விஷயத்தில் தலையிடுவது இல்லை.

'நேருக்கு நேர் படத்தில் அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்தனர். இருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அஜீத் படத்திலிருந்து விலக, சரவணன் என்ற இளைஞரை அஜீத் நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் வஸந்த். சரவணனுக்கு சினிமாவுக்காக சூட்டப்பட்ட பெயர் சூர்யா.

அஜீத்தும் விஜய்யும் இணைந்து நடித்த ஒரே படம் 'ராஜாவின் பார்வையிலே'. அதன் பிறகு இருவருக்கும் என தனித்தனியாக ரசிகர்கள் கூட்டம் சேர, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தனர். இருவரும் தொழில்முறையில் போட்டியாளர்கள் என ஆகிவிட, அவர்களது ரசிகர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். 'மங்காத்தா' படப்பிடிப்பில் விஜய்யும் அஜீத்தும் சந்தித்து கொண்டதிலிருந்து இன்றும் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

சுப நிகழ்ச்சிகளுக்கு போகிறாரோ இல்லையோ துக்க நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வார். சமீபத்தில் பாடகி சித்ராவின் குழந்தை நந்தனா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

தனது 50வது படமான மங்காத்தாவில் ஜார்ஜ் க்லூனி போன்ற கெட்டப்பில் நடித்து வருகிறார். வாலி, வரலாறு என தான் கதாநாயகனாக நடித்த படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தாலும், மங்காத்தா படத்தில் வில்லனாக மட்டுமே நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் சிலர் கூறவே " எனது பெயரை தவறாக உபயோகித்தால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன்" என்று எச்சரித்தார். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் இவரது பெயர் தவறாக உபயோகப்படுத்தப்படவே தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும் கலைத்து விட்டார் அஜீத்.

மங்காத்தா டிரைலர்


அஜீத் ரசிகர் மன்ற கலைப்புக்கு கூறும் காரணம் " மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகருக்கும் அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"

தீவிரமான சாய்பாபா பக்தர். கார், பைக் என எந்தப் பொருள் வாங்கினாலும் பாபாவுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுதான் பயன்படுத்துவார்!
வெளி இடங்களில் தண்ணீர், பழரசம் போன்றவற்றை அருந்த வேண்டியிருந்தால், இடது கையால் தான் கிளாஸைப் பிடித்துக் கொள்வார். பெரும்பாலான வலது கைக் காரர்கள் பயன்படுத்தியபோது உதடுகள் பட்ட பகுதியைத் தவிர்ப்பதற்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை!
சினிமாவில் நடிப்பதற்கு முன் வேலை பார்த்த ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் நிலவரங்களை இப்போதும் அடிக்கடி அப்டேட் செய்துகொள்கிறார்!
வீடு, அலுவலகம் என எங்கு ரசிகர்களைச் சந்தித்தாலும், 'உங்க குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்க. மன்றப் பணிகளை நேரம் இருந்தா பார்த்துக்கலாம்!' எனப் பாசமாக வலியுறுத்துவார்!
உள்ளூர் அரசியல் பற்றித்தான் கருத்துச் சொல்ல மாட்டார். ஆனால், உலக அரசியலின் இன்றைய நிலவரம்பற்றி எந்த நிமிடமும் அவரிடம் பேச, விவாதிக்க அவ்வளவு விஷயம் இருக்கும்!
சாய்பாபாவுக்குப் பிறகு அஜீத்துக்குப் பிடித்த தெய்வம் திருப்பதி வெங்கடாஜலபதி. சென்னையில் இருந்தே இதுவரை இரண்டு தடவை நடந்தே சென்று திருப்பதி சாமி தரிசனம் செய்திருக்கிறார்!
ரேஸ் போட்டிகளில் அஜீத்துக்கு ரோல் மாடல் பிரபல ரேசர் அயர்டன் சென்னா. அஜீத்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதிதான் அயர்டன் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதை நினைத்து தன் பிறந்த நாளன்றும் உருகி வருந்துவார் அஜீத்!
ரசிகர்களின் திருமணங்களுக்குத் தன்னுடைய பெயர், படம் போட்டு ஃப்ளெக்ஸ் பேனர்கள் அடிப்பதை விரும்பவே மாட்டார். 'கல்யாணம் ரொம்ப பெர்சனல் விஷயம்ல!' என்பார்!
தனது மொபைல் போனில் குழந்தை அனோஷ்கா பிறந்ததில் இருந்து இப்போது வரை நடப்பது, பேசுவது, ஓடுவது, சிரிப்பது என எல்லாமே குட்டிக் குட்டி வீடியோ கிளிப்பிங்குகளாக இருக்கின்றன. படப்பிடிப்பு இடைவேளைகளில் அவற்றைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பார்!
'இது நான் பேச உங்களுக்கு உகந்த நேரமா?' என கேட்டுவிட்டுத்தான் தொலைபேசி, அலைபேசிகளில் பேச ஆரம்பிப்பார்!
பொதுவாக, சுயசரிதை நூல்கள் வாசிப்பது பிடிக்கும். ரஜினி பரிசளித்த 'ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தை அடிக்கடி வாசிப்பார். வீட்டில் மினி நூலகமே உண்டு!
அஜீத்தின் விமான ஆசை கிளை விரித்தது ஆசான் மெமோரியல் பள்ளியில். அங்கே அவர் பாடமாகப் படித்த ஏரோ மாடலிங்தான் இன்றைய ரிமோட் விமானம், பைலட் அசோசியேஷன் நடவடிக்கைகள் வரை வளர்ந்து நிற்கிறது!
உருளைக்கிழங்கு பொரியல், சாம்பார், சிக்கன் பிரியாணி சமைப்பதில் எக்ஸ்பர்ட். சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாகத் தெரிந்தால், நண்பர்கள் வீட்டில் குவிந்து, பிரியாணி சமைக்கச் சொல்லி அஜீத்தை வம்பிழுப்பார்கள்!
எந்த ஹோட்டலுக்குச் சென்றாலும் புதுவித உணவு வகைகளாக ஆர்டர் செய்வார். அந்த உணவு அருமையாக இருந்தால், அதைத் தயாரித்தவர்களை நேரில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுவார்!
படிக்கிற காலத்தில் தீவிர கிரிக்கெட் பிரியர். ஆனால், இப்போது 'கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் எல்லா விளையாட்டுகளுக்கும் தேவை' என்கிறார்!
மனித முகங்களைப் படம் பிடிப்பதில் கேமராமேன் அஜீத்துக்கு அத்தனை ஆர்வம். நண்பர்களின் கேமரா பழுதடைந்தால் பைசா செலவில்லாமல் ரிப்பேர் சரி செய்து தரும் அளவுக்கு கேமராக் காதலர் இவர்!
அனோஷ்கா, தந்தையை 'அஜீத் குமார்' என்றுதான் அழைப்பாள். அப்படி ஒவ்வொரு முறை அனோஷ்கா அழைக்கும்போதும் பூரிப்பில் முகம் இன்னும் சிவக்கும் அஜீத்துக்கு!
மினியேச்சர் ஹெல்மெட்களைச் சேகரிப்பது அஜீத்தின் பொழுதுபோக்கு. விதவித நாணயங்கள், தபால் தலைகளைக் காட்டிலும் அபூர்வமான கலெக்ஷன்ஸ் இது!
தான் நடித்த படம் ரிலீஸ் ஆன பிறகு ரிசல்ட் கேட்டு அதைப்பற்றிய விமர்சனத்தில் ஈடுபடவே மாட்டார் அஜீத். 'சந்தைக்கு வந்திருச்சு. இனி ரசிகர்கள்தான் தீர்மானிக்கணும். நம்ம பங்கு முடிஞ்சுபோச்சு!' என்பார்!
நன்றி -ஆனந்த விகடன்