Thursday, May 5, 2011

ரூ.1,80,208 கோடி நஷ்டம்... டீஸல் லிட்டருக்கு ரூ. 3 உயர்கிறது!!

டெல்லி: சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், நீண்ட நாளாக கிடப்பிலிருக்கும் டீஸல் விலை உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அநேகமாக லிட்டருக்ரு 3 வரை விலை உயரும் என்று எண்ணெய் நி்றுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல் விலையை உயர்வை சர்வதேச சந்தை விலை நிலைக்கேற்ப பெட்ரோல் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மட்டும் 8 முறை பெட்ரோல் விலையை உயர்த்தின எண்ணெய் நிறுவனங்கள்.

ஆனால் டீஸல் விலையை மட்டும் உயர்த்தவில்லை. அப்படி உயர்த்தினால் பொதுமக்களின் கோபத்துக்கு உடனடியாக இலக்காக வேண்டுமே என்பதாலும், பொது மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதாலும் டீஸல் விலை உயர்வு மட்டும் தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தள்ளிப் போடலின் பலன், அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மொத்தமாக ரூ180208 கோடி அளவுக்கு நஷ்டம் என்று கணக்குக் காட்டியுள்ளன. அதாவது டீஸல், கெரோஸின், சமையல் எரிவாயு போன்றவற்றை மானிய விலையில் தருவதால் ஏற்பட்டுள்ள நஷ்டம் இது என்று கூறுகின்றன. ஆனால் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட மத்திய அரசு கடந்த நிதியாண்டில் 20,911 மட்டுமே அளித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் வெளியிடப்பட்டதைப் போல எண்ணெய் கடன் பத்திரங்கள் எதையும் இந்த ஆண்டு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இனியும் டீஸல் விலை உயர்வை தள்ளிப் போட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், தேர்தல் முடிவுகளழ் வெளியான கையோடு, டீஸல் விலை உயர்வையும் அறிவிக்க, டீஸல் விலை உயர்வு குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ஒரு லிட்டர் டீஸலுக்கு ரூ 3 வரை உயர்த்தலாம் என ஏற்கெனவே இந்த குழு பரிந்துரைத்துள்ளதால், எடுத்த எடுப்பில் டீஸல் விலையில் ரூ 3 உயர்த்தப்படுகிறது.

டீஸலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு மற்றும் கெரோஸினுக்கும் விலை உயர்வை அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment