Monday, May 2, 2011

மாணவர்களுக்கான தேர்வு கால உணவுகள்!

பள்ளிகளில் தேர்வு காலம் தொடங்கிவிட்டாலே, பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர்களுக்கும் டென்ஷன் தொற்றிக்கொள்ளும்.

தேர்வு பயத்தில் பிள்ளைகள் சரிவர சாப்பிடாமல் இருக்க, அவர்களை உரிய நேரத்தில் சாப்பிட வைப்பதற்குள் பெற்றோர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும்.அதே சமயம் கெஞ்சி, கூத்தாடி தாங்கள் கொடுக்கிற சாப்பாடு சரியானதுதானா அல்லது எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம் என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழும்.

கீழ்க்கண்ட உணவு வகைகளை கொடுத்தால், மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் மன் அழுத்தம் குறையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்!

ஆரஞ்சுப்பழம்:

மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினல அவர்களது வைட்டமின் சி அளவும் மிகவும் குறைந்து போய்விடுகிறது.இந்த வைட்டமின் சி இழப்பால் ஒரு சில நோய் தாக்குதலுக்கு ஆளாகுகிறார்கள்.

இதனை தடுக்க ஆரஞ்சுப் பழம் கொடுப்பது மிக நல்லது.ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமல்லாது, உடல் வளர்ச்சிக்கு தேவையான ஃபோலிக் அமிலமும் ஏராளமாக உள்ளதால் அதனை தேர்வு நேரத்தில் அடிக்கடி சாப்பிட கொடுக்கலாம் என்கின்றனர் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

பசளிக்கீரை:

பசளிக்கீரையில் வைட்டமின் ஏ சத்துடன், ஏராளமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.பசளிக்கீரையில் உள்ள இரும்பு சத்து, நல்ல நோய் எதிர்ப்பு திறனை உடலுக்கு அளிப்பதோடு, குழந்தைகளின் மூளை செயல்பாடுக்கு பலம் அளிக்கிறது. மேலும் அதிலுள்ள கால்சியம் குழந்தைகளின் எலும்பு வலுவாக வளர்ச்சியடைய உதவுவதோடு, அதிக நேரம் படிப்பதால் கண் அயர்ச்சி ஏற்படுவதையும் குறைக்கிறது.

தண்ணீர்:

தண்ணீர் அருந்துவது அடிப்படையான ஒன்றுதான் என்றாலும், தேர்வுக்கு படிக்கும் மன அழுத்தத்தில் குழந்தைகள் சில சமயம் தண்ணீர் அருந்தாமல் கூட இருந்துவிடுவது உண்டு.எனவே தேர்வுக்கு படிக்கும் குழந்தைகளை கட்டாயம் அவ்வப்போது தண்ணீர் அருந்துமாறு பெற்றோர்கள் பார்த்துக் கொள்வது அவசியமானது.

தண்ணீர் ஜீரணத்திற்கு உதவுவதோடு, சிறுநீரகங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுவதையும், மலசிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது.அத்துடன் உடல் சூட்டையும் ஒரே சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.இதனால் தேர்வு நேரத்தில் தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

பால்:

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தினமும் 600 மில்லி கிராம் கால்சியம் சத்து மிகவும் அவசியமானது. அதுவும் தேர்வு நேரம் என்றால் கேட்கவே வேண்டாம்.மேலும் உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கால்சியம் சத்து மிகவும் அவசியம் என்பதால் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.

புரதம்:

வளரும் குழந்தைகளுக்கு முட்டை, பால் பொருட்கள் அல்லது இறைச்சி ஆகியவற்றின் மூலமாகவே அல்லது இதர உணவு பொருட்கள் மூலமாகவோ புரத சத்து கொடுக்கப்படுவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்பதால், தேர்வு காலத்தில் இதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment