Thursday, April 7, 2011

இந்தியா முழுதும் வெடித்தது புதிய புரட்சி !!!


இந்தியா உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு. 120 கோடி மக்களைத் தாங்கி நிற்கும் பூமி. ஆனால் உலகிலயே பெரும் கோடிஸ்வரனும் உலகிலேயே பிச்சைக்காரனும் பக்கத்துத் தெருவில் வசிக்கும் நிலைமை இந்த நாட்டில் தான். எதையும் சகித்துப் பொறுத்து வாழப் பழகிய நமக்கு எதிர்த்துப் பேசவும், போராடவும் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டார்கள். பெண்டாட்டியைத் தவிர நம்மில் பலருக்கு எதையும் அடித்துப் பழக்கம் இல்லை. சிலருக்கோ அந்தப் பாக்கியமும் இல்லை. இந்த தேசம் எப்படி எல்லாம் சீரழிந்து இருக்கின்றது. இதற்கு யார் காரணம் ??? அரசியல்வாதிகளா, சினிமாக் காரர்களா, குண்டர்களா ??? நிச்சயம் இல்லை இதற்கு காரணமே நம் இயலாமைத் தனம் தான். வெறும் வாய்ப் பேச்சில் வீரம் பேசும் இந்திய ஆண்களுக்கு மனதில் வீரம் இல்லை. ஆண்மை நிரூபிக்க பெண்களிடம் தான் செல்கின்றோமே தவிர வேறு ஒன்றையும் வெட்டிப் பிடுங்கியது இல்லை.

இதோ இன்று இப்போது இந்த நாட்டில் பலர் இந்த நாட்டை பிடித்து இருக்கும் லஞ்சம், ஊழல் என்னும் பீடையை அகற்ற போராடத் தொடங்கிவிட்டனர். இதோ நீங்கள் இதனைப் படித்துக் கொண்டிருக்கும் இத்தருணம் எண்ணற்ற இளைஞர்களும், குடும்பத்தார்களும், முதியோர்களும் ஆங்காங்கே ஊழலற்ற இந்தியாவை நிர்மாணிக்க எதோ ஒரு வகையில் போராட ஆரம்பித்து விட்டனர்.

‘India against corruption’ (IAC) என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக எண்ணற்ற மக்களும் உண்ணாவிரதம், போராட்டத்தில் கலந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஊழலை அகற்றக் கூடிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியா நிறைவேற்றும் படி ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் அண்ணா ஹசாரே சாகும் வரை உண்ணாநோன்பில் இறங்கியுள்ளார்.

நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், கர்நாடாக லோகயுக்தா நிறுவனரும் ஆனா பிரசாந்த பூஷண், கிரண் பேடி, அர்விந்த் கெஜ்ரிவால், ஐஏஎஸ் அதிகாரி நிராஜ் பிரபு ஆகியோர் இணைந்து இதனை நிறைவேற்ற முயற்சி எடுத்தும் மத்திய அரசு இவற்றை நிறைவேற்ற கள்ள மௌனம் சாதித்து வருகின்றது.

லோக்பால் மசோதா கடந்த 1964 முதல் பாராளமன்றத்தில் நிறைவேற்ற கொண்டு வந்தும் நம் நாட்டின் அரசியல்வாதிகளின் மெத்தனத்தால் இவை இன்று வரை நிறைவேறாமல் இருக்கின்றது. இந்த மசோதா நிறைவேறினால் நிச்சயம் லஞ்சம், ஊழலில் ஈடுபடுவோர் மீது மக்களே நேரடியாக பல நடவடிக்கைகள் எடுக்க வழிவகுக்கும் என்பது ஈங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போராட்டத்தை முடக்கவும், இந்த மசோதாவை இல்லாமல் செய்யவும் ஆளும் அரசுகள் கள்ள நடவடிக்கைகள் எடுக்க முனைவதாக செய்திகள் கூறுகின்றன.

72 வயதான காந்தியவாதியான அண்ணா ஹசாரேவின் சாகும் வரை உண்ணாநோன்பு போராடத்துக்கு ஆதரவு தரும் வகையில் அரவிந்த் கெஜ்ரிவால், சாமி அகின்வேஷ், கிரண் பேடி உட்பட 2,000-க்கும் அதிகமானோர் அவருடன் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை இந்தியா நல்லதொரு தேசமாய் மலர் நீங்களும், நானும் என்னச் செய்யப் போகிறோம் ? கூடுமானவரை இந்த செய்திகளையும், லோக்பால் மசோதாவுக்கு ஆதரவும் தர முன்வர வேண்டும், ஆங்காங்கு தோழர்களுடன் இணைந்துப் போராட்டத்தில் ஈடுபடவும் வேண்டும்.

No comments:

Post a Comment