Monday, December 24, 2012

திருப்பாவை - திருவெம்பாவை -6

திருப்பாவை 6. 
 
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! 
 
பொருள்: பெண்ணே பறவைகள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன, பறவைகளுக்கு அரசனான கருடனுக்கு இறைவன் நம் பெருமாள் எழுந்தருளியுள்ள திருக்கோவிலிலிருந்து வெண்சங்கு முழங்கும் ஓசை உன் காதில் விழவில்லையா? நம் கண்ணன் வஞ்சனையால் வந்த பேய்ச்சியான பூதனை மார்பில் தடவிய நஞ்சை உண்ட மாயவன். கஞ்சன் அனுப்பிய சகடாசுரனை எட்டி உதைத்து மாள வைத்த திருவடிகளையுடையவன். பாற்கடல் அலை மேலே பாம்பணையில் பள்ளி கொண்ட பரந்தாமன், உலகுக்கெல்லாம் வித்தானவன். அந்த பரமனை உள்ளத்தே கொண்டு முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து "ஹரி"," ஹரி" என்று ஓதுகின்றனரே அந்த பேரொலி உள்ளம் புகுந்து எங்களை குளிரவைக்கின்றது, உன்னை குளிர வைக்கவில்லையா? சிறு பிள்ளையாய் இருக்கின்றாயே! எழுந்து வா. -- 
 
திருவெம்பாவை 6. மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானே வந்தெம்மை தலையளித்தாட் கொண்டருளும் வானவார் கழல் பாடி வந்தோர்க்குன் வாய் திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும் ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்!
 
 பொருள்: மான் போன்ற மருட்சியுடைய விழிகளையுடைய காரிகையே! நாளை நானே வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன் என்று நேற்று சொல்லிய நீ வெட்கமில்லாமல் இன்னும் தூங்குகின்றாயே? அந்த சொல் எந்த திசையில் போயிற்று என்பதை சொல்? இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? தேவர்களும், மனிதர்களும் மற்றுமுள்ள சகல ஜீவராசிகளும் அறிதற்கரியவனான எம்பெருமானின் மேலான திருவடிகள் எளியவர்களான நமக்கு தானாகவே வந்து காத்து ஆட்கொள்வன. அந்த வீரக் கழலணிந்த திருவடிகளை மனமுருகிப் பாடி வந்த எங்களிடம் வாய் திறந்து பேசினாயில்லை! உடல் உருகவில்லை. உனக்குத் தான் இந்நிலை பொருந்தும். நம் அனைவரின் தலைவனாகிய சிவபெருமானை பாட எழுந்து வா கண்ணே!

No comments:

Post a Comment