Friday, December 28, 2012

திருப்பாவை - திருவெம்பாவை - 11,12

11. கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து செற்றார் திறல் அழியச் சென்று செருச்செய்யும் குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்று அரவு அல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்து தோழிமார் எல்லாம் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண் டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!
 
 
 பொருள்: கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுக்களை வைத்துப் பராமரித்து பால் கறப்பர்; பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற மெல்லிய வயிற்றை உடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே! நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று முகில் வண்ணன் கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன? -
 
12. கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனதுக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்? அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய்! 
 
பொருள்: இளங்கன்றினை ஈன்ற எருமைகள் தங்கள் கன்றுக்குப் பாலை பொழிவதாக கருதிக் கொண்டு தானே பாலைப் பொழிய, அப்பாலினால் இல்லம் முழுதும் நனைந்து சேறாகியிருக்கும் வளம் நிறைந்த செல்வ கோபாலனின் தங்கையே! மார்கழி மாதத்து பனி எங்கள் தலையின் மேல் விழ, உன் வீட்டின் தலை வாசல் படியில் நின்று நின் தோழிமார்களாகிய நாங்கள் அனைவரும் தென் இலங்கை வேந்தனாகிய ராவணனை கோபத்தினால் அழித்த ராமபிரானை, ராகவனை, தாசரதியை, மைதிலி மணாளனை அனைவரும் வாயாறப் பாடுகின்றோம். அதைக் கேட்டும் கூட இன்னும் வாயைத் திறக்காமல் பேசா மடந்தையாக அப்படியே படுக்கையில் கிடக்கின்றாயே! அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து வந்து எங்களை ஏளனமாகப் பார்க்கின்றனர். இன்னும் என்ன உறக்கம் வேண்டிக் கிடக்கின்றது உனக்கு? எழப் போகிறாயா இல்லையா?

 
 
- திருவெம்பாவை 
 
 
11. மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்ன கையார் குடைந்து குடைந்து உன் கழல் பாடி ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோம் காண்! ஆரழல் போல் செய்யாவெண் நீறாடி! செல்வா! சிறுமருங்குல் மைஆர் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமல் காப்பாய் எமைஏலோர் எம்பாவாய்!
 
 பொருள்: பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு அணிந்த பரமனே! சிவ பெருமானே! எல்லா செல்வங்களையும் உடையவனே! உடுக்கை போன்ற சிறிய இடையினையும், மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமையம்மையின் மணவாளனே! ஐயனே! வழி வழி அடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில், குளிர் நீரில் மூழ்கி, கைகளால் நீரைக் குடைந்து குடைந்து, வீரக் கழலணிந்த உன் பொற் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வருகின்றோம். எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் விளையாடலின் வழிப்பட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் செல்கின்றோம். எங்களையும் நல்வழி காட்டி காப்பாற்ற வேண்டும் பெருமானே!

12. ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நல் தில்லைசிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டுஆர்ப்ப பூத்திகழும் பொய்கைகுடைந்து உடையான் பொற்பாதம் ஏத்திஇரும் சுனைநீர் ஆடு ஏலோர் எம்பாவாய்!
 
 பொருள்: நமது பிறவிப் பிணி தீருவதற்கு நாம் சென்று சாரும் பெருமான், நாம் துள்ளி ஆடுதற்குரிய தடம் பொய்கை என்ற தீர்த்த வடிவமாகவும் அவர் விளங்குகின்றார். இந்நிலவுலகத்தையும், விண்ணுலகத்தையும், மற்றும் சகல பிரம்மாண்டத்தைம் எல்லோரையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் திருவிளையாடல் புரிகின்றான் ஐயன். அந்தப் பெருமானின் புகழைப் பாடிக் கொண்டு, கைகளில் உள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் உள்ள மேகலை ஒலி துள்ளவும், மலர்கள் சூடிய கூந்தலில் மேல் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், தாமரை பூத்த இப்பொய்கை நீரைக் குடைந்து நமக்குரிய தலைவனது பொன் போன்ற திருவடிகளை துதித்து பெரிய சுணை நீரில் நாம் மார்கழி நீராடுவோமாக!


No comments:

Post a Comment