Saturday, October 1, 2011

navarathiri fourth day (01-10-2011) valipadu

அம்பிகையை நாளை வைஷ்ணவியாக வழிபட வேண்டும் : சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களுடன், கருட வாகனத்தில் அமர்ந்தது போல அலங்கரிக்க வேண்டும். கோபியர்களை தன் மீது மோகம் கொள்ளச் செய்த கிருஷ்ணரின் வடிவம்தான் வைஷ்ணவியாகும். நவராத்திரி நான்காம் நாளில் மதுரை மீனாட்சியம்மன் மேருவைச் செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் பாண்டியநாட்டில் நல்லாட்சி நடத்தினர். அவர்களின் மகன் உக்கிரபாண்டியனுக்கு, காந்திமதி என்னும் பெண்ணரசியை மணம் செய்து வைத்தனர். அவனை மன்னனாக்கி அரியணையில் அமர்த்தினர். ஒருசமயம், பாண்டிய நாட்டில் மழைவளம் குறைந்து பஞ்சம் உண்டானது. நல்வழி காட்டும்படி சுந்தரேஸ்வரரை அவன் வழிபட்டான். அன்றிரவு இறைவன் கனவில் தோன்றி, ""உக்கிரபாண்டியனே! நாளை மேருமலைக்குப் புறப்படு. அதன் செருக்கை அடக்க உன்னிடமிருக்கும் செண்டால் அடி. அங்குள்ள குகையில் இருக்கும் தங்கத்தில் வேண்டிய அளவு எடுத்துக் கொள். குகையை மூடிவிட்டு, மீன் சின்னத்தைப் பொறித்துவிடு, என்று அருள்புரிந்தார்.

உக்கிரபாண்டியனும், மேருமலையை சென்றடைந்தான். அதன், உச்சியை செண்டால் அடித்தான். அலறிய மலை, மனித உருவெடுத்து ஓடி வந்தது. பாண்டியன் வருகைக்கான காரணத்தை அறிந்து, பொன் குவிந்திருக்கும் குகையைக் காட்டியது. தேவையான பொன்னை எடுத்துக் கொண்டு, மீன்சின்னத்தை பொறித்தான். நாடு திரும்பி, மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தான். நாட்டில் மழை பொழிந்து வளமும் கொழித்தது. உக்கிரபாண்டியனின் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்த நிகழ்வின் அடிப்படையில் மீனாட்சியம்மன் நாளை, மேருவை செண்டால் அடித்த கோலத்தில் காட்சி தருகிறாள். இதனை தரிசித்தவர்கள் பொன் பொருளோடு நல்வாழ்வு வாழ்வர்.

நாளைய நைவேத்யம்: புளியோதரை

பாட வேண்டிய பாடல்: அறம்பல புரிந்த
காமாட்சி அருளை அளிப்பாய் மீனாட்சி
ஆடலில் வல்ல அபிராமி
ஆனந்த தாண்டவ சிவகாமி
தாயாய் அருளும் தயாபரியே
தமியேனைக் காக்க வந்தருள்வாய்
சேயாய் உன்முன் வேண்டி நின்றோம்
‌ஷேமம் தர வேணும் அம்மா!

No comments:

Post a Comment