Tuesday, October 25, 2011

childrens songs

அறிவு தரும் ஆனந்தம்: குழந்தைப் பாடல் !

உலகே உலகே காது கொடு

ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு

மனமே மனமே பாடுபடு – படிப்பால்

வாழ்வை வென்று எடு;



படிக்கப் படிக்க வளர்ந்துவிடு

எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு

ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்

கண்ணைத் திறந்தே யொழித்துவிடு;



படிப்பு கொடுக்கும் தைரியத்தில்

பட்டம் சுமந்துக் காட்டிவிடு

படிப்பால் நாளை உலகத்தின்

பசுமைப் போற்ற முயற்சி யெடு;



சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்

வீடு போனால் போனதுதான்

படித்து உழைத்துப் பெற்றக் கல்வி

ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே;



மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை

கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –

என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்

எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே;



பாடம் சுமக்கும் மாணவரே

காலம் சுமக்க வாழ்பவரே

உடம்பை சுமக்கும் நத்தைப்போல்

எம் தேசம் சுமந்து நடப்பவரே;



உறங்கா கடலின் அலைபோலே

உழைத்து உயரும் மழலைகளே

விரிந்த வானக் குடைபோலே

மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே;



மாறும் மாறும் உலகமெலாம்

மாற்றிப் போடப் படித்திடுவோம்

மாறுதல் காணும் ஒருதினத்தில்

நல்லோர் வாழக் கற்றிடுவோம்!

- வித்யாசாகர்

No comments:

Post a Comment