Tuesday, July 12, 2011

அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் ஆனி தேரோட்டம்

நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மாள் கோவில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தேறியது.

இக்கோவிலில் ஆனி பெருத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் சுவாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதானை நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் தேரில் எழுத்தருளில் நடந்தது. இதை தொடர்ந்து வேத மந்திரங்கள் முழுங்க விநாயகர் தேரும், அதை தொடர்ந்து சுப்பிரமணியர் தேரும், சண்டிகேஸ்வரி தேரும் இழுக்கப்பட்டது. பிரதான பெருந்தேரான நெல்லையப்பர் தேர் இன்று காலை 8 மணிக்கு இழுக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரி ரமண சரஸ்வதி தலைமையில் சுவாமி சங்கரனாந்தா, ராமசுப்பு எம்பி, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

கூடியிருந்த பக்தர்கள் ஓம் நமச்சிவாய, நெல்லையப்பர் புகழ் ஓங்குக என்று கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். வழக்கத்தை விட இன்று வேகமாக நகர்ந்தது. காலை 9 மணிக்குள்ளாக திருத்தேர் வாகையடி முனையை தாண்டியது. நெல்லையப்பர் தேரை தொடர்ந்து காந்திமதியம்மன் தேர் இழுக்கப்பட்டது.

4 ரத வீதிகளிலும், ஏராளமான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களுக்கு கோவில் பூசாரிகள் அபிஷேகம் வழங்கி வந்தனர். பஜனை குழுவினர் பஜனை பாடி சென்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு 4 ரத வீதிகளிலும் சுழலும் கேமரா பொருத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment