Friday, December 17, 2010

நெல்லையப்பா!!!!...இது நெல்லையப்பா.

அம்மையப்பனை பாத்துட்டு வரலாமுன்னு, சாயந்திரம் கிளம்பினோம். சாயந்திரம் நாலுமணிக்கு மேல்தான் நடை திறக்குமுன்னு கிடைச்ச தகவலை உறுதிப்படுத்திக்கிட்டேன்.வரவேற்கிறதுக்கும், பாதுகாப்பு கொடுக்கிறதுக்கும்,காலையில் வழி நெடுக நின்ன காவல்துறையை இப்போ காணோம்.ஜனவரி 26-குடியரசு தினத்துக்கு,வ.உ.சி. மைதானத்தில், கொடியேத்த வந்த வி.ஐ.பி.க்காகவாம் அது.

B.S.N.L. முன்னாடி,ஆரம்பிச்சு, ராஜா மருத்துவமனை வரை,மதுரை ரோட்டில் மேம்பாலம் கட்டுறாங்களாம்.போக்குவரத்தையெல்லாம், தலையைச்சுத்தி வர்ற மாதிரி திருப்பி விட்டிருக்காங்க.பாலம் செயல்பட துவங்கியாச்சுன்னா, அந்த ரவுண்டானாவில் நெரிசல் குறையுமாம். நல்லதுதான். இப்போதைக்கு, பாலச்சுவர்களும்,தூண்களும் போஸ்டர் ஒட்டவும், மக்களை அழைக்கவும் பயன்படுது.

கோவிலினுள் நுழைந்ததும், நந்தியும் ,கொடிமரமும். நல்ல பெரிய மாக்காளை. கடல்சிப்பி, சுண்ணாம்பு இவற்றால் ஆனவராம்.நந்திகிட்ட உத்தரவு வாங்கிகிட்டு, நெல்லையப்பா... இதோ வந்துட்டேன்னு, முன்னாடி போய் நின்னேன். 'இந்தப்பக்கம் வாங்கோ'ன்னு கூப்பிட்டு, நமக்கு இடதுபுறம் இருக்கும்புள்ளையாரை தரிசனம் பண்ணி வெச்சார் அர்ச்சகர்.வெச்ச கண்ணு எடுக்க முடியலை. விஸ்வரூபம் எடுத்தமாதிரியான பெரிய சிலாபிம்பம்.ஒன்பது அடி உயரமாம்.

கருவறைக்குள் அழகான எளிமையான அலங்காரத்தில் நெல்லையப்பர். அர்த்த மண்டபத்துக்குள் போய் இன்னும் கிட்டக்க தரிசிக்கலாம், நுழைவுக்கட்டணம் வெறும் மூணே ரூபாய்தான்.வெளியே வந்தா உள்பிரகாரத்தில்,இடது பக்கம் ஒரு சின்ன பள்ளத்துக்குள் இருக்கிற மாதிரி ஆதிலிங்கம்.இவருக்குத்தான் முதலில் பூஜைகள் நடந்தது என்று கேள்வி. தெரிஞ்சவுங்க சொல்லுங்க...விஷ்ணு இங்கே பள்ளி கொண்ட திருக்கோலத்தில், கோவிந்தப்பெருமாள் என்ற திரு நாமத்துடன் காட்சி கொடுக்கிறார்.மச்சானும்,மாப்பிள்ளையும் ஒருத்தருக்கொருத்தர் பேச்சுத்துணைக்கு ஆச்சு.தங்க்ஸ்கள் பக்கத்தில் இல்லையே.ஒருத்தர் தனிக்கோவிலில் இருக்கார்.இன்னொருத்தர் கஜலஷ்மியா வடக்குப்பிரகாரத்தில் இருக்கார்.

இரண்டாம் பிரகாரத்தில், அறுபத்து மூவர்,வரிசையா இருக்கிறாங்க.அவங்களுக்கு இடதுபக்கத்துல 'சுரதேவர்' இருக்கார். யாருக்காவது காய்ச்சல் வந்தா அவருக்கு வேண்டிகிட்டா சரியாப்போயிடும்ன்னு ஒரு நம்பிக்கை.நாகர்கோவிலின் அருகே, தடிமார் கோவில்ன்னு பேச்சு வழக்கில் சொல்லப்படும் தழுவிய மகாதேவர் கோவிலில்,சாமிக்கு சுக்கும், மிளகும் அரைத்துப்பூசும் வழக்கம் உண்டுன்னு கேள்வி. சப்தமாதர்களான பிராமி,மாஹேஸ்வரி, கௌமாரி,வைஷ்ணவி,வாராஹி, இந்த்ராணி,சாமுண்டி எல்லோரும் வரிசையா இருக்காங்க.மறுபடியும், சீதையை கிட்நாப் செய்யக்கூடாதுன்னும், ஏற்கனவே செஞ்சதுக்கு தண்டனையாவும், ராவணனை ஜெயில்ல போட்டு வெச்சிருக்கு. அவருக்கு மேலே இருக்கும் சன்னிதியிலிருந்து, சோமாஸ்கந்தர் கண்காணிச்சிட்டிருக்கிறார். (வார்டர் உத்தியோகம் கொடுத்துட்டாங்களே...)

கந்தரை கும்பிட்டுகிட்டு, லேசா வலதுபக்கம் திரும்பினா... தாமிரசபை!!!.தீபத்தையே நடராஜரா நினைச்சு கும்பிடணும். நடராஜரின் தரிசனமும் உண்டு. சபையின் வடக்குப்பக்கம் சந்தன நடராஜர் இடதுபாதம் தூக்கி ஆடும் தரிசனம் கொடுக்கிறார்.சந்தனக்காப்பினூடே மெல்லிய மீசை தெரியுதாம்..யாத்திரிகர்கள் கூட்டம் ஒன்னு கண்டுபிடிச்சு பரவசப்பட்டுகிட்டாங்க. என்ன இருந்தாலும் மீசைக்காரன்னா அது பார்த்தசாரதி மட்டும்தான்னு ஒருத்தர் கட்சி சேக்க ஆரம்பிச்சார்.ஸ்தலவிருஷமான மூங்கிலில் ஏராளமான தொட்டில் பிரார்த்தனைகள்.சனீஸ்வரனை கண்டுகிட்டு, வலது பக்கம் மண்டபத்தில் இருக்கும் சகஸ்ரலிங்கத்தையும் தரிசிச்சிட்டு முன்புறம் வந்தோம்.

பிரதோஷ காலத்து சிவதரிசனத்தை ஓவியமா வரைஞ்சு வெச்சிருக்காங்க. நந்தியின் கொம்புகளுக்கு நடுவே நின்றாடும் பெருமான்.அழகா இருக்கு..வலதுபக்கம் திரும்பி நடந்தா முன்மண்டபத்துக்கு இடதுபக்கம் குபேரலிங்கம். பெயருக்கு ஏத்தமாதிரி, நகைகளுக்கு நடுவே இருக்கார். ஜொலிக்குதே...ஜொலி..ஜொலிக்குதேன்னு பாடலாம்.முன்மண்டபத்தின் சங்கீத கல்தூண்களை வெளிமாநில பக்தர்கூட்டம் ஒன்றுக்கு, ஒருத்தர் தட்டிக்காண்பித்து , விளக்கிச்சொல்லிக்கிட்டிருக்கார்.


இங்கே கோவிலில் ,கைடுன்னு யாரும் இருக்கிறதா தெரியல்லை..(சுசீந்திரம் கோவிலில் உண்டு)வெளியூர் பக்தர்களுக்கு, நம்ம கோவிலைப்பத்தி தெரிய வேணுமில்லையா.. ஏதாவது ஏற்பாடு இருந்தா நல்லா இருக்கும்.கோவிலைப்பத்தி சொல்லுங்கன்னதும்,உற்சாகமாகிட்டார். இது 1300 வருடம் பழமை வாய்ந்ததாம். மொத்தம் 14 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம் .கோவில் உருவான கதை வழக்கம் போலவே... ராமக்கோனார் அரசருக்கு பால் கொண்டு போறார்... கால்தடுக்கி பால்சிந்துது... தினமும் இது நடப்பதால் நம்பிக்கை இல்லாத அரசர்,நேரில் பார்வையிட வர்றார்.காலை இடறும் மூங்கிலை வெட்டுறார்.... ரத்தம் பீறிட்டு வருது... தோண்டிப்பாத்தா, ஒரு சிவலிங்கம் தலையில் வெட்டுப்பட்ட நிலையில் இருக்குது.கோவில் கட்டி கும்பிடுறாங்க. இத்யாதி.. இத்யாதி..

அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில், இந்த கதைகளை வரைஞ்சு வெச்சிருக்காங்க. பாக்க தவறிடாதீங்கன்னார். என் கவனம் முன்மண்டபத்துக்கு வலதுபக்கம் இருக்கிற ஒரு சிற்பத்துக்கு போச்சு..யானை மேலே உக்காந்து ஸ்ரீ சேரமான் திருக்கயிலாயத்துக்கு போகும் காட்சி.பட்டத்தரசியும் பக்கத்துல இருக்காங்க. முன்மண்டபத்தின் விதானத்துல இருக்கும் பூவேலைப்பாடு பிரம்மாதம். நாலாபுறமும் தாங்கும் யானைகள் கொள்ளை அழகு. அவற்றின் மேல் இருக்கும் நகைகளில் கூட நுணுக்கமான வேலைப்பாடுகள்.


சாமி கும்பிட்டுவிட்டு வந்த கூட்டம் ஒன்னு,போட்டோ எடுத்துட்டிருந்த என்னை காமெடிபீஸ் போல் பார்த்து விட்டு சென்றது. 'யாரும்மா இது'ன்னு கேட்ட சின்னப்பொண்ணு ஒன்னுக்கு, 'யாரோ...டி.வி. ரிப்போர்ட்டர் போலிருக்கு'ன்னு அவுங்கம்மா சொன்னதை வெச்சு, இன்னும் வீட்ல என்னை, வாரிக்கிட்டிருக்காங்க.

வெளிப்பிரகாரத்தில் இருந்துதான் காந்திமதி அம்மனை பார்க்கப்போகும் வழி பிரிகிறது. இரண்டு கோவில்களும் தனித்தனியே இருந்தாலும் இந்த கல்மண்டபம்தான் ரெண்டையும் இணைக்குது.பிரகாரத்திலேயே கோசாலை ஒன்னு இருக்குது. ஒரேஒரு பசுவும் கன்னும் இருக்குது.அங்கங்கே சுற்றுப்புற சூழலின் தூய்மையை வலியுறுத்தி,போர்டுகள். த்மிழ்நாடு மாசு கட்டுப்பாட்டுத்துறை மக்காத பிளாஸ்டிக்குகளை கோவிலில் தவிர்க்கச்சொல்லி கேட்டுக்கிறாங்க. நல்ல ஐடியா..மக்கள் ஒன்னு கூடும் இடத்தில் பிரச்சாரம் செஞ்சா, அட்லீஸ்ட் இளைய தலைமுறையாவது யோசிக்க ஆரம்பிக்குமே.!!!

துவாரபாலகர்கள் நல்ல கம்பீரம். சிற்பக்கலையோட சிறப்பு, உச்சத்தில இருந்த கால கட்டத்தில செஞ்சிருப்பாங்களோ என்னவோ!!! உயிரோட ஒரு ஆள் நிக்கிற மாதிரியே இருக்கு. கால் நகமெல்லாம் வழவழன்னு ... நல்லாப்பாத்தா பச்சை நரம்பு கூட தெரியும்போலிருக்கு.

அம்மாவை பாத்துட்டு வந்துடலாம்ன்னு திரும்பினா காத்து வாக்கில ஒரு செய்தி... அங்கங்க ஆட்கள் பரபரப்பா இருக்காங்க.. தங்கத்தேர் ஊர்வலம் வரபோகுதாம்... இப்பத்தான் புதுசா செஞ்சதுன்னு கேள்வி... அடிச்சது லக்கிப்ரைஸ்ன்னு இடம் பாத்து உக்காந்துகிட்டோம்.அரைமணி... கால்மணின்னு சொல்லி நேரம் ஆகிட்டிருக்கு. திரை போட்டு வெச்சு, அலங்காரம் நடக்குது. உற்சவர் வந்தாச்சு.லேசா திரை விலகுனபோது ஒரு சூரியஒளிக்கீற்று வந்து விலகுன மாதிரி, தங்கத்தேர் தகதகன்னு கண்ணைப்பறிக்குது.இரண்டுமாசம் முன்னாடிதான் வெள்ளோட்டம் நடந்திருக்கு.

தேரோட்டத்தை, போட்டோ எடுக்க கொடுத்து வைக்கலை. ஏழுமணின்னு சொல்லி எட்டேகால் ஆகியும் அலங்காரமே ஆரம்பித்த பாடில்லை.அதற்கு மேல் காத்திருக்க முடியாம கிளம்பிட்டோம். குடுப்பினை இருந்தா இன்னொருவாட்டி சந்தர்ப்பம் கிடைக்காமலா போயிடும்!!! எல்லோருக்காகவும் வேண்டிகிட்டேன்.தங்கத்தேருக்காக, கூகிளாண்டவரிடம் பிரார்த்தனை செஞ்சதில், பெரிய மனசு பண்ணி ஒரு படம் கொடுத்தார்.

இன்னிக்கு நடை சாத்துற நேரம் ஆகிட்டுது. அம்மாவை இன்னொரு நாள் வந்து பாக்கிறதா சொல்லிட்டு,வீடு வந்தோம்.

Thanks
Amaithicchaaral

No comments:

Post a Comment