Showing posts with label நெல்லையப்பர் கோயில். Show all posts
Showing posts with label நெல்லையப்பர் கோயில். Show all posts

Wednesday, February 1, 2012

நெல்லையப்பர் கோயிலில் இன்று நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்!

நெல்லை: திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருவிளையாடல் காட்சி நெல்லையப்பர் கோயிலில் இன்று (1ம் தேதி) நடக்கிறது.

நெல்லையப்பர் கோயிலில் தைப்பூசத்திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. திருவிழாவின் 4வது நாளான இன்று (1ம் தேதி) திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாக அமைந்த நெல்லுக்கு இறைவன் வேலியிட்ட திருநாள் கொண்டாடப்படுகிறது. முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார்.

சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தது. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது.

இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார்.

மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி என பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. திருநெல்வேலி எனப் பெயர் வரக் காரணமாக அமைந்த விழா நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழாவின் 4வது நாள் இந்த நிகழ்ச்சி நெல்லுக்கு வேலியிட்ட திருநாளாக கொண்டாடப்படுகிறது.